செய்தி: நிரல்
ஏப். 03 10:06

ஆயர் இராஜப்பு ஜோசப்பின் புகழுடல் செபஸ்தியார் பேராலயத்தில் திங்கட்கிழமை நல்லடக்கம்

(மன்னார், ஈழம் ) வட மாகாணம் மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் மேதகு இராயப்பு ஜோசப் அவர்களின் இறுதி சடங்கு நாளை மறுதினம் திங்கட்கிழமை மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் பிற்பகல் மூன்று மணிக்கு நடைபெறவுள்ளது. திருப்பலியுடன் ஆரம்பித்து அனைத்து ஆராதனைகளின் நிறைவில் ஆயரின் புகழுடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக மன்னார் மறை மாவட்ட ஆயர் கலாநிதி எப். எல். இமானுவேல் பெர்னாண்டோ கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார். கொழும்பில் உள்ள இலங்கைக் கத்தோலிக்கத் திருச்சபையின் பேராயர் கர்தினால் மல்க்கம் ரஞ்ஜித் உட்பட இலங்கைத்தீவின் அனைத்து மறை மாவட்டங்களின் ஆயர்களும் கலந்துகொள்வார்கள் என்றும் ஆயர் இமானுவல் கூறினார்.
ஏப். 01 20:43

புகழுடல் அடக்கம் செய்யும் நாளில் நாடளாவிய துக்க தினம்- அடைக்கலநாதன் கோரிக்கை

(யாழ்ப்பாணம், ஈழம்) மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப் இன்று மரணமடைந்த நிலையில் திங்கள் மாலை அன்னாரின் உடல் மன்னாரில் நல்லடக்கம் செய்யப்படுவதினால் அன்று நாடளாவிய துக்க தினமாக இலங்கை அரசாங்கம் பிரகடனப்படுத்த வேண்டும் எனும் கோரிக்கையை பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் முன்வைத்துள்ளதாக வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார். இது தொடர்பான அவசரக் கடிதமொன்றை இலங்கை பிரதமருக்கு இன்று பிற்பகல் மின் அஞ்சல் மூலமாகவும் தொலைநகல் மூலமாகவும் தான் அனுப்பி வைத்துள்ளதாகவும் செல்வம் அடைக்கலநாநன் கூர்மைக்குத் தெரிவித்தார்.
ஏப். 01 17:40

ஆயர் இராயப்பு ஜோசப் காலமானார்- பெருமளவான மக்கள் சமய வேறுபாடின்றி கண்ணீர் வணக்கம்

(யாழ்ப்பாணம், ஈழம்) தமிழ் இன அழிப்பை சர்வதேசத்துக்குப் பகிரங்கமாகவும் துணிவோடும் வெளிப்படுத்திய இலங்கைக் கத்தோலிக்கத் திருச்சபையின் மன்னார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப் யாழ்ப்பாணம் திருச்சிலுவை கன்னியர்மருதமடு வைத்தியசாலையில் இன்று வியாழக்கிழமை காலை 6.30க்குக் காலமானார். தனது 80 ஆவது வயதில் காலமான ஆயர், மன்னார் மறை மாவட்டத்தின் இரண்டாவது ஆயராக 1992ம் ஆண்டு ஜூலை மாதம் ஆறாம் திகதி பாப்பரசரினால் நியமனம் செய்யப்பட்டார். மன்னார் மறை மாவட்ட ஆயராகத் தொடர்சியாக 24 வருடங்கள் பணியாற்றிய நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் திகதி தனது ஆயர் பணியிலிருந்து இவர் இளைப்பாறினார்.
மார்ச் 31 22:58

வீட்டுத் திட்டங்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குமாறு கோரி கவனயீர்ப்புப் போராட்டம்

(முல்லைத்தீவு, ஈழம் ) இலங்கை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் ரணில்- மைத்திரி அரசாங்கத்தில் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு தற்போதைய ராஜபக்ச அரசாங்கத்தினால் கைவிடப்பட்ட வீட்டுத் திட்டங்களுக்கான கொடுப்பனவுகளை வழங்கக்கோரி திங்கட்கிழமை காலை முல்லைத்தீவு மாவட்டத்திலும் மன்னார் மாவட்டத்திலும் குறித்த வீட்டுத்திட்டப் பயனாளிகளான தமிழ் மக்களினால் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாங்குளம் நகரில் உள்ள தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட அலுவலகத்தின் முன் நூற்றுக்கணக்கில் ஒன்று திரண்ட வீட்டுத்திட்ட பயனாளிகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.
மார்ச் 30 09:07

சுகாதாரத் தொண்டர்கள் 30 நாட்களாகத் தொடர் போராட்டம்

(யாழ்ப்பாணம், ஈழம்) வட மாகாணம் யாழ்ப்பாணத்தில் உள்ள மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக கடந்த 30 நாட்களாக சுகாதார தொண்டர்கள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி போராட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் குறித்த போராட்டம் தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநரோ அல்லது மாகாண சுகாதார அமைச்சு சார்ந்த உயர் அதிகாரிகளோ உரிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்காததினால், சுகாதாரத் தொண்டர்கள் தொடர்ச்சியாக தமது போராட்டத்தைப் பல்வேறு கஸ்டங்களுக்கும் அசௌகரியங்களுக்கும் மத்தியில் முன்னெடுத்து வருகின்றனர்.