செய்தி: நிரல்
ஒக். 27 21:48

அடுத்த நிதியாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தைச் சமர்ப்பிக்க ஏற்பாடு

(வவுனியா, ஈழம்) பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் அடுத்த நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் பதின் நான்காம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த நிதியாண்டுக்கான வரவுசெலவுத் திட்ட மதிப்பீட்டு அறிக்கையைச் சமர்ப்பிக்கவுள்ளார்.
ஒக். 26 22:08

ரணில் - மகிந்த அணி கூட்டு- ரவி, பிரசன்ன ரணதுங்க பேச்சு

(யாழ்ப்பாணம், ஈழம்) ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியான பின்னர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சிக்குள் முரண்பாடுகள் வலுவடைந்து வருகின்றன. டளஸ் அழகபெருமா தலைமையில் ஏற்கனவே பன்னிரெண்டு உறுப்பினர்கள் கொண்ட அணி பிரிந்து சென்று தேசிய சுதந்திர சபை ஒன்றை ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் மற்றுமொரு அணி பிரிந்து சென்று ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையவுள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒக். 25 21:24

அமெரிக்க உதவிகளை மேலும் அதிகரிக்க முடிவு

(வவுனியா, ஈழம்) அமெரிக்க திறைசேரியின் ஆசியாவுக்கான பிரதி உதவிச் செயலாளர் ரொபர்ட் கப்ரோத் கொழும்புக்கு அதிகாரபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். கொழும்புக்கு வருகை தந்த அவர் இன்று பல சந்திப்புக்களில் கலந்துகொண்டார். ரொபர்ட் கப்ரோத்தின் கொழும்புப் பயணம் தொடர்பாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள இலங்கைக்கு உதவிகள் வழங்கப்படுமென அமெரிக்கா எற்கனவே கூறியிருந்த நிலையில் இருவாரத்துக்குள் இரண்டு அமெரிக்க இராஜதந்திரிகள் கொழும்புக்கு வருகை தந்துள்ளனர்.
ஒக். 23 09:32

சுயாதீன ஆணைக் குழுக்களின் பதவிக்காலமும் நிறைவடையும்

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் இருபத்து இரண்டாவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் தற்போது செயற்படும் அனைத்துச் சுயாதீன ஆணைக் குழுக்களின் பதவிக்காலமும் நிறைவடையும் என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார். சபாநாயகர் அனுமதி வழங்கியதன் பின்னர், குறித்த திருத்தம் அமுலுக்கு வரும் என்று கூறிய அமைச்சர் புதிய ஆணையாளர்கள் நியமிக்கப்படும் வரை, தற்போதைய ஆணையாளர்கள் இடைக்கால ஆணையாளர்களாக செயல்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.
ஒக். 20 09:20

இலங்கைக்குத் தொடர்ந்து உதவியளிக்க அமெரிக்கா உறுதி

(வவுனியா, ஈழம்) சர்வதேச நாணய நிதியம் வழங்குகின்ற கடன் திட்டங்களுக்கு மேலதிகமாக அமெரிக்க நிதியுதவி இலங்கைக்கு நேரடியாகக் கிடைக்குமென தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியங்களுக்கான பிரதி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ தெரிவித்துள்ளார். அதிகாரபூர்வமாகக் கொழும்புக்கு வருகை தந்துள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை புதன்கிழமை மாலை சந்தித்தார். கொள்பிட்டி காலி முகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் சந்திப்பு சுமார் ஒரு மணிநேரமாக இடம்பெற்றதாக ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒக். 19 13:06

சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தமே செய்யப்படவில்லை என்று அரசாங்கம் மறுக்கும் நிலையிலும் நிதியுதவி செய்ய முடிவு

(வவுனியா, ஈழம்) இலங்கைத்தீவின் பொருளாதார நெருக்கடிகளுக்குத் தீர்வை முன்வைக்கக்கூடிய ஏற்பாடுகள், தொடர்பாகத் தொடர்ந்தும் கவனம் செலுத்துவதாக ஐ.எம்.எப்.எனப்படும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. கடன் மறு சீரமைப்புத் தொடர்பாக சீனா, இந்தியா, அமெரிக்கா போன்ற இலங்கைக்குக் கடன் வழங்கும் நாடுகளுடன் சர்வதேச நாணய நிதியம் தொடர்ச்சியாகப் பேச்சு நடத்தி வருகின்றது. இந்த நிலையில் இலங்கைத்தீவுப் பொருளாதாரத்தை மேம்படுத்த சர்வதேச நாணய நிதியம் எதிர் கொண்டுவரும் சவால்கள் குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா அரசாங்கத்துக்கு விளக்கம் அளித்துள்ளார்.
ஒக். 18 08:24

கொழும்பில் மாணவா்கள் போராட்டம்- பொலிஸார் பொதுமக்கள் வாய்த்தர்க்கம்

(வவுனியா, ஈழம்) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் அடக்கு முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பொலிஸாருக்கும் மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றினைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கியதால், பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. கொழும்பில் ஆர்ப்பாட்டத்தை நடத்த நீதிமன்றம் விதித்த தடையுத்தரவை பொலிஸார் மாணவர்களுக்கு வழங்கியபோதும், மாணவர்கள் அதனை எற்றுக்கொள்ளவில்லை.
ஒக். 17 10:38

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கொழும்பு ஐ.நா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்

(வவுனியா, ஈழம்) வடக்குக் கிழக்கில் இலங்கைப் படையினரால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கொழும்பில் திங்கட்கிழமை ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். குறிப்பாக இறுதிப் போரில் காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் சரணடைந்து காணாமல் போனவர்களின் உறவினர்களே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சர்வதேச நீதி கிடைக்க வேண்டுமெனவும் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென்றும் ஆர்ப்பாட்டக்கார்கள் கோசம் எழுப்பினர். சுலோக அட்டைகளையும் கைகளில் ஏந்தியிருந்தனர். சிங்கள ஆட்சியாளர்கள் எவருமே தமக்கு நீதி வழங்கமாட்டார்கள் என்றும், இலங்கை நீதித்துறையில் தமக்கு நம்பிக்கை இல்லையெனவும் உறவினர்கள் கோசம் எழுப்பினர்.
ஒக். 16 10:35

மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக மக்கள் போர்க்கொடி

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்களில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுனக் கட்சியின் ஒன்றாக எழுவோம் என்ற தொனிப்பொருளில் இரண்டாவது மாநாடு நாவலபிட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டனர். பெருமளவான பொதுமக்கள் நாவலப்பிட்டியில் ஒன்றுகூடி பதவியில் துரத்தப்பட்ட மக்கிந்த ராஜபக்சவுக்கு மக்கள் கூட்டங்களில் கலந்துகொள்ளத் தகுதியில்லை என மக்கள் குற்றம் சுமத்திக் கோசம் எழுப்பினர்.
ஒக். 14 10:11

கொழும்பில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் மீண்டும் பொலிஸ் பதிவு

(வவுனியா, ஈழம்) கொழும்பில் வாழும் வடக்குக் கிழக்குத் தமிழர்கள் தங்கள் விபரங்களை அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் பதிய வேண்டுமென விடுக்கப்பட்ட பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கைக்குக் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஈழத் தமிழர்கள் அதிகமாக வாழும் வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, கொள்பிட்டி பிரதேசங்களில் பொலிஸார் பாதுகாப்பு அமைச்சின் படிவங்களை கடந்த இரண்டு நாட்களாக விநியோகித்துள்ளனர். இது தொடர்பாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு மற்றும் தமிழ் அரசியல் பிரதிநிதிகளிடம் முறையிடப்பட்டுள்ளது.