செய்தி: நிரல்
பெப். 18 13:46

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் - ஆதரவு வழங்குமாறு கோரிக்கை

(கிளிநொச்சி, ஈழம்) தமிழர் தாயகப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு போரின் நிறைவின் பின்னரும் அதற்கு முற்பட்ட காலப்பகுதியிலும் வலிந்து கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டும் எவ்வித தீர்வும் கிடைக்காத நிலையில், 40 ஆவது ஐ.நா அமர்வு இந்த மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள நிலையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஒன்றுகூடி கிளிநொச்சியில் பாரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானித்துள்ளனர்.
பெப். 18 12:59

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, மாமுனை கடற்கரையை அண்மித்த பகுதியில் ஆயுதங்கிடங்கு - அகழ்வு ஆரம்பம்

(யாழ்ப்பாணம், ஈழம்) தமிழீழ விடுதலைப் புலிகள் கடந்த காலத்தில் நிலைகொண்டிருந்த யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று மாமுனை கடற்கரையை அண்மித்த பகுதியில் பாரிய ஆயுதங்கிடங்கு காணப்படுவதாக பளை பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்ததாக தெரிவித்து அப்பகுதி இலங்கைப் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினருடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன் அங்கு பாரிய தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று திங்கட்கிழமை காலை முதல் இயந்திரங்களின் உதவியுடன் ஆயுதங்களைத் தேடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூர்மையின் யாழ்ப்பாண செய்தியாளர் குறிப்பிட்டார்.
பெப். 18 11:10

நாடாளுமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்தத் திட்டம் - அனைத்துக் கட்சிகளின் சம்மதத்தைப் பெற முயற்சி

(யாழ்ப்பாணம், ஈழம் ) அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், இந்த ஆண்டின் இறுதியில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படலாம் என ஏலவே செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனாலும் மாகாண சபைத் தேர்தல்களை இந்த ஆண்டு யூன் மாதத்திற்கு முன்னர் நடத்த வேண்டிய தேவையுள்ளது. இதனால் ஜனாதிபதித் தேர்தல் பிற்போடப்படலாமென பிரதான அரசியல் கட்சிகளின் தகவல்கள் கூறியிருந்தன. எனினும் மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்றத் தேர்தலை நடத்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி முற்படுவதாக கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் கூறுகின்றன. தற்போதைய நாடாளுமன்றம் 2020 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் தனது பதவிக் காலத்தைப் பூர்த்தி செய்கின்றது.
பெப். 17 11:03

சர்வதேச விசாரணை மூலம் தமிழர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் - வடக்கு, கிழக்கில் கையெழுத்துப் போராட்டம் ஆரம்பம்

(முல்லைத்தீவு, ஈழம்) தமிழர் தாயகப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு போரின் நிறைவின் பின்னரும் அதற்கு முற்பட்ட காலப்பகுதியிலும் வலிந்து கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டோரை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைகள், படுகொலைகள், கடத்தல்கள், காணாமல் ஆக்கப்பட்டமை போன்றனவற்றுக்கு சர்வதேச விசாரணை நடத்தப்பட்டு உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, இரண்டு வருடங்களுக்கும் மேலாக தமிழர் தாயகத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கையெழுத்துப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
பெப். 17 09:59

கிளிநொச்சி மாவட்டத்தில் மீன்பிடி உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது - நீரியல்வளத் திணைக்களம் தகவல்

(கிளிநொச்சி, ஈழம்) தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் மற்றும் தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்கள மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கை காரணமாக தமது வாழ்வாதாரத் தொழிலான மீன்பிடி பாதிக்கப்படுவதாகவும், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கை காரணமாக கடல்வளம் அழியும் அபாயம் காணப்படுவதாகவும் தமிழ் மீனவர்கள் அச்சத்துடன் கவலை வெளியிட்டுவரும் நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தின் மீன்பிடி உற்பத்தி கடந்த 2017 ஆம் ஆண்டைவிட 2018 ஆம் ஆண்டில் வீழ்ச்சியடைந்துள்ளதாக நீரியல்வளத் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.