(வவுனியா, ஈழம்)
கொழும்பு போட் சிற்றியெனப்படும் கொழும்பு சர்வதேச வர்த்தக நிதி நகரத்தைச் சீனா வடிவமைப்பதால், எதிர்வரும் காலங்களில் இலங்கை சீனாவின் பக்கமே முற்று முழுதாகச் சாய்ந்துவிடுமென ஈழத்தமிழர்கள் பலரும் எதிர்பார்க்கின்றனர். நம்புகின்றனர். ஆனால் சிங்கள மக்கள் அவ்வாறான சிந்தனையில் இல்லையெனலாம். இலங்கையின் இறைமை சீனாவிடம் சிறிதளவேனும் பங்கிடப்படக் கூடாது. ஆனால் சீனாவிடம் உதவிகளைப் பெற வேண்டும் என்ற பகிரங்க நோக்கமே சிங்கள ஆட்சியாளர்கள் உள்ளிட்ட அனைத்துச் சிங்கள மக்களிடமும் விஞ்சிக் காணப்படுகின்றன. இந்த உள்நோக்கமே இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட போட் சிற்றிக்கான பொருளாதார ஆணைக்குழுச் சட்ட மூலத்திற்குச் சிங்கள எதிர்க்கட்சிகள் எதிர்ப்புடன் கூடிய மறைமுக ஆதரவை வழங்கியிருந்ததாகவும் கூறலாம்.