செய்தி: நிரல்
மார்ச் 10 17:57

தேசிய பாதுகாப்பு துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக சரத் வீரசேகர நியமனம்

(வவுனியா, ஈழம்) பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை நீக்கம் செய்ய வேண்டும் என்றும் ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர அரசியல் தீர்வைக் காண வேண்டிய அவசியம் இல்லை எனவும் கூறி வருகின்ற முன்னாள் இராணுவ அதிகாரியும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர இலங்கைத் தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய பாதுகாப்புத் தொடர்பான மேற்பார்வைக் குழு ஒன்றை அமைக்க வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பாதுகாப்பு அமைச்சர், நீதி அமைச்சர் வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் இணைந்து அமைச்சரவையில் முன்வைத்த கூட்டுப் பிரேரணையின் அடிப்படையிலேயே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
மார்ச் 08 22:53

கொழும்பில் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர் போராட்டம்

(வவுனியா, ஈழம்) அரசாங்கத்தின் அடக்கு முறைகளுக்கு எதிராகப் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், புதன்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போதும் பொலிஸாருக்கும் மாணவர்களுக்கும் இடையே கடும் வாய்த்தர்க்கமும் மோதலும் ஏற்பட்டது. களனி பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டம் இன்று இரவு வரை தொடர்ந்ததால் பொலிஸார் மிகக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதனால் பல மாணவர்கள் பலர் சிதறி ஓடினர். வேறு பல மாணவர்கள் பொலிஸாருடன் நேருக்கு நேராக நின்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகம் செய்தனர்.
மார்ச் 07 09:42

ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானத்தை நிராகரிப்பதாக அறிவிப்பு

(வவுனியா, ஈழம்) ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை சபையில் கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான 51/1 தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ஹிமாலி அருணதிலக தெரிவித்துள்ளார். ஆனாலும் ஜெனீவா மனித உரிமைச் சபையுடன் இலங்கை தொடர்ந்து உரையாடும் என்றும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் (ICCPR) கீழ் இலங்கை தொடர்பான ஒவ்வொரு ஆண்டுக்குமான ஆறாவது காலகட்ட மீளாய்வு மார்ச் எட்டாம் ஒன்பதாம் திகதிகளில் ஜெனீவாவில் நடைபெறவுள்ளது.
மார்ச் 02 21:23

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்படுமா?

(வவுனியா, ஈழம்) வடக்குக் கிழக்கு உள்ளிட்ட இலங்கைத்தீவில் முந்நூற்று நாற்பது உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான திகதி தொடர்பாக நாளை வெள்ளிக்கிழமை இறுதி முடிவு அறிவிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழு கூடி இறுதி முடிவு எடுக்கும் என்றும், அதன் பின்னர் அரசாங்கம் அதிகாரபூர்வமாக அறிவிக்கும் எனவும் ஆணைக்குழு வட்டாரங்கள் கூறுகின்றன. உள்ளூராட்சி சபைத் தேர்தல் மார்ச் ஒன்பதாம் திகதி நடைபெறுமென தேர்தல் ஆணைக்குழு முன்னதாக கூறியிருந்தது. ஆனாலும் நிதி இல்லையென நிதியமைச்சின் செயலாளர் அறிவித்ததனால் தேர்தலை நடத்த முடியாதென தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்திற்கு அறிவிவித்திருந்து.
பெப். 28 09:17

மின் கட்டணம், வரி உயர்வுக்கு எதிராக வேலை நிறுத்தப் போராட்டம்

(வவுனியா, ஈழம்) மின்சாரக் கட்டணம் அறுபத்து ஆறு வீதத்தினால் உயர்வடைந்துள்ளமை, அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றமைக்கு மற்றும் வரி அதிகரிப்புக்கு எதிராக நாளை புதன்கிழமை கொழும்பில் அனைத்துத் தொழிற் சங்கங்களும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளன. அரச மற்றும் தனியார் வங்கிகள் தனியார் அரச மற்றும் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் நாளை மூடப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் போராட்டம் தொடர்பாகத் தொழிற்சங்க அமைப்புகள் ஊடகங்களில் பகிரங்க அறிவிப்பு வெளியிடவில்;லை.