நிரல்
ஜூலை 25 23:27

சம்பந்தன் உரையாற்றியபோது எவருமே சபையில் இருக்கவில்லை

(மட்டக்களப்பு, ஈழம்) இனப்பிரச்சினைத் தீர்வு உள்ளிட்ட புதிய அரசியல் யாப்பை உடனடியாகக் கொண்டுவர வேண்டுமென வலியுறுத்தியும் சர்வதேச நாடுகளுக்கு மைத்திரி- ரணில் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு கோரியும் இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சமர்ப்பித்த சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை மீதான விவாதம் இடம்பெற்றபோது, சபையில் மூன்று உறுப்பினர்கள் மாத்திரமே இருந்ததாக நாடாளுமன்றச் செய்தியாளர்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தனர். இன்று வியாழக்கிழமை முற்பகல் 11.45க்கு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பிரேரணையைச் சமர்ப்பித்து சுமார் 72 நிமிடங்கள் உரையாற்றினார். ஆனால் சபையில் அரசாங்கத் தரப்பில் அமைச்சர்கள் உள்ளிட்ட எந்தவொரு உறுப்பினர்களும் இருக்கவேயில்லை.
ஜூலை 25 21:51

பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படுமா? புதிய வரைபு தயார்

(வவுனியா, ஈழம்) ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் செயற்படும் ஜெனீவா மனித உரிமைச் சபையின் அழுத்தங்களின் பின்னரான சூழலில் இலங்கை ஒற்றையாட்சி அரசின் அரசியல் யாப்பில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக வேறு புதிய சட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டுமென்றே அழுத்தம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் புதிய விதிகள் அடங்கிய ஆரம்ப நகல் சட்டமூலம் அமைச்சரவையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் புதன்கிழமை சமர்ப்பிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதம் நடத்தப்படுமென ஐக்கிய தேசியக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன. முழுமையான வரைபு விரைவில் பூர்த்தியாகுமென பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஜூலை 25 15:08

ஐ.நா நிபுணர் சந்திப்பு- செயலாளரைப் பதவி நீக்குமாறு மைத்திரி உத்தரவு

(மட்டக்களப்பு, ஈழம்) கொழும்புக்கு வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையிடும் நிபுணர் கிளெமென்ற் நயாலெட்சோசி வூல், (Clement Nyaletsossi Voule) இலங்கையின் உயர் நீதிமன்ற நீதியரசர், ஜயந்த ஜயசூரிய, நீதியமைச்சர் தலதா அத்துக்கோரள ஆகியோரை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்த வெளிவிவகார அமைச்சின் மேலதிகச் செயலாளர் அகமட் ஜவாத் பதவியில் இருந்து நீக்கப்படவுள்ளார். உடனடியாக மேலதிக் செயலாளர் பதவியில் இருந்து விலக்குமாறு வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. நீதித்துறை நீதியரசர்களைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டுமென இலங்கை நாடாளுமன்றச் சபாநாயகர் கரு ஜயசூரிய நேற்றுப் புதன்கிழமை உத்தரவிட்டிருந்தார்.
ஜூலை 24 23:24

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட மகனைத் தேடி அலைந்த மற்றுமொரு தாயார் முல்லைத்தீவில் உயிரிழப்பு

(முல்லைத்தீவு, ஈழம்) இலங்கையில் மூன்று தசாப்த காலமாக இடம்பெற்ற போர் முடிவுக்கு வந்து 10 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், போரின் இறுதி நாட்களில் அரச படையினரிடம் சரணடைந்த ஒப்படைக்கப்பட்ட மற்றும் கைதுசெய்யப்பட்ட நிலையிலும் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வு காணப்படாத நிலையில் இலங்கைக் கடற்படையினரிடம் கையளிக்கப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டுள்ள தனது மகனைத் தேடி அலைந்த மற்றுமொரு தாயார் உயிரிழந்துள்ளார். கடந்த 1 வருடத்துக்கும் மேலாக முன்னெடுக்கப்பட்டுவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரைக் கண்டறியும் போராட்டத்தில் பங்கேற்று வந்த முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு இரணைப்பாலையைச் சேர்ந்த செபமாலைமுத்து திரேசம்மா என்பவரே மாரடைப்புக் காணமாக இன்று புதன்கிழமை உயிரிழந்துள்ளார்.
ஜூலை 24 23:02

நீதியரசர் உள்ளிட்ட அதிகாரிகளை ஐ.நா பிரதிநிதி சந்திக்கத் தடை - சபாநாயகர் உத்தரவு

(வவுனியா, ஈழம்) மக்கள் சுதந்திரமாக ஒன்று கூடுவதற்கான உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையிடும் நிபுணர் கிளெமென்ற் நயாலெட்சோசி வூல் (Clément Nyaletsossi Voule) இலங்கைக்கு பயணம் செய்துள்ளமை தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கையின் உயர் நீதிமன்ற நீதியரசர் ஜயசுந்தர ஜயசூரிய, நீதியமைச்சர் தலதா அத்துக்கோரள மற்றும் நீதியமைச்சின் உயர் அதிகாரிகளைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை நிறுத்துமாறு சாபாநாயகர் கரு ஜயசூரிய இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் உத்தரவிட்டுள்ளார். இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கிளெமென்ற் நயாலெட்சோசி வூல் கொழும்புக்கு வருகை தந்தமை தொடர்பாக நாடாளுமன்றத்தில் இரண்டு நாட்களாக சர்ச்சை ஏற்பட்டிருந்தது.
ஜூலை 24 13:40

மகிந்தவை தேடிச் சென்று சந்தித்தார் அமெரிக்கத் தூதுவர்

(வவுனியா, ஈழம்) இலங்கையோடு அமெரிக்கா "சோபா" எனப்படும் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றைச் செய்வதற்கு கொழும்பில் கடும் எதிர்ப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் எதிர்ப்பு வெளியிடும் தரப்புகளைச் சந்தித்து வருகின்றார். மகிந்த ராஜபக்ச நேரடியாக எதிர்ப்பு வெளியிடவில்லை. ஆனால் அவரை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மூத்த உறுப்பினர்களும் அவருக்கு ஆதரவான விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி உறுப்பினர்களும் கடும் எதிர்ப்புகளை வெளியிடுகின்றனர். இந்த நிலையில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை கொழும்பில் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்த அமெரிக்கத் தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் சோபா உள்ளிட்ட சமகால அரசியல் நிலைமைகள் குறித்துக் கலந்துரையாடியுள்ளார்.
ஜூலை 23 14:56

சிற்றூழியர் நியமனங்களில் சிங்களப் பகுதிகளைவிட வடமாகாணத்துக்குப் புதிய விதிகள்

(கிளிநொச்சி. ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் உள்ளூராட்சி சபைகளுக்குரிய ஆட்சேர்ப்பு முறைகளில் வடமாகாணத்திற்கு அநீதி இழைக்கப்படுவதாகக் குற்றம் சுமத்தி கிளிநொச்சி - கரைச்சிப் பிரதேச சபையின் முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. சுகாதாரசேவை சிற்றூழியர் நியமனங்களில் கொழும்பிலும் ஏனைய சிங்களப் பிரதேசங்களிலும் உள்ள நடைமுறைகள் வடமாகாணத்தில் பின்பற்றப்படவில்லையென போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியுள்ளனர். வடமாகாண அரச பொது ஊழியர் சங்கம் இந்தத் தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. பிரதேச சபையின் சுகாதார ஊழியர்களுக்கான ஆட்சேர்ப்புத் தொடர்பாக கொழும்பில் உள்ள உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்று நிருபத்தில் க.பொ.த சாதாரண தரத்தில் சித்தியடைந்திருக்க வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது.
ஜூலை 23 13:07

தேவதாசன் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தினார்

(வவுனியா, ஈழம்) கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் இன்று ஒன்பதாவது நாளாக நீராகாரம் கூட அருந்தாது உண்ணாவிரதமிருந்த 63 வயதான கனகசபை தேவதாசன் போராட்டத்தை நிறைவு செய்துள்ளார். அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இன்று செவ்வாய்க்கிழமை சிறைச்சாலைக்குச் சென்று வழங்கிய உறுதிமொழியையடுத்து தேவதாசன் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டதாக சக கைதிகள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தனர். இலங்கையில் உள்ள அனைத்துச் சிறைச்சாலைகளிலும் தடுப்பு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டிய அவசியம் தொடர்பாக அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் கூறினார்.
ஜூலை 22 23:21

ஜனாதிபதித் தேர்தல் டிசம்பர் ஏழாம் திகதி- சுயாதீனத் தேர்தல் ஆணைக்குழு

(மட்டக்களப்பு, ஈழம்) இலங்கை ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் டிசம்பர் மாதம் ஏழாம் திகதி நடைபெறுமென இலங்கை சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு இன்று திங்கட்கிழமை அறிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தலை மேலும் பிற்போடவோ அல்லது தனது பதவிக்காலம் தொடர்பாக இலங்கை உயர் நீதிமன்றத்திடம் விளக்கம் கேட்டு காலத்தைத் தாமதிக்கவோ மைத்திரிபால சிறிசேன முற்படமாட்டாரெனவும் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பரிய கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். இந்த ஆண்டு முடிவடைவதற்குள் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி வந்த இலங்கைச் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தற்போது ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதியை அறிவித்துள்ளது.
ஜூலை 22 22:45

கன்னியா பற்றிய தொல்லியல் வர்த்தமானி சட்டவலு அற்றது - சுமந்திரன்

ஆதாரமற்ற அடிப்படைகளில் கன்னியா தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருக்கிறது. அரசியலமைப்பின் தொல்பொருள் கட்டளைச் சட்டத்தின் 18 ஆம் பிரிவுக்கு அமைவாக தனியார் காணியையும் சுவீகரிக்கலாம் என்ற வாதத்தின் அடிப்படையில் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆகவே தொல்பொருள் திணைக்களமே தனியார் காணி என்பதை ஒத்துக்கொள்கின்றது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் வாதிட முயல்கிறார். தற்போது எழுந்துள்ள சர்ச்சையில் தலையிடுவதற்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கோ, நாடாளுமன்றச் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கோ சட்ட ரீதியான எந்தவிதமான அதிகாரங்களும் இல்லையெனவும் அவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் திங்களன்று தெரிவித்தார்.