நிரல்
ஜூன் 12 17:55

மன்னாரில் குடும்பஸ்தர் இருவர் படுகொலை, ஒரே கிராமத்தைச் சேர்ந்த இருபது பேர் தலைமறைவு

(மன்னார், ஈழம்) இலங்கைத்தீவின் வட மாகாணம் மன்னார் மாவட்டத்தின் நொச்சிக்குளம் கிராமத்தில் பத்தாம் திகதி வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் குடும்பஸ்தர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய நொச்சிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையான ஆண்கள் தலை மறைவாகியுள்ளதாக உயிலங்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார். படுகொலைச் சம்பவத்தில் நொச்சிக்குளத்தைச் சேர்ந்த 20ற்கும் மேற்பட்ட ஆண்கள் நேரடியாகத் தொடர்புபட்டுள்ள நிலையில் 16 சந்தேகநபர்கள் தொடர்பான முழுமையான தகவல்கள் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர்களை விரைவில் கைது செய்வதற்கான தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் உயிலங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
ஜூன் 10 22:53

இந்தியாவின் அதானி நிறுவனத்துக்கு வழங்குவது உள்ளிட்ட மின்சார சபை திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றம்

(வவுனியா, ஈழம்) இலங்கைத்தீவுக்கான மின்சக்தி, எரிசக்தி அபிவிருத்தியில் பத்து மெகாவொட்டிற்கும் அதிகமான திட்டங்களை இந்தியாவின் அதானி நிறுவனத்துக்கு வழங்குவது உள்ளிட்ட மின்சார சபைத் திருத்தச் சட்டமூலம், மேலதிக 84 வாக்குகளினால் இலங்கை ஒற்றையாட்சி நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நிறைவேறியுள்ளது. சட்டமூலத்துக்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 36 வாக்குகளும் பெறப்பட்டன. வாக்களிப்பில் 13 பேர் கலந்துகொள்ளவில்லை. மின்சக்தி எரிசக்தித் திட்டத்தில் பத்து மெகாவோட்டிற்கும் அதிகமான அபவிருத்திகளை இந்தியாவின் அதானி நிறுவனத்துக்கு வழங்குவது உள்ளிட்ட மின்சார சபைத் திருத்தச் சட்டமூலம், மேலதிக 84 வாக்குகளினால் இலங்கை ஒற்றையாட்சி நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நிறைவேறியுள்ளது.
ஜூன் 09 10:59

இந்தியத் தூதரக, புலம்பெயர் உதவியின் மத்தியிலும் யாழ் வைத்தியசாலையின் மருந்துக்கையிருப்பு ஊசலாட்டம்

இலங்கைத் தீவைக் கடுமையாகத் தாக்கியுள்ள பொருண்மிய நெருக்கடிக்குள், குறிப்பாக மருந்துக்கொள்வனவுக்கான அந்நியச் செலாவணித் தட்டுப்பாட்டின் மத்தியில், இந்திய தூதரகத்தின் ஊடான உதவியூடாக ஓரளவு மருந்துவகைகள் கிடைக்கப்பெற்றுள்ளமையோடும், புலம்பெயர்ந்துவாழும் கொடைக்குணமுள்ளோரின் உதவியோடு தீவுக்குள்ளேயே அடிப்படைத் தேவைக்கான கையிருப்புகளைக் கொள்வனவு செய்தும், தனது அடிப்படை மருந்துக் கையிருப்பை யாழ் போதனா வைத்தியசாலை மயிரிழையில் சமாளித்துவருகிறது. மாத அடிப்படையில் அன்றி வாராந்த அடிப்படையில் கையிருப்பை இதுவரை நுட்பமாகக் கையாண்டு வந்த போதிலும் பெருத்த சவாலை வைத்தியசாலை எதிர்கொள்வதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்திய கலாநிதி கே. நந்தகுமாரை கூர்மை தொடர்பு கொண்டபோது அவர் விரிவாக எடுத்தியம்பினார்.
ஜூன் 08 08:45

கருணைக் கொலை செய்துவிடுமாறு கேட்குமளவுக்குத் திருச்சி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் இளைஞர்களின் அவலம்

(வவுனியா, ஈழம்) தமிழ் நாடு திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு பகுதியில் உள்ள சிறப்பு முகாம் எனப்படும் மத்திய சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் இளைஞர்கள் பதினேழுபேர் இருபது நாட்களுக்கும் மேலாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கு விசாரணைகள் முடிவடைந்து விடுதலை செய்யப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர்கள் பலர் தம்மை விடுதலை செய்து உறவினர்களுடன் சேர்ந்து வாழ அனுமதிக்குமாறு கோரியுள்ளனர். சிறப்பு முகாம் எனப்படும் வதை முகாம் அதிகாரிகள் தம்மைத் துன்புறுத்துவதாகவும், தேவையற்ற முறையில் ஒருவர் மீது பல வழக்குகளைத் தாக்கல் செய்து தொடர்ந்தும் தம்மைத் தடுத்து வைத்திருப்பதாகவும் குற்றம் சுமத்தியுள்ள இளைஞர்கள், வேதனை தாங்க முடியாததால் தங்களைக் கருணைக் கொலை செய்யுமாறும் கோரியுள்ளனர்.
ஜூன் 07 23:04

மக்கள் இரண்டு வேளை மாத்திரம் உணவு அருந்த வேண்டுமென ரணில் கூறியமைக்குக் கடும் விமர்சனம்

(வவுனியா, ஈழம்) பொருளாதார நெருக்கடியினால், மக்கள் இரண்டு வேளை சாப்பிடுவதற்குத் தயாராக வேண்டுமென இலங்கை ஒற்றையாட்சி அரசின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியதற்குக் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. விலைவாசி உயர்வினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாத அரசாங்கம், மக்கள் இரண்டுவேளை மாத்திரமே சாப்பிட வேண்டும் என்று கூறுவது வெட்கக் கேடானதென தொழிற்சங்க சம்மேளம் கண்டித்துள்ளது. பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ரணில் விக்கிரமசிங்க செவ்வாய் 07 ஆம் திகதியன்று நாடாளுமன்றத்தில் சிறப்புரையாற்றினார். இந்த உரையின் பின்னர் விவாதம் இடம்பெற்றது.
ஜூன் 06 08:02

ஒட்டுமொத்த உறவை ஒருமித்த குரலில் உருவாக்க முடியாத தமிழ்த் தேசியக் கட்சிகள் 21 பற்றிக் கூடி ஆராய்வதில் பயனில்லை

(கிளிநொச்சி, ஈழம்) ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவியேற்றபோது, அமைதிகாத்த ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள், தற்போது ரணில் விக்கிரமசிங்கவை அமைச்சரவைக்குள் விமர்சிக்க ஆரம்பித்துவிட்டனர். இலங்கைக்கு நிதி வழங்க வேண்டுமானால், அரசியல் ஸ்திரத் தன்மையும், (Political Stability) உறுதியான பொருளாதாரத் திட்டங்களை (Economic mechanism) முன்மொழிய வேண்டுமென உலக வங்கி, சர்வதே நாணய நிதியம் உள்ளிட்ட நிதி வழங்கும் நிறுவனங்கள் கடும் அழுத்தங்கள் கொடுத்து வரும் நிலையில், மீண்டும் அரசியல் குழப்பங்களை உருவாக்கும் அரசியல் கைங்கரியங்கள் ஆரம்பித்துவிட்டன போலும். இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நியமன விடயத்தில் ரணில் விக்கிரமசிங்க கோட்டாபய ராஜபக்சவுடன் முரண்பட்டுள்ளார்.
ஜூன் 05 21:33

ஈழத்தமிழர் தொடர்பான டில்லியின் கொள்கைக்கு உரமூட்டுகிறாரா தமிழக முதல்வர் ஸ்ராலின்?

(வவுனியா, ஈழம்) ஈழத் தமிழர் விவகாரத்தில் இந்திய மத்திய அரசின் செயற்பாடுகள் போன்றே ஸ்ராலின் தலைமையிலான தமிழக அரசின் செயற்பாடுகளும் அமைவதுபோல், சமீபகாலச் செயற்பாடுகள் காணப்படுகின்றன. புதுடில்லியில் உள்ள அமைச்சரவை அந்தஸ்த்துள்ள இலங்கைக்கான தூதுவர் மிலிந்த மொறகொட சனிக்கிழமை சென்னையில் தமிழக முதலமைச்சர் மு,க.ஸ்ராலினைச் சந்தித்து உரையாடியுள்ளார். இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வுப் பிரச்சினைகள் தொடர்பாகவும், தமிழக அரசு மேலும் வழங்கவுள்ள உதவிகள் குறித்துமே இருவரும் உரையாடியிருக்கின்றனர். அத்துடன் இலங்கைக்கு பயணம் செய்யுமாறு மிலிந்த மொறகொட ஸ்ராலினுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் கொழும்பில் உள்ள நியூஸ்பெஸ்ட் (newsfirst.lk/tamil) என்ற இலத்திரனியல் ஊடகம் கூறுகின்றது.
ஜூன் 04 19:43

தலை மன்னார் மணல் தீடையில் மீனவர்கள் தாக்கப்பட்டமை தொடர்பாக இதுவரை விசாரணைகள் ஆரம்பிக்கப்படவில்லை

(மன்னார், ஈழம்) இலங்கையின் தமிழர் தாயகமான வட மாகாணம் மன்னார் மாவட்டத்தின் தலைமன்னார் கடற்பரப்பில் உள்ள, மணல் தீடையில் இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்த ஏழு தமிழ் மீனவர்கள் பேசாலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் வியாழக்கிழமை மாலை இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் ஏழு பேர் தாக்குதல் உள்ளாகியது தொடர்பில் பேசாலை மீனவர் சங்கத்திற்கும், பேசாலை பங்கு தந்தைக்கும், தாக்கப்பட்ட மீனவர்களின் உறவினர்களால் முறையிடப்பட்டுள்ள நிலையில் கடற்படை உயர் அதிகாரிகளுக்கு சம்பவம் தொடர்பாக முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 02 20:42

கொழும்பில் உணவுப் பஞ்சம் ஏற்படும் ஆபத்து- மாநகர சபை எச்சரிக்கை

(வவுனியா, ஈழம்) எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் கொழும்பு நகரில் உணவுப் பஞ்சம் ஏற்படும் ஆபத்துள்ளதாக கொழும்பு மாநாகர சபை மேயர் ரோசி சேனாநாயக்கா எச்சரிக்கை விடுத்துள்ளார். மக்களைப் பயமுறுத்தவில்லை என்றும் ஆனால் வரவுள்ள உணவு நெருக்கடி பற்றி மக்களைத் தயார்ப்படுத்தவே இதனைக் கூறுவதாகவும் அவர் சொன்னார். கொழும்பு நகர மொத்த சனத்தொகையில் குறைந்த வருமானம் பெறும் சுமார் 60 வீதமானோர் உணவுப் பற்றாக்குறையினால் பாதிக்கப்படுவார்கள் என்றும் ரோசி சேனநாயக்கா கொழும்பில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கூறினார்.
ஜூன் 01 22:58

யாழ் நூலக எரிப்பு நினைவுகூரல் கொழும்பு காலிமுகத் திடலில்

(வவுனியா, ஈழம்) யாழ் நூலகம் எரிக்கப்பட்டு நாற்பத்தியொரு ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு. கொழும்பு காலிமுகத் திடலில் போராடிக் கொண்டிருக்கும் இளைஞர்கள், தீபம் ஏற்றி நினைவு கூர்ந்தனர். கோட்டாபய ராஜபக்சவை வீட்டுக்குச் செல்லுமாறு வலியுறுத்தி ஒரு மாதத்திற்கும் மேலாகப் போராடிக் கொண்டிருக்கும் இளைஞர்கள், யாழ் நூலக எரிப்புக்குக் கண்டனம் வெளியிட்டதுடன் இனவாதச் செயல் இனிமேலும் தொடர இடமளிக்க முடியாதெனவும் கூறினர். இன்று புதன்கிழமை இடம்பெற்ற நினைவு கூரும் நிகழ்வில், சிங்கள முற்போக்காளர்கள், சிங்கள மதகுருமார், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் பங்குபற்றினர்.