செய்தி: நிரல்
நவ. 17 20:16

சிங்கள வாக்குகளினால் வெற்றிபெற்றார் கோட்டாபய ராஜபக்ச

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுனக் கட்சியின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச 13 இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளினால் வெற்றி பெற்று ஏழாவது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாகப் பதவியேற்கவுள்ளார். இலங்கைத் தீவு முழுவதிலும் அறுபத்து ஒன்பது இலட்சத்து 24 ஆயிரத்து 255 வாக்குகளை கோட்டாபய ராஜபக்ச பெற்றுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியை மையப்படுத்தி புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ஐம்பத்து ஐந்து இலட்சத்து அறுபத்து நான்காயிரத்து 239 வாக்குகளைப் பெற்றுத் தோல்வியடைந்துள்ளார். பெற்ற வாக்குகளில் கோட்டாபய ராஜபக்ச 52.25% சத வீதத்தையும் சஜித் பிரேமதாச 41.99% சத வீதத்தையும் பெற்றுள்ளனர்.
நவ. 16 22:21

கொழும்பு உள்ளிட்ட சிங்களப் பிரதேசங்களில் 75 சதவீதத்துக்கும் அதிகமான வாக்களிப்பு

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் இம்முறை வாக்களிப்பு வீதம் அதிகரித்துள்ளதாக இலங்கைச் சுயாதீனத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது வடக்குக் கிழக்கு மாகாணங்களில் திருகோணமலையில் மாத்திரம் எண்பத்து மூன்று சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. யாழ்ப்பாணம் 66 சதவிதம், கிளிநொச்சி 73 சதவீதம், மட்டக்களப்பு 75 சதவீதம், அம்பாறை 80 சதவீதம், முல்லைத்தீவு, வவுனியா மன்னார் உள்ளிட்ட வன்னித் தேர்தல் தொகுதியி்ல் 73 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. கொழும்பில் 75 சதவீதம் வாக்குகள், கம்பஹாத் தொகுதியில் 80 சதவீதமும் மாத்தளை, மாத்தறை ஆகிய தேர்தல் தொகுதிகளில் 79 சதவீத வாக்களிப்பும் குருநாகல தேர்தல் தொகுதியில் 82 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
நவ. 15 14:22

வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் கொழும்பு உட்பட தமிழர் பிரதேசங்களிலும் கடமை

(யாழ்ப்பாணம், ஈழம்) ஜனாதிபதித் தேர்தலை கண்காணிப்பதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய மற்றும் பொதுநலவாய நாடுகளின் கண்காணிப்பாளர்கள் விரும்பிய இடங்களுக்குச் சென்று தேர்தல் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுவதற்கு அனுமதியளித்துள்ளதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கண்காணிப்பாளர்கள் குழுக்களின் தலைமைச் செயற்பாட்டாளர்களுடன் வியாழக்கிழமை கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் உள்ளுர் கண்காணிப்பாளர்களும் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவார்கள் எனவும் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார். இதேவேளை, கண்காணிப்பாளர்களில் ஒரு பகுதியினர் வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்குச் சென்றுள்ளனர்.
நவ. 14 20:43

யாழ் செயலகம் முன்பாக உண்ணாவிரதம் இருந்த தம்பிராசா கைது

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் சுயாதீனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய பதவி விலக வேண்டுமெனக் கோரி யாழ் மாவட்ட செயலகத்தின் முன்னால் உண்ணாவிரதம் இருந்த அரசியல் செயற்பாட்டாளர் மு.தம்பிராசா இலங்கைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி வேட்பாளர் ம.க.சிவாஜிலிங்கத்துக்கு ஆதரவாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த, தம்பிராசா இன்று வியாழக்கிழமை பிற்பகல் நான்கு முப்பதுக்கு உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தார். கொழும்பு மாவட்ட வாக்காளர்களின் விபரத்தைக் கோரிய போது அது சிங்கள மொழியில் தரப்பட்டதாகவும், அது தொடர்பாக தேர்தல்கள் ஆணையாளரிடம் முறையிட்ட போது, தமிழில் அவற்றை வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறப்பட்டது.
நவ. 13 23:01

மலையக மக்களைச் சிந்தித்து வாக்களிக்குமாறு மூன்று அமைப்புகள் கூட்டாகக் கோரிக்கை

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் மலையகத் தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்காத, மலையக தொழிலாளர் வர்க்கத்திற்கு கௌரவ வாழ்வை பெற்றுக் கொடுக்க மறுத்த சகல வேட்பாளர்களையும் நிராகரிக்குமாறு கோருவதாக புதிய பண்பாட்டு அமைப்பு, மலையக சமூக ஆய்வு மையம், இளம் சமூக விஞ்ஞானிகள் கழகம் ஆகிய மூன்று அமைப்புகளும் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளன. தேசமாய் எழுவோம்- மலையகத் தமிழர் நாம் என்ற தொனிப் பொருளில் ஜனாதிபதித் தேர்தலில் மலையகத் தமிழ் மக்கள் வாக்களிப்பது தொடர்பாக இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. அதேவேளை, மலையகத் தமிழ் மக்களு்க்குக் கௌரவமான வாழ்வைக் கொடுக்கக் கூடிய வேட்பாளரை அறிந்து நன்கு சி்ந்தித்து வாக்களிக்குமாறும் அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.
நவ. 13 21:59

கோட்டாபயவின் இலங்கைக் குடியுரிமையை ரத்துச் செய்யுமாறு கோரி மீண்டும் மனுத் தாக்கல்

(மட்டக்களப்பு, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவின் இலங்கைக் குடியுரிமையை ரத்துச் செய்யுமாறு கோரி இலங்கை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கைக் குடியுரிமையை இரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்த கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராகவே இன்று புதன்கிழமை மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது. சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் சார்பில் பேராசிரியர் சந்திரகுப்த தேனுவர, காமினி வியங்கொட ஆகியோரால் இந்த மேன்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேர்தலுக்கு இரு நாட்கள் உள்ள நிலையிலேயே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நவ. 12 22:42

ஒற்றையாட்சியின் முக்கியத்துவம் குறித்து மகாநாயக்கத் தேரர்களுக்கு விளக்கம்- பாட்டாலி சம்பிக்க ரணவக்க

(மட்டக்களப்பு, ஈழம்) ஐக்கிய தேசியக் கட்சியை மையப்படுத்திய புதிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் பதினாறாம் பக்கத்தில் இலங்கையின் ஒற்றையாட்சிக் கட்டமைப்பை பாதுகாக்கும் அம்சம் இருப்பதாக அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க கண்டி மகாசங்கத்தினருக்கு விளக்கமளித்துள்ளார். சஜித் பிரேமதாச விபரமான கடிதம் ஒன்றை மகாநாயக்கத் தேரர்களுக்கு எழுதியுள்ளதாக அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க கூறினார். சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கையின் ஒற்றையாட்சி பற்றிக் கூறப்படவில்லையென சிலர் வந்திகளைப் பரப்பியுள்ளனர்.
நவ. 12 16:10

பிரதான வேட்பாளர்களிடையே கடும்போட்டி- முடிவுகள் வெளிவருவதிலும் தாமதம் ஏற்படலாம்- ஆணைக்குழு தகவல்

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் முப்பத்து ஐந்து வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஆனாலும் இரண்டு பிரதான சிங்களக் கட்சிகளின் இரு வேட்பாளர்களுக்கிடையேதான் கடுமையான போட்டி நிலவுகின்றது. ஜே.வி.பி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்காவுக்கு அதிகளவு வாக்குகள் செலுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் அந்த வாக்குகள் ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுனக் கட்சியின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்குரிய வாக்குகளில் தாக்கத்தைச் செலுத்தலாமெனவும் கூறப்படுகின்றது. இதேவேளை, முப்பத்து ஐந்து வேட்பாளர்களில் குறைந்தது பன்னிரண்டு வேட்பாளர்கள் பிரதான வேட்பாளர்களினால் திட்டமிடப்பட்டுக் களமிறக்கப்பட்ட போலியான வேட்பாளர்கள் என்று இலங்கைச் சுயாதீனத் தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.
நவ. 11 22:08

தமிழ் வேட்பாளருக்கு வாக்களிக்கவும்- தமிழ் மக்கள் பேரவையின் சுயாதீனக்குழு அறிக்கை

(யாழ்ப்பாணம், ஈழம்) பொது வேட்பாளர் ஒருவரைத் தெரிவு செய்வதில்தீவிரமாக ஈடுபட்ட தமிழ்மக்கள் பேரவையின் சுயாதீனக் குழு முயற்சி கூடாத நிலையில், இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இன்று திங்கட்கிழமை வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில் ஒப்பீட்டளவில் ஆகக் கூடுதலான தமிழ்த் தேசியக் கட்சிகளினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ் வேட்பாளருக்கு முதல் விருப்பு வாக்கையும் இரண்டாவது விருப்பு வாக்கை தந்திரோபாயமாகவும் வாக்களிக்குமாறு அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது. சுயாதீனக் குழுவின் நீண்ட உரையாடல்களுக்கு பின்னரே இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
நவ. 11 15:50

ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்த இந்திய அமைச்சர்

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரதான சிங்கள அரசியல் கட்சிகளின் வேட்;பாளர்கள் வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனம், மற்றும் பிரச்சார மேடைகளில் பேசப்படும் விடயங்கள் குறித்து கொழும்பில் உள்ள அமெரிக்க, இந்தியத் தூதரகங்கள் உன்னிப்பாக அவதானித்து வருகின்றன. பிரதான வேட்பாளர்களின் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களோடும் அவ்வப்போது சந்திப்புகள் இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக வடக்குக் கிழக்குத் தாயகப் பகுதிகளில் தமிழ் மக்களின் மன நிலை எவ்வாறு இருக்கின்றது என்பதையும் இவர்கள் அறிந்து வருகின்றனர். இவ்வாறனதொரு நிலையில் இந்தியாவின் சட்டம் ஒழுங்கு, நீதி மற்றும் தொலைத் தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துள்ளார்.