செய்தி: நிரல்
ஏப். 23 23:17

கொழும்பு நகருக்குள் குண்டுகளுடன் வாகனங்கள்- பொலிஸாரின் அறிவிப்பினால் மக்கள் பதற்றம்

(யாழ்ப்பாணம், ஈழம் ) குண்டுகள் பொருத்தப்பட்ட லொறி ஒன்றும் ஐந்து மோட்டார் சைக்கிளும் கப் ரக வாகனம் ஒன்றும் குண்டுகளுடன் கொழும்பு நகருக்குள் உள்நுழைந்துள்ளதாக இலங்கைப் புலனாய்வுப் பொலிஸார் அறிவித்ததையடுத்து கொழும்பு நகரில் மக்கள் மத்தியில் பதற்றம் அதிகரித்துள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இந்த அறிவிப்பு வெளியானதும் அரைகுறையாகத் திறக்கப்பட்டிருந்த வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டன. கொழும்பு நகரம் வெறிச்சோடியது. இன்று இரவு வரை குறித்த வாகனங்கள் எதுவும் இலங்கைப் பொலிஸாரால் கைப்பற்றப்படவில்லை. உயிர்த்த ஞாயிறன்று நடந்த குண்டு வெடிப்பை அடுத்து இன்று செவ்வாய்க்கிழமை வரையும் அரச விடுமறை வழங்கப்பட்டிருந்து.
ஏப். 23 16:42

கொழும்பு நகருக்குள் குண்டுகள் பொருத்தப்பட்ட லொறி உள் நுழைந்துள்ளதாக இலங்கைப் புலனாய்வு அறிவிப்பு

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையின் கொழும்புத் துறைமுகத்தை இலக்கு வைத்து கொழும்பு நகருக்குள் குண்டுகள் பொருத்தப்பட்ட லொறி ஒன்று உள்நுழைந்துள்ளதாக இலங்கைப் புலனாய்வுப் பொலிஸார் அறிவித்துள்ளனர். அத்துடன் மேலும் சில குண்டுகள் பொருத்தப்பட்ட வாகனங்கள் கொழும்பு நகருக்குள் வந்துள்ளதாக இலங்கைப் பொலிஸ் தலைமையகம் ஒவ்வொரு பிரதேசங்களிலும் உள்ள தமது பொலிஸ் நிலையங்களுக்கு அறிவித்துள்ளது. குறிப்பாக கொழும்பு மாவட்டத்திலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அவசர அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கைப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
ஏப். 23 14:20

பதினைந்து பாக்கிஸ்தானியர்களும் மூன்று இந்தியர்களும் கைது- விசாரணை தொடர்கின்றன

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையின் தலைநகர் கொழும்பு அதன் புநகர் பகுதியான நீர்கொழும்பு மற்றும் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் மட்டக்களப்பில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களையடுத்து, அவிசாவளையில் உள்ள செப்பு வயர் தொழிற்சாலையில் ஒன்பது பாகிஸ்தானியர்களும், மூன்று இந்திய முஸ்லீம்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை அதிரடிப்படையினர் நேற்றுத் திங்கட்கிழமை பிற்பகல் நடத்திய தேடுதல் சோதனை நடவடிக்கைகளின்போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தத் தொழிற்சாலை செப்பு வயர் தொழிற்சாலை என்ற பெயரில் இயங்கியதாகவும் ஆனால் அங்கு குண்டுகளே தாயரிக்கப்பட்டதாகவும் சந்தேகிக்கப்படுகின்றது. தகவல் ஒன்றை அடுத்து அங்க சோதனை நடத்திய இலங்கை விசேட அதிரடிப்படையினர், தொழிற்சாலையை மூடியுள்ளனர்.
ஏப். 22 23:19

குண்டு வெடிப்புகள் தொடர்பான விசாரணைக்கு உதவியளிக்க அமெரிக்கப் புலனாய்வு அதிகாரிகள் கொழும்பில்

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையின் தலைநகா் கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் வாழும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக ஆய்வு செய்வதற்கு அமெரிக்கப் படைத்துறைப் புலனாய்வு நிபுணர்கள் கொழும்புக்கு விரைந்துள்ளனர். அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான, எவ்பிஐ எனப்படும் சமஸ்டி விசாரணைப் பிரிவின் உயர் அதிகாரிகள் இன்று திங்கட்கிழமை கொழும்பு வந்து நடத்தப்பட்ட குண்டு வெடிப்புகள், அதற்கான காரணங்கள் குறித்த விசாரணைகளுக்கு உதவியளித்து வருவதாக இலங்கைப் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோ கொழும்பில் செய்தியாளர்ளிடம் தெரிவித்துள்ளார். அவுஸ்த்திரேலியப் படையின் புலனாய்வுத் துறை நிபுணர்களும் நாளை செவ்வாய்க்கிழமை கொழும்புக்கு வரவுள்ளதாகவும் ஹேமசிறி பெர்னான்டோ கூறியுள்ளார்.
ஏப். 21 18:50

கொழும்பு நட்சத்திர ஹோட்டல் குண்டு வெடிப்பில் 33 வெளிநாட்டவர் பலி

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையின் தலைநகர் கொழும்பு அதன் புறநகர் பகுதியான நீர்கொழும்பு மற்றும் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் மட்டக்களப்பு சியோன் தேவாயலத்திலும் தொடர்ச்சியாக இடம்பெற்ற குண்டு வெடிப்பையடுத்து இலங்கையின் முப்படையினரும் முக்கியமான சந்திகளில் குவிக்கப்பட்டுள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி முதல் நாளை திங்கட்கிழமை காலை ஆறு மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. நாளையும் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமையும் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், பாடசாலைகள் அனைத்துக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களும் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பை இலங்கை அரசாங்கம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.