செய்தி: நிரல்
ஏப். 21 14:33

கொழும்பில் தொடர் குண்டு வெடிப்பு- 290 பேர் பலி, கொல்லப்பட்டோரில் அதிகமானோர் தமிழர்கள்

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையின் தலைநகர் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம், சினமன் கிராண்ட் ஹோட்டல், ஷங்கிரிலா ஹோட்டல், புறகர் பகுதியான நீர்கொழும்பு கட்டுவபிட்டி புனித செபஸ்ரியன் தேவாலயம், மற்றும் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் மட்டக்களப்பு சியோன் தேவாலயம் ஆகிய ஆறு இடங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 290 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். ஐநூறுக்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்துள்ளனர். கொழும்புத் தேசிய வைத்திய சாலையில் 260 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8.15இற்கும் 9.15இற்கும் மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் குண்டுகள் வெடித்துள்ளதாக இலங்கைப் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏப். 20 22:56

தண்டனைக் குற்றவியல் சட்டத்தின் படி தாக்கிக் காயப்படுத்தல் பிரிவின் கீழ் ஊடகவியலாளர் மீது வழக்கு

(முல்லைத்தீவு, ஈழம்) வடமாகாணம் முல்லைத்தீவு மாவட்டத்தில் பணியாற்றும் சுயாதீன ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் இன்று சனிக்கிழமை இலங்கைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு நீதிபதியின் இல்லத்தில் இன்று மாலை தவசீலன் முன்னிலையானார். ஏதிர்வரும் 30 ஆம் திகதி அடுத்த கட்ட விசாரணை நடைபெறவுள்ளது. இலங்கைக் குற்றவியல் தண்டனைச் சட்டம் (Penal Code) பிரிவு 314 இன் கீழ் முல்லைத்தீவுப் பொலிஸார் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். கடமை நேரத்தின்போது தன்னைத் தாக்கியதாக முல்லைத்தீவில் உள்ள இலங்கை அரசின் கோட்டாபய கடற்படை முகாம் கடற்படை அதிகாரி ஒருவர், ஊடகவியலாளர் தவசீலனுக்கு எதிராக முல்லைத்தீவுப் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டிருந்தார்.
ஏப். 20 22:04

சவுதி அரேபியாவில் சிறையிலடைக்கப்பட்ட ரோகிங்யா கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம்

(யாழ்ப்பாணம், ஈழம் ) சுமார் அறுநூற்றுக்கும் மேற்பட்ட ரோஹிங்யா முஸ்லீம் ஆண்கள் சவுதி அரேபியாவின் ஜேட்டா பகுதியில் உள்ள சிறையில் 2012 ஆம் ஆண்டிலிருந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் தங்கள் விடுதலையை வேண்டி தற்போது சில நாட்களாக உண்ணாவிரத போராட்டம் ஆரம்பித்துள்ளார்கள். ஆரம்பித்த சில நாட்களில் இவர்களில் பலர் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளார்கள். இவர்கள் மூன்றாவது தடவையாக தங்கள் விடுதலையை வேண்டி தற்போது உண்ணாவிரத போராட்டம் செய்கிறார்கள். சவுதி அரேபியாவில் மூன்று லட்சம் ரோகிங்யாக்கள் பல தசாப்தங்களாக அகதிகளாக வாழ்கிறார்கள். அவர்கள் எவருமே மியன்மாரின் கடவுச்சீட்டுடன் சவுதி அரேபியாவுக்கு வரவல்லை. ஏனெனில் 1982இல் மியன்மார் இவர்களின் குடடியுரிமையை பறித்துவிட்டது.
ஏப். 20 15:48

விசாரணையின் பின்னர் தமிழ் ஊடகவியலாளர் பொலிஸாரால் கைது

(முல்லைத்தீவு, ஈழம்) வடமாகாணம் முல்லைத்தீவு மாவட்டத்தில் பணியாற்றும் சுயாதீன ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் இன்று சனிக்கிழமை இலங்கைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவில் உள்ள இலங்கை அரசின் கோட்டாபய கடற்படை முகாம் கடற்படை அதிகாரி ஒருவர் திட்டமிட்டு மேற்கொண்ட பொய்யான முறைப்பாட்டில் தவசீல்ன் கைது செய்யப்பட்டுள்ளதாக சக ஊடகவியலாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். வடக்கு கிழக்கில் இலங்கைப் படையினரால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், கடந்த 07.04.2019 அன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இருந்து வட்டுவாகல் பாலம் வரை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்திருந்தனர். அப்போது செல்வபுரம் பேருந்து நிலையத்தில் வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களையும் ஊடகவியலாளர்களையும் இனம் தெரியாத நபர் ஒருவர் படம் எடுத்தார்
ஏப். 19 21:18

யாழ்ப்பாணம், முல்லைத்தீவில் இடிமின்னல்- விசுவமடு, புத்தடியில் மாணவன் உயிரிழப்பு மற்றொருவர் காயம்

(முல்லைத்தீவு, ஈழம்) வடமாகாணத்தில் கடுமையான வெப்பத்தின் பின்னர் தொடர்ச்சியாக இடி மின்னல் காற்றுடன் கூடிய மழை பெய்கின்றது. கடந்த 16 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் சுன்னாகம் குப்பிளான் தெற்கு மயிலங்காடு பிரதேசத்தில் இடிமின்னல் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த நிலையில் இன்று முல்லைத்தீவு விசுவமடு, புத்தடிப் பிரதேசத்தில் பிற்பகல் மூன்று மணியளவில் இடி மின்னல் தாக்கி 18 வயதான மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றுமொரு மாணவன் காயமடைந்து தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அதேவேளை, யாழ் நகரில் மணற்தரை ஒழுங்கைக்கு அருகில் உள்ள சிவன் அம்மன் கோவிலடியில் இடி வீழ்ந்ததில் இரண்டு தென்னை மரங்கள் தீப்பற்றி எரிந்துள்ளன.