நிரல்
ஜன. 21 13:59

நெடுங்குளத்தில் காணிகளைச் சுவீகரிக்க மக்கள் கடும் எதிர்ப்பு

(யாழ்ப்பாணம், ஈழம்) வடமாகாணம் யாழ்ப்பாணம்- கொழும்புத்துறை, நெடுங்குளம் பிரதேசத்தில் பொது மக்களின் காணிகளை இலங்கை ஒற்றையாட்சி அரசு சுவீகரிப்பதற்குப் பொதுமக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். நெடுங்குளம் பகுதியிலுள்ள காணிகளை சுவீகரிப்பதற்காக அளவீட்டுக்கு சென்ற யாழ்ப்பாண நில அளவைத் திணைக்கள அதிகாரிகளை மக்கள் அனுமதிக்கவில்லை. கொழும்பு நிர்வாகத்தின் உத்தரவில் யாழ்ப்பாணத்தில் உள்ள நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் குறித்த காணிகளை இன்று செவ்வாய்க்கிழமை அளவீடுச் செய்யச் சென்றதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர். அளவீடு செய்யவிடாமல் தடுத்தமையினால் அதிகாரிகளுடன் பெரும் சர்ச்சை ஏற்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர்.
ஜன. 20 23:50

ஜெனீவா தீா்மானத்தை ரத்துச் செய்ய இலங்கை அரசாங்கத்தின் விசேட குழு ஆராய்வு

(கிளிநொச்சி, ஈழம்) எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனீவா மனித உரிமைச் சபையில் இலங்கை தொடர்பான 30/1 பிரேரணையை ரத்துச் செய்வது தொடர்பாக இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக இலங்கை வெளியுறவு அமைச்சின் தகவல்கள் கூறுகின்றன. இலங்கை வெளியுறவு அமைச்சும் இலங்கைச் சட்டமா அதிபர் திணைக்களமும் இணைந்து ஜெனீவா அமர்வை எதிர்கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருவதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் அமைக்கப்பட்டுள்ள விசேட குழு இந்தக் கலந்துரையாடலில் ஈடுபட்டு வருவதாகவும் மனித உரிமைச் சபையின் அமர்வுக்கு முன்னர் ஜெனீவாவுக்குச் சென்று மனித உரிமைகள் ஆணையாளரைச் சந்திக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஜன. 20 23:27

மிருசுவில் படுகொலை- உறவினர்களிடம் விபரம் கோரிய அடையாளம் தெரியாத நபர்கள்

(வவுனியா, ஈழம்) வடமாகாணம் யாழ்ப்பாணம் யாழ். மிருசுவில் பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் வெள்ளை வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் விபரங்களைச் சேகரித்துச் சென்றுள்ளதாக கொழும்பில் உள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அச்சுறுத்தும் வகையில் விபரங்கள் சேகரிக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் தங்கள் முறைப்பாட்டில் கூறியுள்ளனர். யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் கடந்த 2000ஆம் ஆண்டு சிறுவர்கள் உட்பட எட்டுத் தமிழர்கள் இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
ஜன. 19 23:08

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு மரணச் சான்றிதழ்- உறவினர்கள் எதிர்ப்பு

(வவுனியா, ஈழம்) ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர அரசியல் தீர்வை சர்வதேச நாடுகளினால் மாத்திரமே பெற்றுத்தரமுடியுமென இலங்கைப் படையினரால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். போரின்போது காணாமல் போனவர்கள் இறந்துவிட்டதாக இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு வதிவிட இணைப்பாளர் ஹனா சிங்கரிடம் கூறியுள்ளமை தொடர்பாகக் கருத்து வெளியிட்டபோதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். வவுனியால் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்த உறவினர்கள், கடந்த எழு ஆண்டுகளாக தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
ஜன. 18 22:54

பூகோள ஒருங்கிணைப்பு மையத்தை ஸ்தாபித்தல் குறித்து கோட்டாபய ராஜபக்சவுடன் உரையாடல்

(வவுனியா, ஈழம்) கோட்டபாய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் முதன் முறையாக இந்தியாவுக்குப் பயணம் செய்திருந்த நிலையில், தற்போது இந்தியத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் (Ajit Doval) கொழும்பில் உள்ள இலங்கை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவைச் சந்தித்து உரையாடியுள்ளார். இன்று சனிக்கிழமை இடம்பெற்ற உரையாடலில் இலங்கைப் படையினருக்கு அவசியமான பாதுகாப்பு உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கு ஐம்பது மில்லியன் டொலர்களை வழங்குவதாக புதுடில்லியில் கோட்டாபய ராஜபக்சவிடம் இந்தியா உறுதியளித்திருந்து. அது தொடர்பாகப் பேசுவதற்காகவே இந்தியத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் கொழும்புக்கு வருகை தந்ததாக இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது.
ஜன. 18 16:49

ஈழத்து இசைக் கலைஞர்களைக் கௌரவிக்கும் இசைவிழா

(வவுனியா, ஈழம்) இலங்கைத் தலைநகர் கொழும்பு வெள்ளவத்தையில் உள்ள கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடாத்தும் இசை விழா எதிர்வரும் 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது. மூன்று நாட்களும் மாலை ஐந்து மணிக்கு ஆரம்பமாகி இரவு எட்டு மணி வரை விழா நடைபெறவுள்ளது. பிரபலமான ஈழத்துச் சங்கீதக் கலைஞர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ள இந்த நிகழ்வில் சிறப்பு விருதுகளும் வழங்கப்படவுள்ளன. முதல் நாள் அமர்வுக்கு தமிழ்ச் சங்கத் தலைவர் ஆ.குகமூர்த்தி தலைமை தாங்கவுள்ளார். சங்கத்தின் இலக்கியக் குழுச் செயலாளர் மு.சி.ஸ்ரீதயாளன் வரவேற்புரை நிகழ்த்துவார்.
ஜன. 17 23:13

சஜித் பிரேமதாச அணி ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகித் தனித்துப் போட்டியிடவுள்ளது.

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசில் அவ்வப்போது ஆட்சி அமைத்து வரும் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளினால் சஜித் பிரேமதாச தலைமையில் புதிய அரசியல் கூட்டணி ஒன்று உருவாக்கப்படவுள்ளதாக கொழும்பு அரசியல்த் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2022 ஆம் ஆண்டுவரை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை பதவி குறித்து எதுவுமே பேச வேண்டாமென்று ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார். கடந்த இரண்டு நாட்களாக கட்சியின் தலைமை தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சு நடத்தியிருந்தனர். ஆனாலும் எந்த இணக்கமும் ஏற்படவில்லை.
ஜன. 17 17:12

பொங்கு தமிழ் நிகழ்வின் 19 ஆம் ஆண்டு நிறைவு- யாழ் பல்கலைக்கழக வளாகத்தில்

(யாழ்ப்பாணம், ஈழம்) வடக்குக் கிழக்குத் தமிழ் மக்களின் எழுபது ஆண்டுகால அரசியல் போராட்டத்தை அங்கீகரிக்கும் பொங்கு தமிழ் நிகழ்வின் 19 வருட நிறைவு நிகழ்வு யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள பொங்கு தமிழ் நினைவுத் தூபிக்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இந்த நிகழ்வையடுத்து யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் தமிழ் மக்களின் பிரதான கோரிக்கைகளை முன்வைத்த பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது. ஈழத் தமிழ் மக்களின் சுதந்திர தாயகத்துக்கான அடிப்படை அபிலாசைகளையும் நியாயங்களையும் சர்வதேசத்துக்கு ஒரே குரலில் தமிழ் மக்கள் வெளிப்படுத்திய தளமாக பொங்கு தமிழ் நிகழ்வு அமைவதாகக் கூறப்பட்டுள்ளது.
ஜன. 16 22:02

குருநாகல் மருத்துவமனை வைத்தியர் ஷாபி மீது மீண்டும் விசாரணை

(வவுனியா, ஈழம்) இலங்கையில் ஏப்பிரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் ஆரம்பத்தில் இருந்து மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சென்ற நவம்பர் மாதம் 16 ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் சிங்களக் கடும்போக்கு அமைப்புகள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக விசாரணைகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடந்த மே மாதம் 25 ஆம் திகதி கைது செய்யப்பட்ட குருநாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவப் பிரிவு வைத்தியர் முகமட் ஷரபி சிஹாப்தீன் குற்றமற்றவர் என்று குருநாகல் நீதிமன்றத்தில் பொலிஸாரால் கூறப்பட்டுப் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
ஜன. 15 23:19

இனப்பிரச்சினைத் தீர்வு விவகாரம் இலங்கையின் மனித உரிமை மீறல் பிரச்சினையாக மாற்றப்படுகிறது

(யாழ்ப்பாணம், ஈழம்) ஈழத் தமிழ் மக்களின் எழுபது ஆண்டுகால அரசியல் போராட்டத்தை வெறுமனே இலங்கை மக்களின் மனித உரிமை மீறல் பிரச்சினையாகவும், இலங்கையின் ஜனநாயக உரிமைக்கான போராட்டமாகவும் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகள் மாற்றியமைத்து வருகின்றன. கோட்டாபய ராஜபக்ச சென்ற 19 ஆம் திகதி ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் அதாவது ராஜபக்ச குடும்பம் மீண்டும் அதிகாரத்துக்கு வந்த பின்னர் இவ்வாறான செயற்பாடுகளில் இந்த நாடுகள் தீவிரமாக ஈடுபடுகின்றன. கோட்டாபய ராஜபக்ச பதவியேற்று இரண்டு வாரங்களில் இந்தியா சென்றிருந்தபோது புதுடில்லியில் வைத்து ஈழத் தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான பேச்சுக்களைப் பேச வேண்டிய அவசியமேயில்லை என்று வெளிப்படையாகவே கூறியிருந்தார்.