(யாழ்ப்பாணம், ஈழம்)
இலங்கைத் தீவில் தமிழ், முஸ்லிம் மக்களுக்குப் பாரிய அச்சுறுத்தலாக இருந்து, காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னொலிகொடவின் மனைவி சந்தியா எக்னொலிகொடவையும் அச்சுறுத்தி, நீதிமன்றத்தையும் அவமதித்த குற்றச்சாட்டில் ஆறு ஆண்டுகால கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த அத்தே ஞானசார தேரர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய பொது மன்னிப்பில் விடுதலையான ஞானசார தேரர், வெலிக்கடைச் சிறைச்சாலையில் பின்பக்க வாசலினால் வெளியேறியுள்ளார். தேரரை வரவேற்க கொழும்பு பொரளை பேஸ்லைன் வீதியில் உள்ள வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு முன்பாக பொதுபல சேனா உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், பௌத்தகுருமார் உள்ளிட்ட பலர் ஒன்று கூடி நின்றனர்.