(யாழ்ப்பாணம், ஈழம்)
இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரான சூழலில், முஸ்லிம் மக்கள் மீது சிங்கள ஊடகங்கள் இனவாதக் கண்ணோட்டத்துடன் செய்திகளை வெளியிடுகின்றன. வடக்கு - கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் போர் நடைபெற்றபோதும் சமாதானப் பேச்சுக்கள் இடம்பெற்ற காலத்திலும் சிங்கள, ஆங்கில ஊடகங்கள் பௌத்த தேசிய இனவாதச் செய்திகளுக்கே முக்கியத்துவம் கொடுத்து வந்தன. அதேபோன்ற அணுகுமுறையை உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர் முஸ்லிம் மக்கள் மீது சில சிங்கள ஊடகங்கள் மேற்கொண்டு வருகின்றன. இந்தச் செயற்பாடுகள் தொடர்பாகக் கொழும்பில் இயங்கும் சுதந்திர ஊடக இயக்கம், உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், முஸ்லிம் மீடியா போரம் உள்ளிட்ட ஊடக அமைப்புகள் கண்டனம் வெளியிட்டுள்ளன.