(மட்டக்களப்பு, ஈழம்)
சீன அரசின் இலங்கை மீதான ஆதிக்கம் தொடர்பாக இந்தியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் அதிருப்தியடைந்து, சில மாற்று ஏற்பாடுகளைச் செய்துள்ள நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்து உரையாடவுள்ளார். குறிப்பாக ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா (Itsunori Onodera) இலங்கைக்கு வந்து சென்ற பின்னர் தமிழர் தாயகத்தில் உள்ள திருகோணமலைத் துறைமுகம் உள்ளிட்ட விடயங்களில் மைத்திரி- ரணில் அரசாங்கம் சில மாற்றங்களைச் செய்வதாக இணக்கம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த பின்னர் இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் சில மாறுதல்கள் ஏற்படலாம் என கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.