செப். 23 14:31
(மட்டக்களப்பு, ஈழம்)
இலங்கைக்குப் பொருத்தமான கடன் வசதிகள் மற்றும் பொருட்கள் நன்கொடை செய்வது உள்ளிட்ட விடயங்கள் குறித்து இந்தியாவுடன் இலங்கை கலந்துரையாடியுள்ளது. இந்தியாவும் இலங்கையும் இணைந்து முன்மொழியப்பட்ட கூட்டு வேலைத் திட்டங்கள் மற்றும் நோக்கங்களை விரைவுபடுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து பிரதமர் தினேஸ் குணவர்த்தன, கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே ஆகியோர் கலந்துரையாடியுள்ளனர். பிரதமரின் அலரி மாளிகையில் வியாழக்கிழமை இடம்பெற்ற சந்திப்பில் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஆலோசகர் எல்டோஸ் மேத்யூஸ் ஆகியோர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். குறிப்பாக இலங்கைக்கு வழங்கிய கடன் மறுசீரமைப்புக் குறித்தே விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.