நிரல்
மார்ச் 21 15:25

ஆணையாளரின் அறிக்கையில் தமிழ் மக்கள், வடக்குக் கிழக்கு என்ற வார்த்தைப் பிரயோகங்கள் தவிர்ப்பு

(யாழ்ப்பாணம், ஈழம் ) ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா மனித உரிமைச் சபை ஆணையாளர் மிச்செல் பச்சலெட் இலங்கை தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் தமிழ் மக்கள் என்றோ, வடக்கு - கிழக்கு மாகாணம் என்றோ எந்தவொரு வார்த்தைப் பிரயோகங்களும் பயன்படுத்தப்படவில்லை. மாறாக இலங்கை மக்கள் என்றே ஆணையாளரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இலங்கையில் சிங்கள - தமிழ் இனப்பிரச்சினையாகக் காண்பித்தால் போர்க்குற்ற விசாரணைக்குப் பதிலாக தமிழ் இன அழிப்பு என்ற அடிப்படையிலான விசாரணையாக மாறிவிடலாம் என்ற நோக்கில் ஆணையாளரின் அறிக்கையில் இலங்கை மக்கள் என்ற சொற்பிரயோகம் பயன்படுத்தப்பட்டிருக்கலாமென ஜெனீவாவில் உள்ள தமிழ்ப் பிரதிநிதியொருவர் தெரிவித்தார்.
மார்ச் 21 15:19

மன்னாரில் அரங்கேறும் அடாவடி - பொதுமகனது காணியில் கழிவுகளை எரியூட்டும் இலங்கை இராணுவம்

(மன்னார், ஈழம்) தமிழர் தாயகப் பகுதிகளிலிருந்து இலங்கை இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டுவரும் நிலையில் மன்னார் பிரதேச சபை பிரிவுக்கு உட்பட்ட திருக்கேதீஸ்வரம் - நாவற்குளம் பகுதியில், இராணுவத்திடமிருந்து கடந்த சில வருடங்களுக்கு முன்னர் விடுவிக்கப்பட்ட தனியாருக்குச் சொந்தமான காணியில் இலங்கை இராணுவம், கழிவுப்பொருட்களைக் கொட்டுவதுடன் அங்கு அவை தீயிட்டு எரிக்கப்படுவதாகவும் பிரதேச மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
மார்ச் 20 23:24

ஜனாதிபதி வேட்பாளரே என்று கோட்டாபய ராஜபக்சவைப் பார்த்துக் கூறினார் அமைச்சர் நவின் திஸாநாயக்கா

இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரென செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் பாராட்டுக்கள் அதிகரித்துள்ளன. எதிர்க்கட்சியிலும் ஆளும் கட்சியிலும் உள்ள பலர் கோட்டாபய ராஜபக்சவுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வாழ்த்துக்கள் தெரிவிப்பதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்கால ஜனாதிபதி வேட்பாளரே என்று கோட்டாபய ராஜபக்சவைப் பார்த்து ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய அமைப்பாளரான அமைச்சர் நவீன் திஸாநாயக்க கூறியுள்ளார். இன்று புதன்கிழமை பௌர்ணமியை முன்னிட்டு கொழும்பு நாராஹேன்பிட்டிய விகாரையில் நடைபெற்ற நிகழ்வில், கோட்டாபய ராஜபக்ச, அமைச்சர் நவீன் திஸாநாயக்க ஆகிய இருவரும் கலந்துகொண்டனர்.
மார்ச் 20 11:14

முல்லைத்தீவில் தொடரும் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் விசனம்

(முல்லைத்தீவு, ஈழம்) தமிழர் தாயகத்தில் 2009 ஆம் ஆண்டுக்குப் பிற்பட்ட காலத்தில் தமிழர்களின் வாழ்வாதாரம் திட்டமிட்டு அழிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுவரும் நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் பொருளாதாரத்தை தீர்மானிப்பதில் மீன்பிடி மற்றும் விவசாயம் என்பன செல்வாக்குச் செலுத்துகின்றன. அதனடிப்படையில் போரின் காரணமாக அனைத்தையும் இழந்து அடிப்படையிலிருந்து தமது வாழ்வாதாரத்தை ஆரம்பித்துள்ள முல்லைத்தீவு மீனவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் தொடர்ந்தும் வெளிமாவட்ட மீனவர்களின் மீன்பிடித் தொழிலால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக விசனம் வெளியிட்டுள்ளனர்.
மார்ச் 19 22:34

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளர் - பின்னணியில் அமெரிக்கா, ஆனால் திசை திருப்புகிறார் விமல் வீரவன்ச

(யாழ்ப்பாணம், ஈழம்) நடைபெறவுள்ள இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ச தெரிவு செய்யப்படுவாரென செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், அமெரிக்காவே அதன் பின்னணி எனவும் கொழும்பு அரசியல் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே அமெரிக்காவின் நண்பன் என்றும் பிரதமருக்குரிய அலரி மாளிகையில் அமெரிக்காவின் மிலேனியம் சவால் அமைப்பின் அலுவலகம் செயற்படுவதாகவும் மகிந்த தரப்பு உறுப்பினர் விமல் வீரவன்ச இலங்கை நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத்தியுள்ளார். ஆனால் இந்தக் குற்றச்சாட்டை ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் அமைச்சர் சாகல ரத்நாயக்க மறுத்துள்ளார்.
மார்ச் 19 10:11

இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்துமாறு கோரி கிழக்கு மாகாணத்தில் பேரணி - ஹர்த்தால்

(மட்டக்களப்பு, ஈழம்) ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா மனித உரிமைச் சபையின் கூட்டத் தொடர் நடைபெறும் நிலையில், தமிழ் பேசும் மக்களின் தாயகமான கிழக்கு மாகாணத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மாபெரும் எழுச்சிப் பேரணி ஒன்று நடைபெற்றது. தமிழ் இன அழிப்புத் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி இடம்பெற்ற பேரணியில் பல்லாயிரம் மக்கள் கலந்துகொண்டனர். வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு ஹர்த்தாலும் அனுஷ்டிக்கப்பட்டது. போராட்டத்தினால் கிழக்கு மாகாணம் ஸ்தம்பிதமடைந்தது. அரசியல் கட்சிகள், வடக்கு – கிழக்கில் உள்ள பொது அமைப்புக்கள், கிழக்குப் பல்கலைக்கழகச் சமூகம், கல்விச் சமூகம் ஆதரவை வழங்கியுள்ளது. போராட்டத்துக்கு யாழ். பல்கலைக்கழக மாணவர்களும் கல்வியாளர்களும் முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
மார்ச் 18 22:55

கோட்டாபய போட்டியிட்டால் மகிந்த அணி தோற்பது உறுதி ரணில் - ராஜபக்ச குடும்பமும் ஒதுங்கும் என்கிறார்

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக மகிந்த ராஜபக்சவினால் அறிவிக்கப்படுவார் என செய்திகள் வெளியானதும் கொழும்பில் சிங்கள அரசியல் கட்சிகளிடையே பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதேவேளை, அவசர அவசரமாக கென்யாவில் இருந்து கொழும்புக்குத் திரும்பிய இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக இதுவரை முடிவுகள் எதுவுமே எடுக்கப்படவில்லையென அறிவித்துள்ளார். அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்களை உனடியாக அழைத்து உரையாடியுமுள்ளார்.
மார்ச் 18 10:21

பிரேரணை இலங்கையின் திருத்தங்களுடன் நிறைவேறும் - உயர்மட்டக்குழு ஜெனீவா பயணம், சம்பந்தன் ஆதரவு

(யாழ்ப்பாணம், ஈழம் ) ஜெனீவா மனித உரிமைச் சபையின் 40 ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக இலங்கை அரசின் உயர்மட்டக்குழு இன்று திங்கட்கிழமை பயணமாகியுள்ளது. வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவின் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரத் அமுனுகம, வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நெரின் பிள்ளை ஆகியோர் ஜெனீவாவுக்குப் பயணம் செய்துள்ளனர். மனித உரிமைச் சபையில் பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகளின் அனுசரணையுடன் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணை எதிர்வரும் 20 ஆம் திகதி மீள பரிசீலனைக்கு எடுக்கப்படவுள்ளது. இதன்போது இலங்கை அரசாங்கத்தின் சார்பில் இந்த உயர்மட்டக்குழு திருத்தங்கள் உள்ளடங்கிய கருத்துக்களை முன்வைக்கவுள்ளது.
மார்ச் 17 22:52

திருகோணமலை மூதூர் பிரதேச செயலகத்தை இரண்டாகப் பிரிக்க இலங்கை அரசாங்கம் ஏற்பாடு- சம்பந்தன் எதிர்ப்பு

(திருகோணமலை, ஈழம்) தமிழ பேசும் மக்களின் தாயகப் பிரதேசமான கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள மூதூர் பிரதேசச் செயலகத்தை இரண்டாகப் பிரிப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் முற்பட்டு வருகின்றது. மூதூர் பிரதேசச் செயலகத்தை பிரித்து, மூதூர், தோப்பூர் என்ற இரு பிரதேசச் செயலகங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. அரசியல் அழுத்தங்களின் பின்னணியிலும் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் விகிதாசரத்தைக் குறைத்துக் காண்பிக்கும் நோக்கிலும் இலங்கை அரசாங்கம் இவ்வாறு செயற்படுவதாக தமிழ்த்தரப்புகள் ஏலவே குற்றம் சுமத்தியிருந்தன. இந்த நிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.
மார்ச் 16 23:17

மூன்றாவது ஜனாதிபதித் தேர்தலில் மூன்று பிரதான வேட்பாளர்கள் - தமிழர் நிராகரித்தால் வெற்றி யாருக்குமேயில்லை

(கிளிநொச்சி, ஈழம்) இந்த ஆண்டு இறுதியில் அல்லது 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சியை மையப்படுத்திய கூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்சவை நியமிப்பதற்கு மகிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளதாக கட்சித் தகவல்கள் கூறுகின்றன. தனது அமெரிக்கப் பிரஜாவுரிமையை நீக்கக்கோரும் விண்ணப்பத்தைக் கடந்த வாரம் கோட்டாபய ராஜபக்ச, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்துக்கு உத்தியோகபூர்வமாக அனுப்பி வைத்ததாகச் செய்திகள் ஏலவே வெளியாகியிருந்தன. இந்த நிலையில், ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு உள்ளக ரீதியாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக மகிந்த தரப்புத் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் அதிகாரபூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.