டிச. 12 13:30
(மன்னார், ஈழம்)
வடமாகாணம் - மன்னார் நகர நுழைவாயிலிலுள்ள சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட போர்க்காலத்திற்குரியதாகக் கருதப்படும் மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளை, ஐக்கிய நாடுகள் சபை பொறுப்பேற்க வேண்டும் எனக் கோரி மன்னார் மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக அமைதியான கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று புதன்கிழமை வட கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற போராட்டத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டனர். தமிழர் தாயகப் பகுதியான வடக்கு - கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கங்களின் பிரதிநிதிகள், அரசியல் கைதிகளின் உறவினர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.