நிரல்
நவ. 19 20:24

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச டில்லி செல்கிறார்- இந்திய வெளியுறவு அமைச்சர் கொழும்பில் சந்தித்தார்

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச பதவியேற்று இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க்கிழமை மாலை இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கொழும்புக்கு வருகை தந்துள்ளார். கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்றதும் இலங்கைக்கு வருகை தந்த முதலாவது வெளிநாட்டுப் பிரதிநிதி இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் என்று ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு வருமாறு பிரதமர் நரேந்திரமோடியின் அழைப்பை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கோட்டாபய ராஜபக்சவிடம் கையளித்தார். ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்த இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், எதிர்கால இராஜதந்திரச் செயற்பாடுகள் குறித்துப் பேசியுள்ளதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் கூறுகின்றன.
நவ. 19 10:20

கேகாலை எட்டியாந்தோட்டையில் பொது மக்கள் மீது தாக்குதல்

(வவுனியா, ஈழம்) இலங்கையின் மத்திய மாகாணத்தில் மலையகத் தமிழ் மக்கள் அதிகமாக வாழும் கேகாலை மாவட்டத்தில் உள்ள யட்டியாந்தோட்ட பிரதேசத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத இளைஞர்கள் பலர் வீடுகளுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதாகவும் யாருக்கு வாக்களிதீர்கள் எனக் கேட்டுத் தாக்கியதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர். நேற்றுத் திங்கட்கிழமை மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனால் பொதுமக்களின் சொத்துக்களுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய இளைஞர் குழுக்கள் மதுபோதையில் இருந்ததாகவும் மக்கள் தெரிவிக்கின்றர்.
நவ. 18 14:57

ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச பதவியேற்பு- அனுராதபுரத்தில் பதவிப் பிரமாணம்

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஏழாவது நிறைவேற்றதிகாரமுடைய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச இன்று திங்கட்கிழமை அனுராதபுரத்தில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். அனுராதபுரம் ருவன்வெலிசாயவுக்குச் சென்ற கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதியின் செயலாளர் உதய செனவிரத்ன முன்னிலையில் ஜனாதிபதியாகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். பௌத்த சிங்கள மக்களின் புனித பூமியான வரலாற்று முக்கியத்துவம் உள்ள அநுராதபுரம் ருவன்வெலி மகாசாய பௌத்த விகாரை வளாகத்தில் பதவிப் பிரமாணம் முற்பகல் 11.30க்கு நடைபெற்றது. நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச, கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள் பலரும் ஸ்ரீலங்காப் பொதுஜனப் பொரமுனக் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
நவ. 17 20:16

சிங்கள வாக்குகளினால் வெற்றிபெற்றார் கோட்டாபய ராஜபக்ச

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுனக் கட்சியின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச 13 இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளினால் வெற்றி பெற்று ஏழாவது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாகப் பதவியேற்கவுள்ளார். இலங்கைத் தீவு முழுவதிலும் அறுபத்து ஒன்பது இலட்சத்து 24 ஆயிரத்து 255 வாக்குகளை கோட்டாபய ராஜபக்ச பெற்றுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியை மையப்படுத்தி புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ஐம்பத்து ஐந்து இலட்சத்து அறுபத்து நான்காயிரத்து 239 வாக்குகளைப் பெற்றுத் தோல்வியடைந்துள்ளார். பெற்ற வாக்குகளில் கோட்டாபய ராஜபக்ச 52.25% சத வீதத்தையும் சஜித் பிரேமதாச 41.99% சத வீதத்தையும் பெற்றுள்ளனர்.
நவ. 16 22:21

கொழும்பு உள்ளிட்ட சிங்களப் பிரதேசங்களில் 75 சதவீதத்துக்கும் அதிகமான வாக்களிப்பு

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் இம்முறை வாக்களிப்பு வீதம் அதிகரித்துள்ளதாக இலங்கைச் சுயாதீனத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது வடக்குக் கிழக்கு மாகாணங்களில் திருகோணமலையில் மாத்திரம் எண்பத்து மூன்று சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. யாழ்ப்பாணம் 66 சதவிதம், கிளிநொச்சி 73 சதவீதம், மட்டக்களப்பு 75 சதவீதம், அம்பாறை 80 சதவீதம், முல்லைத்தீவு, வவுனியா மன்னார் உள்ளிட்ட வன்னித் தேர்தல் தொகுதியி்ல் 73 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. கொழும்பில் 75 சதவீதம் வாக்குகள், கம்பஹாத் தொகுதியில் 80 சதவீதமும் மாத்தளை, மாத்தறை ஆகிய தேர்தல் தொகுதிகளில் 79 சதவீத வாக்களிப்பும் குருநாகல தேர்தல் தொகுதியில் 82 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
நவ. 15 23:33

பேசுபொருளாகியுள்ள “நந்திக்கடல் பேசுகிறது” நூல்

(திருகோணமலை, ஈழம்) முள்ளிவாய்க்கால் இறுதிக்கண அனுபவங்களில் ஆரம்பித்து கடந்த பத்தாண்டுகளில் ஈழத்தமிழர் சந்தித்துவரும் சவால்கள் தொடர்பான நாற்பது கட்டுரைகளை நந்திக்கடல் பேசுகிறது எனும் நூலில் தொகுத்துள்ளார் வன்னியைச் சேர்ந்த விவரணவியலாளர் ஜெரா. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதை அந்தக் கூட்டமைப்பினருக்கே நினைவுபடுத்தும் இந்நூலுக்கு சாவகச்சேரியில் மாமனிதர் ரவிராஜ் நினைவுநிகழ்வில் சம்பந்தனின் கைகளாலேயே விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டமை சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. போராட்டத்தின் அறத்தைப் பேசுகிறது இந்நூல் என்கிறார் ஊடகத்துறைக் கலாநிதி ரகுராம். கட்சி விருதுகள் நூலின் மாண்பைக் குறைத்துவிடாதென்கிறார் மரபுரிமைச் செயற்பாட்டாளர் நவநீதன். விண்ணப்பித்து வழங்கப்படாத விருதென்கிறார் தொகுப்பாசிரியர் ஜெரா.
நவ. 15 14:22

வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் கொழும்பு உட்பட தமிழர் பிரதேசங்களிலும் கடமை

(யாழ்ப்பாணம், ஈழம்) ஜனாதிபதித் தேர்தலை கண்காணிப்பதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய மற்றும் பொதுநலவாய நாடுகளின் கண்காணிப்பாளர்கள் விரும்பிய இடங்களுக்குச் சென்று தேர்தல் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுவதற்கு அனுமதியளித்துள்ளதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கண்காணிப்பாளர்கள் குழுக்களின் தலைமைச் செயற்பாட்டாளர்களுடன் வியாழக்கிழமை கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் உள்ளுர் கண்காணிப்பாளர்களும் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவார்கள் எனவும் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார். இதேவேளை, கண்காணிப்பாளர்களில் ஒரு பகுதியினர் வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்குச் சென்றுள்ளனர்.
நவ. 14 20:43

யாழ் செயலகம் முன்பாக உண்ணாவிரதம் இருந்த தம்பிராசா கைது

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் சுயாதீனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய பதவி விலக வேண்டுமெனக் கோரி யாழ் மாவட்ட செயலகத்தின் முன்னால் உண்ணாவிரதம் இருந்த அரசியல் செயற்பாட்டாளர் மு.தம்பிராசா இலங்கைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி வேட்பாளர் ம.க.சிவாஜிலிங்கத்துக்கு ஆதரவாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த, தம்பிராசா இன்று வியாழக்கிழமை பிற்பகல் நான்கு முப்பதுக்கு உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தார். கொழும்பு மாவட்ட வாக்காளர்களின் விபரத்தைக் கோரிய போது அது சிங்கள மொழியில் தரப்பட்டதாகவும், அது தொடர்பாக தேர்தல்கள் ஆணையாளரிடம் முறையிட்ட போது, தமிழில் அவற்றை வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறப்பட்டது.
நவ. 13 23:01

மலையக மக்களைச் சிந்தித்து வாக்களிக்குமாறு மூன்று அமைப்புகள் கூட்டாகக் கோரிக்கை

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் மலையகத் தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்காத, மலையக தொழிலாளர் வர்க்கத்திற்கு கௌரவ வாழ்வை பெற்றுக் கொடுக்க மறுத்த சகல வேட்பாளர்களையும் நிராகரிக்குமாறு கோருவதாக புதிய பண்பாட்டு அமைப்பு, மலையக சமூக ஆய்வு மையம், இளம் சமூக விஞ்ஞானிகள் கழகம் ஆகிய மூன்று அமைப்புகளும் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளன. தேசமாய் எழுவோம்- மலையகத் தமிழர் நாம் என்ற தொனிப் பொருளில் ஜனாதிபதித் தேர்தலில் மலையகத் தமிழ் மக்கள் வாக்களிப்பது தொடர்பாக இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. அதேவேளை, மலையகத் தமிழ் மக்களு்க்குக் கௌரவமான வாழ்வைக் கொடுக்கக் கூடிய வேட்பாளரை அறிந்து நன்கு சி்ந்தித்து வாக்களிக்குமாறும் அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.
நவ. 13 21:59

கோட்டாபயவின் இலங்கைக் குடியுரிமையை ரத்துச் செய்யுமாறு கோரி மீண்டும் மனுத் தாக்கல்

(மட்டக்களப்பு, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவின் இலங்கைக் குடியுரிமையை ரத்துச் செய்யுமாறு கோரி இலங்கை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கைக் குடியுரிமையை இரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்த கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராகவே இன்று புதன்கிழமை மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது. சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் சார்பில் பேராசிரியர் சந்திரகுப்த தேனுவர, காமினி வியங்கொட ஆகியோரால் இந்த மேன்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேர்தலுக்கு இரு நாட்கள் உள்ள நிலையிலேயே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.