செய்தி: நிரல்
ஏப். 15 20:40

ராஜபக்ச அரசாங்கத்துக்குள் முரண்பாடுகள்- சமாதான முயற்சியில் பௌத்த குருமார்

(வவுனியா, ஈழம்) ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளைத் தீர்க்க பௌத்த தேரர்கள் தலையிட்டுள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் தொடர்ந்தும் பதவி வகிக்க வேண்டுமெனவும் அதற்கேற்ப ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்குள் ஒற்றுமை இருக்க வேண்டுமெனவும் கொழும்பில் உள்ள பௌத்த மகா சங்கப் பிரதிநிதிகள் கூறியுள்ளனர். தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, மற்றும் பேராசிரியர் திஸ்ஸ விதாரன, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் உள்ளிட்ட பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள், மூத்த உறுப்பினர்களை பௌத்த பிக்குமார் சந்தித்துப் பேசியுள்ளனர்.
ஏப். 14 17:24

நாச்சிக்குடா கடற்பரப்பில் பள்ளிமுனை மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதல்

(மன்னார், ஈழம் ) வட மாகாணம் கிளிநொச்சி மாவட்டம் நாச்சிக்குடா கடற்பரப்பில் இன்று புதன்கிழமை தமிழ்- சிங்களப் புத்தாண்டு அன்று அதிகாலை மன்னார் மாவட்டம் பள்ளிமுனைப் பகுதி தமிழ் மீனவர்கள் நால்வர் இலங்கை கடற்படையினர் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்துள்ளதாகப் பள்ளிமுனை மீனவர் சங்கத்தின் பிரதிநிதி ஒருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார். மன்னார் பள்ளிமுனையில் இருந்து கடந்த செவ்வாய் மாலை இயந்திரப் படகில் மீன்பிடிக்கச் சென்ற அப்பாவி மீனவர்களே இவ்விதம் நாச்சிக்குடா கடற்பரப்பில் இரணைதீவுக்கு அருகாமையில் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டதாகப் பள்ளிமுனை மீனவர் சங்கப் பிரதிநிதி கூர்மைக்கு மேலும் தெரிவித்தார்.
ஏப். 13 23:47

ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு அரசாங்கத்தின் தோல்வியைச் சமாளிக்கும் நோக்கமா?

(கிளிநொச்சி, ஈழம்) சமுர்த்தி பயனாளிகள் மற்றும் வயோதிபர்கள் உட்பட அரசாங்கத்தின் மாதாந்த பணக்கொடுப்பனவுகளைப் பெற்றுவருபவர்களுக்குச் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு 5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை நேற்றுத் திங்கள் இலங்கைத்தீவு முழுதும் முன்னெடுக்கப்பட்ட நிலையில் தமிழர் தாயகமான வடக்கு,கிழக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் குறித்த பணக்கொடுப்பனவுகள் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் மன்னார் மாவட்டத்திலும் குறித்த 5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு நேற்றுத் திங்கள் காலை வைபவரீதியாக ஆரம்பிக்கப்பட்டது.
ஏப். 12 15:23

பாக்கு நீரிணை ஊடாக நீச்சல் மூலம் தனுஷ்கோடிக்குச் சென்று திரும்பிய இலங்கை இராணுவச் சிப்பாய்

(மன்னார், ஈழம் ) வட மாகாணம் மன்னார் மாவட்டம் தலைமன்னாரில் இருந்து பாக்கு நீரிணை ஊடாக நீச்சல் மூலம் கடந்த சனிக்கிழமை இந்தியா தனுஷ்கோடி நோக்கிச்சென்ற 31 வயதுடைய றோசன் அபேயசுந்தர எனும் இலங்கை விமானப்படைச் சிப்பாய் ஒருவர் மீண்டும் நீந்தியே தலைமன்னாரை நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வந்தடைந்து சாதனையொன்றை நிலைநாட்டியுள்ளார். கடந்த 1971 ஆம் ஆண்டு தலைமன்னாரில் இருந்து நீச்சல் மூலமாக இந்தியா தனுஷ்கோடி சென்றடைந்து மீண்டும் நீந்தியே தலைமன்னார் வந்தடைந்து உலக சாதனையை நிலைநாட்டி கின்னஸில் இடம்பிடித்த வடபுலத் தமிழரான ஆழிக்குமரன் ஆனந்தனின் சாதனையை முறியடிக்கும் வகையிலேயே குறித்த நீச்சல் பயணத்தை தான் ஆரம்பித்து அதனை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஏப். 11 22:01

சிங்களப் பிரதேசங்களில் உள்ள மதம்பிடித்த யானைகள் முசலிக் காட்டுக்குள்

(மன்னார், ஈழம் ) இலங்கையின் தென் பகுதி மாவட்டங்களில் பல மனித உயிர்களைப் பலியெடுத்து பொது மக்களின் பயிர் செய்கைகளுக்கும் ஏனைய உடமைகளுக்கும் பெரும் சேதம் விளைவித்த 15 ற்கும் மேற்பட்ட மதம்பிடித்த காட்டு யானைகள் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் பிடிக்கப்பட்டு கனரக வாகனங்கள் மூலம் வட மாகாணம் மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பல கிராமங்களைச் சூழவுள்ள வனப்பகுதிகளில் இறக்கிவிடப்பட்டுள்ளதாக மக்கள் கூறுகின்றனர். குறித்த யானைகள் இரவு நேரங்களில் முசலிக் கிராமங்களுக்குள் நுழைந்து பெரும் சேதாரங்களை ஏற்படுத்தி வருவதாகப் பாதிக்கப்பட்ட முசலிப் பகுதி மக்கள் பிரதேச அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர்.