செய்தி: நிரல்
ஜன. 11 09:47

மைத்திரி, விமல், டளஸ் புதிய கூட்டணி

(வவுனியா, ஈழம்) விமல் வீரவன்ச தலைமையிலான உத்தர லங்கா சபாகய, டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபை, அநுர பிரியதர்சன யாப்பா அணி மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணைந்து புதிய கூட்டணி ஒன்றை அமைத்துள்ளன. உள்ளூராட்சி சபைத் தேர்தலை நோக்கமாகக் கொண்டு இந்த அரசியல் கூட்டணி புதன்கிழமை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய கூட்டணிக்கான அங்குராட்பன நிகழ்வு புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. இந்தப் புதிய கூட்டணி, நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஹெலிகொப்டர் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜன. 05 21:00

ரணிலுடன் சம்பந்தன், செல்வம், சுமந்திரன், சித்தார்த்தன் சந்திப்பு

(வவுனியா, ஈழம்) வடக்கு கிழக்கு மாகாணங்களில் அதிகாரங்களைச் செயற்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய விடயங்களை ஆராய்ந்து எதிர்வரும் பத்தாம் திகதி பதிலளிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்தார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று வியாழக்கிழமை மாலை ஐந்து மணிக்கு ரணில் விக்கிரமசிங்கவுடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நடத்திய சந்திப்புத் தொடர்பாக சுமந்திரன் ஊடகங்களுக்கு விளக்கமளித்தார்.
ஜன. 04 10:19

ரணில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சந்திப்பார்- விக்கி அணி பதில் இல்லை

(வவுனியா, ஈழம்) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வியாழக்கிழமை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் சந்திப்பில் பங்குபற்றவுள்ளனர். வடக்கு மாகாண உறுப்பினர்களைச் சந்திக்க வருமாறு அழைப்பு விடுத்த ரணில் விக்கிரமசிங்க சென்ற மாதம் சர்வ கட்சி மாநாட்டைக் கூட்டியிருந்தார். இந்த நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தனியாகச் சந்திக்கவுள்ளதாகக் கூறப்படுகின்றது. இதற்கான அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.
ஜன. 03 08:39

மின் பாவனையாளர்கள் கையெழுத்துப் போராட்டம்

(வவுனியா, ஈழம்) இலங்கைத்தீவில் மின்சார கட்டணம் அதிகரிப்புத் தொடர்பாகப் பல்வேறு எதிர்ப்புகள் ஏற்பட்டுள்ளதால், மின் பாவனையாளர்கள் சங்கம் அறுபத்து ஒன்பது இலட்சம் பாவனையாளர்களின் கையெழுத்தை சேகரிக்கும் போராட்டத்தை முன்னெடுத்துள்ள நிலையில், புதிய வர்த்த மானி அறிவிப்பு ஒன்றை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ளார். இலங்கையில் மின்சார சபை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் வைத்தியசாலை ஆகிய சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்தே விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.
ஜன. 02 22:29

களனிப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் கைது

(மட்டக்களப்பு, ஈழம்) களனி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் கலும் முதன்நாயக்க மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதி டில்ஷன் ஹர்ஷன ஆகிய இருவரும் இன்று திங்கட்கிழமை பிற்பகல் தலங்கம பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். விசாரணைக்காக தலங்கம பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு முதலில் அழைப்பு விடுக்கபட்டது. அழைப்பை ஏற்று இரண்டு மாணவர்களும் தலங்க பொலிஸ்நிலையத்திற்கு இன்று நண்பகல் சென்றனர். பல மணி நேர விசாரணையின் பின்னர் இருவரும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக களனி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.