பெப். 14 22:53
(யாழ்ப்பாணம், ஈழம் )
ஜெனீவா மனித உரிமைச் சபை எதிர்வரும் மார்ச் மாதம் கூடவுள்ள நிலையில், 2009 ஆம் ஆண்டுக்கு முன்னரான காலத்திலும் அதற்குப் பின்னரான காலத்திலும் கொல்லப்பட்ட, கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களது குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்க இலங்கை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்துள்ளது. ஆனால் நஷ்டஈட்டை விட நீதி கிடைக்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்டவர்களின் எதிர்பார்ப்பு என தமிழ் ஊடகவியலாளர்கள் கூறியுள்ளனர். அத்துடன் இந்த நஷ்டஈடும் உரிய முறையில் வழங்கப்படுமா என்பது குறித்தும் ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகளும் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். கொழும்பில் உள்ள இலங்கை ஜனாதிபதி செயலக அதிகாரிகள் குழு ஒன்று நேற்றுப் புதன்கிழமை யாழ்ப்பாணத்துக்குச் சென்றிருந்தது.