(யாழ்ப்பாணம், ஈழம்)
மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தமிழ்ப் பிரிவோடு இணைந்து செயற்படவுள்ளதாக செய்திகளை வெளியிட்ட சில செய்தி ஊடகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் பொதுச் செயலாளரும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான அனந்தி சசிதரன் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்துள்ளார். தன்னுடைய சட்டத்தரணிகளோடு இந்த விடயம் தொடர்பாகப் பேசவுள்ளதாகவும் அவர் கூறினார். மலையக மக்கள் முன்னேற்றக் கழக உறுப்பினர்களுடன் நேற்று வியாழக்கிழமை சந்திப்பொன்றை நடத்திய பின்னர், செய்தியாளர்களிடம் வெளியிட்ட கருத்தை சில இலத்திரனியல் ஊடகங்கள், சில செய்தி இணையத் தளங்கள், சில நாளேடுகள் திரிபுபடுத்தி செய்தி வெளியிட்டுள்ளமை கவலையளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.