செய்தி: நிரல்
ஜூன் 25 23:17

மாகாண சபைத் தேர்தல்? சட்டச் சிக்கல் என்கிறார் தேசப்பிரிய

(மட்டக்களப்பு, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தின் படி இந்த ஆண்டு யூன் மாதம் மாகாண சபைகளுக்காக தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனாலும் ஆண்டின் இறுதியில் கூட நடத்த வாய்ப்புள்ளது. எனினும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்தும் நோக்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இல்லையென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன. மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டும். இல்லையேல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் பெரும் சட்டச் சிக்கல் ஒன்றை அரசாங்கம் எதிர்கோக்க நேரிடுமென இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த சேப்பிரிய மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு ஏலவே கடிதம் எழுதியிருந்தார்.
ஜூன் 25 14:02

வென்னப்புவ பிரசேத்தில் முஸ்லிம்கள் வியாபாரம் செய்யத் தடை

(வவுனியா, ஈழம்) இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலையடுத்து முஸ்லிம் மக்கள் மீதான கெடுபிடிகள், அடக்குமுறைகள் அதிகரித்து வருவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களை, இலங்கை அரசாங்கம் மறுக்கின்றது. ஆனால் வெவ்வேறு மட்டங்களில் பல்வேறு விதமாக அடக்குமுறைகள் தொடருவதாக முஸ்லிம் அரசியல்வாதிகள் கூறுகின்றனர். இந்த நிலையில் வடமேல் மாகாணத்தில் உள்ள புத்தளம் மாவட்டம் வென்னப்புவ பிரதேச சபைக்கு உட்பட்ட தங்கொடுவ பகுதியில் இயங்கி வரும் வாராந்த சந்தையில் முஸ்லிம்கள் வியாபாரம் செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவித்தல் கடிதம் ஒன்று வென்னப்புவ பிரதேச சபை தலைவர் சுசந்த பெரேராவினால் நேற்றுத் திங்கட்கிழமை கையொப்பமிடப்பட்டு இன்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
ஜூன் 24 22:56

பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு மகிந்த தரப்பும் எதிர்ப்பு?

(மட்டக்களப்பு, ஈழம்) அமெரிக்காவுடன் செய்யப்படவுள்ள சோபா எனப்படும் பாதுகாப்பு ஒப்பந்தம் இலங்கை நாடாளுமன்றத்தில் பகிரங்கப்படுத்தப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளதை ஏற்க முடியாதென மகிந்த ராஜபக்ச தரப்பு உறுப்பினர் மகிந்த அமரவீர கூறியுள்ளார். இலங்கையின் இறைமைக்கும் ஒற்றையாட்சிக்கும் இந்தப் பாதுகாப்பு ஒப்பந்தம் ஆபத்தானதென்றும் மகிந்த அமரவீர கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். அமெரிக்காவுடன் செய்யவுள்ள ஒப்பந்தத்தை எதிர்க்கவுள்ள அனைத்துத் தரப்புடனும் கைகோர்த்துச் செயற்படத் தயாராகவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய இரு கட்சிகளும் இந்த ஒப்பந்தத்தை எதிர்க்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜூன் 24 10:17

இந்திய- இலங்கை புலனாய்வுத் துறையின் இணைந்த செயற்பாடுகள்

(மட்டக்களப்பு, ஈழம்) இலங்கைக்கு வந்து சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கொழும்பில் தங்கியிருந்த நான்கு மணி நேரத்தில் பல்வேறு தரப்பினரையும் சந்தித்த நிலையில், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்களைச் சந்திக்கவில்லையென்ற குற்றச் சாட்டுக்கள் எழுந்தன. நரேந்திர மோடியிடம் இயல்பாகவே முஸ்லிம் எதிர்ப்பு உள்ளதென்ற கருத்தின் அடிப்படையில், உயிர்த்த ஞாயிற்றுத் தாக்குதலின் பின்னரான சூழலில் உளரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம் மக்கள் சந்தேகிக்கின்றனர். இவ்வாறானதொரு நிலையில் ஐ.எஸ் அடிப்படைவாதிகளின் பயங்கரத் தாக்குதல் நடவடிக்கைகளை ஒழிப்பதற்காக இந்தியப் புலனாய்வுடன் சேர்த்து செயற்பட்டு வருவாக இலங்கை இராணுவத் தளபதி ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்கா கூறியுள்ளார்.
ஜூன் 22 22:27

உண்ணாவிரதத்தைக் கைவிட்ட பிக்கு மீண்டும் போராட்டம்

(அம்பாறை, ஈழம்) போர்க்காலத்தில் இலங்கை இராணுவப் புலானாய்வோடு சேர்ந்து இயங்கிய பொதுபலசேனவின் செயலாளர் அத்தே ஞானசார தேரரின் உறுதிமொழிக்கு அமைவாக கல்முனையில் இடம்பெற்ற உண்ணாவிரதப் போராட்டம் இன்று சனிக்கிழமை தற்காலிகமாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. அம்பாறை, கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை முழுமையான நிர்வாக அதிகாரமுள்ள பிரதேசச் செயலகமாகத் தரமுயர்த்துமாறு வலியுறுத்தி பௌத்த தேரர்கள், மாநகர சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் ஒரு மாதத்துக்குள் தரமுயர்த்தப்படும் என ஞானசார தேரர் உறுதிமொழி வழங்கினார். ஆனாலும் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன், நீரை மட்டும் அருந்தி தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.