செய்தி: நிரல்
நவ. 10 22:45

நீதிமன்றங்களில் முன்னிலையாக குருபரனுக்குத் தடை- சட்ட நடவடிக்கைக்கு ஏற்பாடு

(யாழ்ப்பாணம், ஈழம்) மனித உரிமைகள் விடயத்தில் பாதிக்கப்பட்ட தரப்புகளுக்குச் சார்பாக இலங்கை நீதிமன்றங்களில் வாதிட்டு வரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கலாநிதி குமாரவடிவேல் குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாவதை தடை செய்யுமாறு கொழும்பில் உள்ள இலங்கை ஒற்றையாட்சி அரசின் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் இது குறித்துக் கருத்து வெளியிட குருபரன் மறுத்துள்ளார். இந்தத் தடையுத்தரவு குறித்த கடிதம் கடந்த செப்ரெம்பர் மாதம் 19ஆம் திகதியிடப்பட்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத் தகுதி வாய்ந்த அதிகாரி சென்ற ஒக்ரோபர் மாதம் 15 ஆம் திகதியே பேராசிரியர் க.கந்தசாமிக்கு வழங்கப்பட்டுள்ளது.
நவ. 09 21:56

தமிழ்த் தேசியத்தின் திருகோணமலைப் பிரகடனம்- வெளியிட்டார் சிவாஜிலிங்கம்

(திருகோணமலை, ஈழம்) ஈழத்தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கான கோரிக்கைகளை முன்வைத்து ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் க.ம.சிவாஜிலிங்கம் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை இன்று சனிக்கிழமை திருகோணமலையில் வெளியிட்டார். தமிழ் பேசும் மக்களின் தாயகமான திருகோணமலையில் உள்ள குளக்கோட்டம் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வில் முன்னாள் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அனந்தி சசிதரன் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலர் உட்பட பெருமளவு மக்கள் கலந்து கொண்டனர். தேர்தல் விஞ்ஞாபனத்துக்குத் தமிழ்த் தேசியத்தின் திருகோணமலைப் பிரகடனம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
நவ. 08 14:17

கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்ல சிரமதானப் பணியை நிறுத்திய இராணுவத்தினர்

(அம்பாறை, ஈழம்) கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டம் கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லம் இன்று வெள்ளிக்கிழமை காலை சிரமதானப் பணிகள் இடம்பெற்றன. ஆனால் இங்கு வந்த இலங்கை இராணுவத்தினர் சிரமதானப் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிட்டனர். நிறுத்தவில்லையானால் கைது செய்யப்படுவீர்கள் எனவும் இராணுவத்தினர் எச்சரிக்கை விடுத்ததாக சிரமதானப் பணியில் ஈடுபட்ட பொதுமக்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தனர். முன்னாள் போராளிகள், மாவீரர்களின் குடும்ப உறுப்பினர்களும் பிரதேச மக்களும் சிரமதானப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். எதிர்வரும் 27 ஆம் திகதி இடம்பெறவுள்ள மாவீரர் நாள் நிகழ்வுகளை முன்னிட்டு வடக்குக் கிழக்குத் தாயகப் பகுதிகளில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் துப்பரவு செய்யப்பட்டு வருகின்றன.
நவ. 07 12:37

ஒற்றுமையை வெளிப்படுத்த சிவாஜிலிங்கத்துக்கு வாக்களிக்கலாம்- காணாமல் ஆக்கப்பட்ட உறவினர் சங்கம்

(கிளிநொச்சி. ஈழம்) பிரதான சிங்கள அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் எவருக்கும் வாக்களிக்க முடியாது. ஒருவர் புடையன் பாம்பு என்றால் மற்றையவர் நாகபாம்பு என வடக்குக் கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கச் செயலாளர் லீலாதேவி ஆனந்த நடராஜா தெரிவித்தார். கிளிநொச்சியில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தமது சங்கத்தின் செயற்பாடுகள் குறித்து விளக்கமளித்த அவர், இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தல் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் பதிலளித்தார். சிவாஜிலிங்கம் தேர்தலில் போட்டியிடுகிறார். ஆனால் அவரால் வெற்றிபெற முடியாது. எனினும் தமிழ் மக்கள் அவருக்கு வாக்களித்து ஒற்றுமைப் பலத்தைக் காண்பிக்க முடியும் என்றும் லீலாதேவி ஆனந்த நடராஜா கூறினார்.
நவ. 07 10:02

எஸ்.பி.திஸாநாயக்காவுடன் வாக்குவாதப்பட்ட மக்கள் மீது துப்பாக்கிச் சூடு- இருவர் காயம்

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவாகப் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்காவின் மெய்ப்பாதுகாவலர்கள் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் பொதுமக்கள் இருவர் படுகாயமடைந்து தெலிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நுவரெலியா கினிகத்தேனை பொல்பிட்டியப் பிரதேசத்தில் நேற்றுப் புதன்கிழமை இரவு இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாகப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட பின்னர் சென்று கொண்டிருந்தபோது அவரது வாகனத்தைச் சிலர் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்கள் மீதே துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டுள்ளது.
நவ. 06 18:43

கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களுக்கு நீதிவேண்டி துண்டுப் பிரசுரம்

(கிளிநொச்சி. ஈழம்) தமிழ் பேசும் மக்களின் தாயகமான வடக்குக் கிழக்கு, கொழும்பு ஆகிய பிரதேசங்களில் படுகொலை செய்யப்பட்ட, காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களிற்கு நீதி கோரி தமிழ் ஊடகவியலாளர்களினால் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இன்று புதன்கிழமை கிளிநொச்சி, வவுனியா. மன்னார் ஆகிய பிரதேசங்களில் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கும் போராட்டம் இடம்பெற்றது. யாழ் ஊடக மையத்தின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்கள் பலர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் ஆட்சியில் இருந்து இன்று வரை நீதியான விசாரணைகள் நடத்தப்படவில்லை என்று தமிழ் ஊடகவியலாளர்கள் குற்றம் சுமத்தினர். கடந்த முப்பது வருடங்களாக தமிழ் ஊடகத்துறை பல்வேறு அச்சுறுத்தல்களையும் நெருக்குவாரங்களையும் எதிர்கொண்டு வருகின்றது.
நவ. 06 10:52

மூத்த பத்திரிகையாளர் பெருமாள் காலமானார்- ஊடகவியலாளர்கள் உட்படப் பலரும் அஞ்சலி

(யாழ்ப்பாணம், ஈழம்) ஈழத் தமிழ் இதழியல் துறையின் மூத்த பத்திரிகையாளர் சின்னக்கண்ணு பெருமாள் எண்பத்து ஆறாவது வயதில் நேற்றுச் செய்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் காலமானார். இலங்கைத் தீவின் இரத்தினபுரியில் 1933 ஆம் ஆண்டு பிறந்த பெருமாள், கொழும்பில் இருந்து வெளிவரும் வீரகேசரி பத்திரிகையில் உதவி ஆசிரியராகத் தனது பத்திரிகைத்துறையை ஆரம்பித்தார். மாணவராக இருந்தபோதே இதழியல்த் துறையில் ஆர்வம் கொண்ட பெருமாள், மாணவப் பருவத்திலேயே பல ஆக்கங்களை வீரகேசரியில் எழுதியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த ஈழநாடு பத்திரிகையில் 1961 ஆம் ஆண்டு முதல் உதவி ஆசிரியராகவும் பணிபுரிந்தார்.
நவ. 06 10:15

மூன்று கட்டப் போரை நடத்தியது நானே- சந்திரிகா கூறுகிறார்

(வவுனியா, ஈழம்) சஜித் பிரேமதாச சிறந்ததொரு வேட்பாளர் அவருக்கு வாக்களித்துப் புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வது மக்களின் பிரதான கடமை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாக்கும் மாநாடு நேற்றுச் செய்வாய்க்கிழமை கொழும்பு சுகதாச விளையாட்டரங்கில் இடம்பெற்றது. அங்கு தலைமையுரையாற்றிய சந்திரிகா ராஜபக்ச குடும்பத்திடம் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாக்க வேண்டும் என்று கூறினார். மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சியில் இணைந்துள்ள உறுப்பினர்கள் அனைவருமே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள்தான். அவர்கள் அனைவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைய வேண்டுமென அவர் கூறியுள்ளார்.
நவ. 05 22:24

தமிழரசுக் கட்சியின் முடிவில் பங்காளிக் கட்சிகள் அதிருப்தி

(மட்டக்களப்பு, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான சிங்கள அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களில் எவரை ஆதரிப்பது என்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் குழப்பமான கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றன. தமிழரசுக் கட்சி தனித்து முடிவெடுத்துள்ளது என்றும் ஐந்து கட்சிகளின் பதின்மூன்று அம்சக் கோரிக்கைகளை கைவிட்டு தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளதாகவும் ரெலோ இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் குற்றம் சுமத்தியுள்ளார். சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவது என்ற முடிவை ஏற்க முடியாதென ஈபிஆர்எல்எப் இயக்கத்தின் செயலாளர் சுரேஸ் பிரேமச் சந்திரன் கூறியுள்ளார். எந்த வேட்பாளரையும் ஆதரிக்கும்படி கோர முடியாதென்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.
நவ. 04 22:50

ஏமாற்றிய தமிழரசுக் கட்சி- சிவாஜிலிங்கம் கண்டனம்

(கிளிநொச்சி. ஈழம்) பதின்மூன்று அம்சக் கோரிக்கையை கைவிட்டுத் தமிழரசுக் கட்சி சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக அறிவித்தமை தமிழ் மக்களுக்கும் யாழ் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பச்சைத் துரோகம் செய்துள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர் ம.க.சிவாஜிலிங்கம் குற்றம் சுமத்தியுள்ளார். கிளிநொச்சியில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் நீண்ட விளக்கமளித்த சிவாஜிலிங்கம், பிரதான சிங்களக் கட்சிகளின் இரண்டு வேட்பாளர்களையும் கடுமையாக விமர்சித்தார். ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்களைக் கொலை செய்த கோட்டாபய ராஜபக்ச தேர்தலில் போட்டியிடுகின்றார்.