செய்தி: நிரல்
நவ. 04 22:00

முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல்- மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் போராட்டம்

(மட்டக்களப்பு, ஈழம்) கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு காத்தான்குடிப் பிரதேசத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற முஸ்லிம் ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்டதைக் கண்டித்து மட்டக்களப்பு காந்திபூங்காவில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற போராட்டத்தில் பலர் கலந்துகொண்டு எதிர்ப்பு வெளியிட்டனர். ஊடகவியலாளர்கள் அனைவரும் கறுப்புப் பட்டியணிந்து போராட்டத்தில் கலந்துகொண்டனர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு, காத்தான்குடிப் பிரதேசத்தில் உள்ள ஜனாதிபதி வேட்பாளர் கிஸ்புல்லாவின் அலுவலகத்திற்குச் சென்ற ஊடகவியலாளர் முகமட் சஜி தாக்கப்பட்டிருந்தார்.
நவ. 03 17:46

சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு- தமிழரசுக் கட்சி தீர்மானம்

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதென சம்பந்தன் தலைமையிலான தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களை ஆராய்ந்ததன் அடிப்படையில் சஜித் பிரேமதாசவுக்குத் தமது பூரணமான ஆதரவை வழங்குவதற்குத் தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியை மையப்படுத்திய புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் முடிவு, வவுனியாவில் உள்ள கட்சியின் கிளை அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் இடம்பெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
நவ. 03 14:37

சஜித் இல்லாத நிலையில் அரசியல் தீர்வு பற்றிப் பேசுகிறார் ரணில்

(கிளிநொச்சி. ஈழம்) சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக்குவதோடு இலங்கை நாடாளுமன்றத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து குறைந்தது நூற்றி 20 உறுப்பினர்களைத் தெரிவு செய்தால் நிரந்த அரசியல் தீர்வு கிடைக்குமெனக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சிப் பொதுச் சந்தை மைதானத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும்போது அவர் இவ்வாறு கூறினார். இந்தக் கூட்டத்தில் அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, ராஜித சேனாரத்தன, ஹரிசன்,விஜயகலா மகேஸ்வரன் மற்றும் ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர். ஆனால் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச பங்குகொள்ளவில்லை.
நவ. 02 20:38

சஜித், கோட்டா குறித்து விசாரணை செய்யும் இந்தியப் புலனாய்வு- சிங்கள வார இதழ் தகவல்

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற பிரதான சிங்கள அரசியல் கட்சியின் இரண்டு வேட்பாளர்களின் தேர்தல் பிரசாரங்கள் குறித்து இந்திய உளவுப் பிரிவான றோ பல்வேறு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கொழும்பில் இருந்து வெளியாகும் திவயின வார இதழில் செய்தி ஒன்று பிரசுரிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச, சஜித் பிரேமதாச ஆகியோரின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் பற்றியே இந்திய உளவுப் பிரிவான றோ விசாரணை செய்து வருவதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. திவயினப் பத்திரிகையின் ஞாயிறு வார இதழ் இன்று சனிக்கிழமை வெளியாகியுள்ளது. அந்த வார இதழ் குறித்த விடத்தை தலைப்புச் செய்தியாகப் பிரசுரித்துள்ளது.
நவ. 01 10:14

பௌத்த சமயத்துக்கு முன்னுரிமை- மகாநாயக்கத் தேரர்களிடம் சஜித் உறுதி

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சஜித் பிரேமதாச தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை கண்டியில் வெளியிட்டார். ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியை மையப்படுத்திய புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாச, அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்கர்களிடமே தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை முதலில் கையளித்தார். இலங்கையில் அனைத்து மாகாணங்களுக்கும் அதிகாரப் பரவலாக்கலை உறுதிப்படுத்துவதே அரசியல் தீர்வு என்று அந்தத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டுள்ளது. அத்துடன் பௌத்த சமயத்துக்கான முன்னுரிமை, இலங்கை ஒற்றையாட்சி அரசின் இறைமை ஆகியவற்றை மேலும் உறுதிப்படுத்தல் முக்கியமானதென்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
ஒக். 31 22:45

பிரச்சாரத்துக்காக பிரதான வேட்பாளர்கள் இருவர் 760 மில்லியன் ரூபாய்கள் செலவு

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான சிங்கள அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தமது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக இதுவரை பல மில்லியன் ரூபாய்களை செலவிட்டுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளின் கூட்டிணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்துள்ளார். கடந்த மூன்று வாரங்களில் தமது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக இவ்வளவு தொகை செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இவற்றில் இரண்டு பிரதான அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் எழுநூற்றி 60 மில்லியன் ரூபாய்களைச் செலவிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
ஒக். 31 22:00

மட்டக்களப்பில் தொடரும் மழையால் விவசாயச் செய்கைகள் பாதிப்பு

(மட்டக்களப்பு, ஈழம்) கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடரும் மழையுடன் கூடிய காலநிலையினால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். மாவட்டத்தின் பதின் நான்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தாழ்நிலை பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளதால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. விவசாய நிலங்களும் நீரில் முழ்கியுள்ளன. கோறளைப்பற்று தெற்கு கிரான், கோறளைப்பற்று, வவுணதீவு ஆகிய கமநலகேந்திர நிலையத்திற்குட்பட்ட நெற் செய்கை கண்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாய பெரும்பாக அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒக். 30 16:40

மீன் சின்னத்திற்குத் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும்- காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சங்கம் கோரிக்கை

(வவுனியா, ஈழம்) எதிர்வரும் 16ம் திகதி நடைபெறவுள்ள இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற தமிழ் வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு வவுனியாவில் தொள்ளாயிரத்து 84ஆவது நாளாகவும் சுழற்சி முறை போராட்டத்தில் ஈடுபடும் காணாமல் போன உறவுகளின் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கைப் படையினரால் கடத்தப்பட்டுக் காணமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சங்கம், பிரதான சிங்களக் கட்சிகளின் வேட்பாளர்கள் மீது அதிருப்தி வெளியிட்டுள்ளது. தமிழ் இளைஞர் யுவதிகளைக் காணாமல் ஆக்கிவிட்டுச் சிங்கள வேட்பாளர்கள் எந்த முகத்தோடு வாக்குக் கேட்க வருகிறார்கள் என்றும் சங்க உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். எனவே மீன் சின்னத்திற்கு வாக்களித்து சிங்கள வேட்பாளர்களை நிராகரிக்க வேண்டும் என்றும் உறவினர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
ஒக். 30 10:13

புதுக்குடியிருப்பில் தொடர்ச்சியாக மனித எலும்புகள் மீட்பு

(முல்லைத்தீவு, ஈழம்) போர் நடைபெற்ற வடமாகாணம் முல்லைத்தீவு சுதந்திரபுரம் பகுதியில் உள்ள காணியொன்றில் இருந்து மனித எலும்புக் கூடுகள், மனித எச்சங்கள் மீட்கப்பட்ட நிலையில் அது தொடர்பான அகழ்வுப் பணிகள் நேற்றுச் செவ்வாய்க்கிழமை மீண்டும் இடம்பெற்றது. இன்று புதன்கிழமையும் அகழ்வுப் பணிகள் தொடருகின்றன. புதுக்குடியிருப்புப் பிரதேசச் செயலக பிரிவுக்குட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் கடந்த 2019.10.20 ஆம் திகதியன்று தோட்ட காணி ஒன்றைத் துப்பரவு செய்த போது மனித எச்சங்கள் காணப்படுவதாக புதுக்குடியிருப்புப் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது. அதனையடுத்து சென்ற 25 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற அனுமதியோடு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எஸ் லெனின்குமார் முன்னிலையில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.
ஒக். 28 23:37

மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்ச புதிய கூட்டணியில்- ஒப்பந்தம் கைச்சாத்தாகும்

(வவுனியா, ஈழம்) மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுனக் கட்சியும் இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் இணைந்து செயற்படத் தீர்மானித்துள்ளன. ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுனக் கட்சியுடன் ஏனைய சிறிய கட்சிகள் இணைந்து உருவாக்கிய ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜனக் கூட்டணியுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து செயற்படுமென கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கூட்டணியின் இணைத் தலைவர்களாக மைத்திரிபால சிறிசேனவும் மகிந்த ராஜபக்சவும் இணைந்து செயற்படுவார்கள் என்றும் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.