நிரல்
டிச. 01 22:26

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துமாறு கோரிக்கை

(வவுனியா, ஈழம்) மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக இதுவரையும் அரசாங்கத்திடம் இருந்து உத்தரவுகள் கிடைக்கவில்லையென தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டிய அவசியம் குறித்து கொழும்பில் உள்ள சிவில் சமூக அமைப்புகளின பிரதிநிதிகள் வியாழக்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளைச் சந்தித்தனர். இதன்போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு செப்ரெம்பர் மாதம் பரிந்துரைத்துள்ளது.
நவ. 30 21:47

ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கியிடம் இருந்து கடன்களைப் பெற இலங்கை கடும் முயற்சி

(வவுனியா, ஈழம்) பொருளாதார நெருக்கடியை மேலும் குறைக்கச் சுமார் இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர்களை பெறுவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி ஆகியவற்றுடன் இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாகக் கலந்துரையாடி வருகின்றது. அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட பல தேவைகளைக் கருத்தில் கொண்டு இந்த நிதியுதவியைப் பெறவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன. இலங்கைக்குக் கடன் வழங்கும் நாடுகளுடனான மறுசீரமைப்புப் பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்து எதிர்வரும் ஜனவரி மாதம் சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதியைப் பெறுவதற்கும் முயற்சிகள் இடம்பெறுவதாக அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன.
நவ. 29 22:43

சந்தேகநபர் கொலை செய்யப்பட்டமை அராஜகம்- சஜித்

(வவுனியா, ஈழம்) உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சந்தேக நபர் ஒருவர் கொழும்பில் பட்டப்பகலில் சுட்டுக் கொலை செய்யப்பட்டமை சட்டத்தை மதிக்காத செயல் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றிய அவர், இலங்கையில் அராஜக செயற்பாடு தலைதூக்கியுள்ளது என்றும் விமர்சித்தார். நீதிமன்ற உத்தரவில் பிணையில் விடுதலை செய்யப்பட்ட நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றால். பொலிஸாரின் செயற்பாடுகளிலும் சந்தேகம் எழுந்துள்ளதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நவ. 27 12:13

தேசமாகச் சிந்திக்கும் சிங்கள ஆட்சியாளர்கள் - ரணில் கையாளும் நகர்வு

(மட்டக்களப்பு, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்குள் இனப்பிரச்சினைக்கான தீர்வு முன்வைக்கப்பட வேண்டுமென்ற ஜே.ஆர்.ஜயவர்த்தனாவின் கொள்கையைத் தற்போது ரணில் விக்கிரமசிங்க கையாளுகிறார் என்பதைவிட, சிங்கள ஆட்சியாளர்களின் கொள்கைதான் அது என்பதை ஜே.வி.பி நிரூபித்து வருகிறது. சென்ற புதன்கிழமை கொழும்பில் ஜே.வி.பி தமிழ் மக்களுடன் நடத்திய சந்திப்பில் அது வெளிப்பட்டுள்ளது. இது பௌத்த சிங்கள நாடு என்பதுதான் ஜே.வி.பியின் கொள்கை. அதன் உறுப்பினர்களுடைய நாடாளுமன்ற உரைகளில் இருந்து இக் கொள்கை ஏற்கனவே வெளிப்பட்டுள்ள நிலையில், குறித்த சந்திப்பின் மூலம் மேலும் அது பட்டவர்த்தனமாகியுள்ளது.
நவ. 27 08:31

உணர்வுபூர்வமாக இடம்பெற்ற மாவீரா் நினைவேந்தல் நிகழ்வுகள்

(யாழ்ப்பாணம், ஈழம்) தமிழர் தாயகம் வடக்குக் கிழக்கில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இடம்பெற்றன. சென்ற பதினைந்தாம் திகதி நினைவேந்தல் நிகழ்வுகள், ஆரம்பிக்கப்பட்டிருந்தன. இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6.05 க்கு அனைத்து மாவீரர் துயிலும் இல்லங்களிலும் தீபம் ஏற்றப்பட்டது. பெருமளவு மக்கள் பங்குபற்றினர். மலர் தூபி தீபம் ஏற்றி இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வுகளில் பெருமளவு மக்கள் பங்குபற்றியிருந்தனர். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக, கிழக்குப் பல்கலைக்கழக, மாணவர்களால் போராட்டத்தில் உயிர்நீர்த்த மாவீரர்களுக்கு தீபம் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
நவ. 25 20:03

சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்ய ஏற்பாடு- இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கூறுகிறார்

(மட்டக்களப்பு, ஈழம்) இலங்கைக்குக் கடன் வழங்குவது தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் சாதகமாக அமைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச நாணயநிதியம் வழங்கவுள்ள கடன் தொகை தொடர்பாக இருதரப்பு கடன் வழங்குநர்களுடனான கடன் மறுசீரமைப்புக் குறித்த பேச்சுக்கள் தொடர்ந்தும் இடம்பெறுவதாகவும் ஆளுநர் கூறினார். இலங்கை அரசாங்கத்துடன் சர்வதேச நாணய நிதியம் மேற்கொள்ளவுள்ள ஒப்பந்தம் அடுத்த ஆண்டு மார்ச் மாதமே கைச்சாத்திடப்படுமென எதிர்க்கட்சிகள் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கூறுகின்ற தகவல்கள் உண்மைக்கு மாறானவை என்றும் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
நவ. 24 22:44

ராஜபக்ச நினைவேந்தல் நிகழ்வுக்கு ரணில் பிரதம அதிதி - ஆனால் கோட்டாபய பங்குபற்றவில்லை

(கிளிநொச்சி, ஈழம்) முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச ஆகியோரின் தந்தையாரான ஏ,டி.ராஜபக்சவின் ஐம்பத்து ஐந்தாவது நினைவேந்தல் நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் ராஜபக்சவின் குடும்ப உறுப்பினர்கள் பங்குபற்றியபோதும் கோட்டாபய ராஜபக்ச கலந்துகொள்ளவில்லை. வியாழக்கிழமை கொழும்பு நகர மண்டபத்தில் நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கோட்டாபய ராஜபக்ச பங்குபற்றுவார் என்று ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியின் ஊடகம் புதன்கிழமை தெரிவித்திருந்தது.
நவ. 23 22:08

மற்றுமொரு ஆட்சி மாற்றத்துக்காகப் போராட்டம் நடத்தினால் முப்படைகளையும் பயன்படுத்தி அடக்குவேன்- ரணில்

(வவுனியா, ஈழம்) அடுத்த ஆட்சி மாற்றம் ஒன்றுக்கு முயற்சி எடுத்தால், முப்படைகளைப் பயன்படுத்தி அவசரகாலச் சட்டத்தைப் பிறப்பித்து அடக்குவேன் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் அச்சுறுத்தும் தொனியில் கூறினார். நீண்டகால இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தார். வரவு செலவுத் திட்டம் முடிவடைந்த பின்னர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டிப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நவ. 22 21:03

வரவுசெலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது

(மட்டக்களப்பு, ஈழம்) அடுத்த நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு முப்பத்து ஏழு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. நிதியமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரவுசெலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்திருந்தார். இன்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற வாக்கெடுப்பைத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆதரவாகவோ, எதிராகவோ வாக்களிக்காமல் புறக்கணித்தது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி எதிராக வாக்களித்தது. தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.
நவ. 21 07:59

சஜித் - மைத்திரி அணி மற்றும் ஜே.வி.பி எதிர்த்து வாக்களிக்க முடிவு

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் நிதியமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த அடுத்த நிதியாண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிக்கவுள்ளதாக சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள வரவு - செலவுத் திட்டத்தின் மீதான இரண்டாம் வாசிப்புக்கு எதிராக வாக்களிப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க இன்று திங்கட்கிழமை அறிவித்துள்ளார்.