(அம்பாறை, ஈழம்)
போர்க்காலத்தில் இலங்கை இராணுவப் புலானாய்வோடு சேர்ந்து இயங்கிய பொதுபலசேனவின் செயலாளர் அத்தே ஞானசார தேரரின் உறுதிமொழிக்கு அமைவாக கல்முனையில் இடம்பெற்ற உண்ணாவிரதப் போராட்டம் இன்று சனிக்கிழமை தற்காலிகமாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. அம்பாறை, கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை முழுமையான நிர்வாக அதிகாரமுள்ள பிரதேசச் செயலகமாகத் தரமுயர்த்துமாறு வலியுறுத்தி பௌத்த தேரர்கள், மாநகர சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் ஒரு மாதத்துக்குள் தரமுயர்த்தப்படும் என ஞானசார தேரர் உறுதிமொழி வழங்கினார். ஆனாலும் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன், நீரை மட்டும் அருந்தி தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.