நிரல்
மார்ச் 27 07:35

யாழ் நகரின் சில பகுதிகள் முடக்கம்

(யாழ்ப்பாணம், ஈழம்) தமிழர் பகுதியான வட மாகாணம் யாழ் மாவட்டத்தில் சென்ற வியாழக்கிழமை கொரோனா நோய்த் தொற்றுடன் 77 பேர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை மேலும் 27 புதிய நோய்த் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ. கேதிஸ்வரன் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார். மேலும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா தீவிரமாகப் பரவிவரும் நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையிலும் குறித்த நோய் பரவல் ஏற்பட்டு வைத்தியர்கள் உட்பட பலர் கொரோனா நோய்த் தொற்றினால் பீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
மார்ச் 27 06:54

தீர்மானத்தில் புவிசார் அரசியல் நோக்கம் மாத்திரமே என்கிறார் அனந்தி

(யாழ்ப்பாணம், ஈழம்) ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக கடந்த செவ்வாய் நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் இன அழிப்பு தொடர்பிலான விடயங்கள் எதுவும் முன்வைக்கப்படாத நிலையில் அதனை வெற்றுப் பிரேரணையாகவே தான் கருதுவதாக ஈழத் தமிழர் சுயாட்சிக் கட்சியின் தலைவியும் வட மாகாண சபையின் முன்னாள் பெண் அமைச்சருமான திருமதி அனந்தி சசிதரன் கூர்மை செய்தித்தளத்திற்கு தெரிவித்தார். சொந்தத் தேசத்திலேயே ஒரு இன அழிப்பிற்கு முகம் கொடுத்து நீண்ட நாட்களாக உரிய நீதி அதற்கு கிடைக்கப்பெறும் எனும் எதிர்பார்பில் இருந்த ஒரு இனத்தின் அபிலாசைகளும் மற்றும் எதிர்பார்ப்புகளும் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் ஒட்டுமொத்தமாகத் தகர்த்தெறியப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மார்ச் 26 05:58

தமிழக மீனவர் 54 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது

(யாழ்ப்பாணம், ஈழம்) தமிழர் தாயகமான வடக்கு மாகாணக் கடற்பரப்பில் அனுமதியின்றி சட்ட விரோதமாக மீன் பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் 54 இந்திய தமிழ் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்று வியாழன் அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுடன் கடந்த செவ்வாய் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட பிரேரனைக்கு இலங்கைக்கு இந்தியா ஆதரவு வழங்காது நடுநிலைமை வகித்ததிற்கான இலங்கையின் பழிவாங்கும் நடவடிக்கையே தமது மீனவர்களின் குறித்த கைது என தமிழ் நாட்டு மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
மார்ச் 24 18:52

தீர்மானம் தொடர்பாக விளக்கமளிக்கும் இலங்கை அரசாங்கம்

(யாழ்ப்பாணம், ஈழம்) ஜெனீவா மனித உரிமைச் சபையின் தீர்மானம் பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தாதென்று அமைச்சரவைப் பேச்சாளர் கெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். தீர்மானத்தின் பிரகாரம் இலங்கைக்குப் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படுமென்றும், ஐக்கிய நாடுகள் சபையின் படைகள் இலங்கைக்கு வருமெனவும் சிங்கள இணையத்தளங்களில் வெளிவரும் செய்திகளில் உண்மை இல்லையெனவும் அமைச்சர் கெகலிய ரம்புக்வெல கூறினார். கொழும்பில் அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்த அமைச்சர் கெகலிய ரம்புக்வெல, மனித உரிமைச் சபையின் தீர்மானம் தொடர்பாக அரசாங்கம் அதிகாரபூர்வமாக விரைவில் கருத்து வெளியிடும் என்றும் கூறினார்.
மார்ச் 23 23:23

இலங்கை குறித்த தீர்மானம் ஜெனீவாவில் நிறைவேற்றம்

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசு தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் செயற்படும் ஜெனீவா மனித உரிமைச் சபையில் இன்று செவ்வாய்க்கிழமை 22 நாடுகளின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பதினொரு நாடுகள் எதிராக வாக்களித்தன. இந்தியா உள்ளிட்ட 14 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. போர்க்குற்றம் இருதரப்பு பொறுப்புக்கூறல் உள்ளிட்ட விடயங்கள் மத்திரமே தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஆனால் ஈழத்தமிழ் மக்கள் கோரிய இன அழிப்புக்கான சர்வதேச நீதி குறித்து எதுவுமே கூறப்படவில்லை. அதேவேளை, நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து அலட்டிக்கொள்ளத் தேவையில்லையென வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்த்தன கூறியுள்ளார்.
மார்ச் 22 22:42

நானாட்டான் அருவி ஆற்றை மையப்படுத்தி மண் அகழ்வு

(மன்னார், ஈழம் ) தாயகப் பிரதேசமான வட மாகாணம் மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் அருவி ஆற்றை மையப்படுத்தி கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட கட்டுப்பாடற்ற மண் அகழ்வினால் இப்பகுதியின் நிலக்கீழ் நீர், உவர் நீராக மாற்றமடைந்து நூற்றுக்கணக்கான ஏழைத் தமிழ் குடும்பங்களின் பல நூறு ஏக்கர் தோட்டச் செய்கைகள் கடும் பாதிப்படைந்துள்ளதாக நானாட்டான் பிரதேச சபைத் தலைவர் திருச்செல்வம் பரஞ்சோதி கூர்மைச் செய்திக்கு தெரிவித்தார். மேலும் நானாட்டான் பகுதியில் உள்ள பல குடிநீர் கிணறுகள் குறித்த மணல் அகழ்வினால் நீரின்றி காணப்படுவதினால் இப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடும் தலைதூக்கி வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
மார்ச் 21 21:51

வடக்கு கிழக்கு உள்ளிட்ட இலங்கைத் தீவில் 72 நீதிபதிகள் இடமாற்றம்

(யாழ்ப்பாணம், ஈழம்) தமிழர் தாயகம் வடக்கு கிழக்கு மாவட்டங்களில் பணியாற்றும் நீதிபதிகள் உட்பட இலங்கைத் தீவின் பல மாவட்டங்களில் பணியாற்றும் 72 நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இலங்கை நீதிச்சேவை ஆணைக்குழு குறித்த இடமாற்றங்களை மேற்கொண்டுள்ளது. யாழ்ப்பாணம், மன்னார் வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு , கல்முனை, சம்மாந்துறை, மூதூர், ஊர்காவல்துறை, சாவகச்சேரி ,பருத்தித்துறை ஆகிய தமிழ் பகுதிகளில் உள்ள மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் நீதவான் நீதிமன்றங்களின் நீதிபதிகள் இவ்விதம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இலங்கை ஒற்றையாட்சி அரசின் நீதிச் சேவை ஆணைக்குழுவின் 2021 ஆம் ஆண்டு வருடாந்த இடமாற்றத்திற்கமைய நீதிபதிகளின் இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
மார்ச் 20 21:12

கடத்தியவர்கள் யாரெனத் தெரியும் என்கிறார் விடுவிக்கப்பட்ட ஊடகவியலாளர் சுஜீவ

(கிளிநொச்சி, ஈழம்) அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்த முக்கியமான ஒலிநாடா ஒன்றை பெற்றுக்கொள்ளவே தான் கடத்தப்பட்டதாக ஊடகவியலாளர் சுஜீவ கமகே தெரிவித்துள்ளார். சென்ற பத்தாம் திகதி கடத்தப்பட்டு சித்திரவதையின் பின்னர் விடுதலை செய்யப்பட்ட நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற குறித்த ஊடகவியலாளர் நேற்று வெள்ளிக்கிழமை செய்தியாளர் மாநாடு ஒன்றை நடத்தினார். இதன்போது தான் கடத்தப்பட்ட முறை தொடர்பாக சுஜீவ கமகே விளக்கமளித்தார். தான் பணியாற்றும் சியரட்ட என்ற செய்தி இணையத்தளத்திற்குத் தான் எழுதுவதற்காகச் சேர்த்து வைத்திருந்த அரசாங்கம் பற்றிய ஒலிநாடாவை அழிப்பதே கடத்தல்காரர்களின் நோக்கம் என்றும் அவர் கூறினார்.
மார்ச் 18 23:46

இன அழிப்புக்கு நீதிகோரும் குரல்கள் பிரித்தானிய நாடாளுமன்றில் ஓங்கி ஒலித்தன

ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் எதிர்வரும் கிழமை வாக்கெடுப்புக்கு வரப்போகும் இலங்கை நிலைமை தொடர்பான தீர்மான வரைபில் மாற்றங்களை மேற்கொள்வதற்கான இறுதித் தவணையும் முடிந்து இரண்டு நாட்களின் பின்னரே பிரித்தானியப் பாராளுமன்றில் வியாழனன்று விவாதம் வந்தது. இதனால் உடனடிப் பலன் இல்லாவிடினும் ஈழத்தமிழர்கள் தொடரவேண்டிய இன அழிப்பு நீதிக்கான போராட்டத்தின் திசை எது என்பது நிரூபணமாகியுள்ளது. இது உலகளாவிய ஈழத்தமிழருக்கு நம்பிக்கை தரும் ஒரு படிப்பினை. சர்வதேச சக்திகளுடன் இணக்க அரசியல் புரிவதை விடவும் இன அழிப்பு நீதிக்கான அறம் சார்ந்த போராட்ட அரசியலையே ஈழத்தமிழர்கள் முன்னிலைப்படுத்தவேண்டும் என்பதே பொருத்தமான அணுகுமுறை என்பது ஐயந்திரிபற வெளிப்பட்டிருக்கிறது.
மார்ச் 17 15:30

தலைமன்னாரில் விபத்தில் பலியான மாணவனின் சடலம் நல்லடக்கம்

(மன்னார், ஈழம்) வட மாகாணம் மன்னார் மாவட்டம் தலைமன்னார் பியரில் சென்ற செவ்வாய் பிற்பகல் நிகழ்ந்த ரயில்-பஸ் விபத்தில் மரணமடைந்த பாடசாலை மாணவனின் இறுதிச் சடங்கு இன்று புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவில் தலைமன்னாரில் பியரில் நடைபெற்றது. குறித்த விபத்தில் 14 வயதுடைய பாலச்சந்திரன் தருன் எனும் மாணவன் மரணமடைந்த நிலையில் பிரேதப் பரிசோதனையின் பின் நேற்று இரவு மாணவனின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று மூன்று மணியளவில் மாணவனின் இறுதிச்சடங்கு தலைமன்னார் பியரில் நடைபெற்றது. மாணவர்கள், பொது மக்கள் இறுதிச் சடங்கில் பங்குபற்றியிருந்தனர்.