நிரல்
மார்ச் 15 22:42

சீனப் பயணிகளுக்கு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் பரிசோதனையில்லை

(மன்னார், ஈழம் ) கொரோனா வைரஸ் பரவாமல் இருப்பதைத் தடுக்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்தாலும், சீனாவில் இருந்து இலங்கைக்கு வருகின்ற சீனப் பயணிகளுக்கு கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் எந்தவொரு பரிசோதனைகளும் இன்றி நேரடியாகக் கொழும்பு நகருக்குள் வருவதற்கு அனுமதியளிக்கப்படுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் பயணிகளைச் சோதனையிட்டுப் பின்னர் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம்களில் 14 நாட்கள் தங்க வைக்கப்படுகின்றனர். சீனாவுக்கு அடுத்ததாகக் கொரோனா வைரஸ் தாக்கத்துக்குள்ளான இத்தாலி நாட்டில் இருந்து வரும் பயணிகள், சிறப்பு முகாம்களில் 14 நாட்கள் தடுத்து வைக்கப்படுகின்றனர்.
மார்ச் 14 21:40

கிளிநொச்சி. முல்லைத்தீவு ஆடைத் தொழிற்சாலைகளை மூடுமாறு கோரிக்கை

(முல்லைத்தீவு, ஈழம் ) இலங்கையில் கடந்த சில வாரங்களாக ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் தமிழர் தாயகமான வடமாகாணம் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இயங்கி வரும் ஆடைத்தொழிற்சாலைகளின் பணிகளை உடனடியாக இடைநிறுத்தமாறு கிளிநொச்சி, முல்லைத்தீவு அரச அதிபர்களிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. 15 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் அங்கு பணியாற்றி வருகின்றனர். இதனால் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படலாமென்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
மார்ச் 13 22:59

கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு சஜித் கோரிக்கை

(வவுனியா, ஈழம்) கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் உடனடியாகக் கூட்டுமாறு ஐக்கிய மக்கள் சக்தி அரசியல் அணியின் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி கேட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டுப் பயணிகளினால் கொரோனா வைரஸ் பரவுவதையடுத்து பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், தனியார் கல்வி உயர் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. எனவே பாதுகாப்பு ஏற்பாடுகள், மக்களுக்கு ஏற்படக் கூடிய அசொளகரியங்கள் குறித்துப் பேசவும் உரிய நடவடிக்கைகளைக் கூட்டாக மேற்கொள்ளும் வகையிலும் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு சஜித் பிரேமதாச கோரியுள்ளார்.
மார்ச் 12 15:56

ஆசிரியர்கள், அதிபர்களின் மூன்று நாள் போராட்டத்தைக் குழப்பவே பாடசாலைகள் மூடப்பட்டதா?

(வவுனியா, ஈழம்) கொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் மூடப்படும் என்று அறிவித்ததன் பின்னணியில் அரசியல் காரணங்களும் இருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் கூர்மைச் செய்தித் தளத்திற்குக் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தால் பாடசாலைகள் மூடப்பட வேண்டியது அவசியம்தான். ஆனால் சம்பள முரண்பாடுகளைத் தீர்க்குமாறு கோரி எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை ஆசிரியர்கள், அதிபர்கள் இலங்கை முழுவதிலும் மூன்று நாட்கள் தொடர் போராட்டம் ஒன்றை நடத்தவுள்ள நிலையில் பாடசாலைகள் அனைத்தும் திடீரென நாளை வெள்ளிக்கிழமை முதல் மூடப்பட வேண்டிய காரணம் என்ன என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மார்ச் 12 10:59

மட்டக்களப்பில் கொரோனா வைரஸ் தடுப்பு முகாம் அமைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு

(மட்டக்களப்பு, ஈழம் ) கொரோனா வைரஸ் உலகை ஆக்கிரமித்து வருவதால் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் பயணிகளை 14 நாட்கள் தடுத்து வைத்து மருத்துவப் பரிசோதனை நடத்துவதற்காக தமி;ழ் பேசும் மக்களின் தாயகமான மட்டக்களப்பு மாவட்டத்தி;ல் தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று வியாழக்கிழமை பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது. கொரொனா தொற்றிலிருந்து எமது மாவட்டத்தினை பாதுகாப்போம் என்னும் தலைப்பில் நேற்று தமிழ் உணர்வாளர் அமைப்பு விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் இவ்வாறு ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது.
மார்ச் 11 23:35

சுயாட்சி அதிகாரத்துக்கான சர்வதேச அங்கீகாரத்தைக் கோரும் கட்சி எது?

(வவுனியா, ஈழம்) ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அரசிய்ல் அணிக்கும் இடையிலான முரண்பாடுகள் மேலும் நீடித்துச் செல்லுகின்றன. யானைச் சின்னத்திலேயே ஐக்கிய தேசியக் கட்சி போட்டியிடுமென ரணில் விக்கிரமசிங்க கூறியபோதும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் பலரும் ஐக்கிய மக்கள் சக்தி அரசியல் அணியில் இணைந்து போட்டியிட வேண்டுமெனக் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் முடிவில் மாற்றம் இல்லையென ரணில் விக்;கிரமசிங்க நேற்றுப் புதன்கிழமை முற்பகல் கொழும்பில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றின் பின்னர் கூறியதாக ஐக்கிய தேசியக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.
மார்ச் 10 23:33

மட்டக்களப்பு கம்பஸில் கொரோனா வைரஸ் தடுப்பு முகாம்- முஸ்லிம் மக்கள் எதிர்ப்பு

(மட்டக்களப்பு, ஈழம் ) தென் கொரியாவில் இருந்து இல்ங்கைக்குத் திரும்பிய 166 பயணிகளை பராமரிப்பதற்காக மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முஸ்லிம் மக்கள் இன்று செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரும் செலவில் கட்டப்பட்டு;ப் பாவனையின்றி இருக்கும் மட்டக்களப்புப் பல்கலைக்கழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முகாம் ஒன்றை இலங்கை அரசாங்கம் அமைத்துள்ளது. அதனைக் கண்டித்து பிரதேச பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ரிதிதென்னை இக்ராஹ் வித்தியாலயத்திற்கு மாணவர்கள் செல்ல முடியாத வகையில் வித்தியாலய நுழைவாயிலை மூடி இன்று காலை முதல் போராட்டம் இடம்பெற்றது.
மார்ச் 10 22:43

முல்லைத்தீவில் 20 வயது இளைஞனைக் காணவில்லை

(முல்லைத்தீவு, ஈழம் ) வடமாகாணம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள இருட்டுமடு என்ற கிரமாத்தில் வசித்து வந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவரைக் காணவில்லையெனப் பெற்றோர் முறையிட்டுள்ளனர். கடந்த நான்கு நாட்களாகக் இந்த இளைஞனைக் காணவில்லையெனப் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் சென்ற 7 ஆம் திகதி சனிக்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகப் பெற்றோர் கூறுகின்றனர்.இருட்டுமடு உடையார் கட்டுக் கிராமத்தைச் சேர்ந்த 20 வயதுடைய பாக்கியராஜா விஜிதரன் என்ற இளைஞனே கடந்த 05.03.2020 அன்று முதல் காணாமல் போயுள்ளார். வீட்டில் இருந்து வெளியில் சென்று பல மணிநேரமாகியும் இவர் வீடு திரும்பவில்லை என்றும் உறவினர்களின் உதவியுடன் தெரி;ந்த இடங்களில் தேடியதாகவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
மார்ச் 07 20:55

எட்டுத் தமிழர்கள் கொல்லப்பட்ட வழங்கில் மரண தன்டணை விதிக்கப்பட்ட இராணுவச் சிப்பாய்க்குப் பொது மன்னிப்பு

(யாழ்ப்பாணம், ஈழம்) வடமாகாணம் யாழ்ப்பாணம்- மிருசுவில் பிரதேசத்தில் எட்டுத் தமிழர்கள் இலங்கைப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவச் சிப்பாய்க்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பொதுமன்னிப்பளிக்கத் தீர்மானித்துள்ளதாக சிறிலங்காப் பொதுஜன முன்னணித் தகவல்கள் கூறுகின்றன. கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் குறித்த சிப்பாய் விடுதலை செய்யப்பட்டதாகப் கொழும்பில் பரவலாகப் பேசப்பட்டிருந்தது. ஆனாலும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாகவே விடுதலை செய்யப்படவுள்ளதாக கடந்த 2000 டிசம்பர் 19 அன்று மிருசுவிலில் தமது வீடுகளைப் பார்வையிட சென்ற பொதுமக்கள், இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர்.
மார்ச் 06 17:01

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட தமிழக் கட்சிகள் தீவிரம்

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் வடக்குக் கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் தமிழ்க் கட்சிகள் வேட்புனுக்களைத் தாக்கல் செய்வதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தும், அந்தத் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற ஆசனங்களைக் கைப்பற்றுவதில் ஒவ்வொரு தமிழ்க் கட்சிகளும் தீவிரம்காட்டி வருவதாக சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதியொருவர் தெரிவித்தார். தேர்தல் காலம் என்பதால் நம்பகத்தன்மையற்ற வாக்குறுதிகள் அள்ளிவீசப்படுவதாகவும் வடக்குக்- கிழக்கு இணைந்த தாயகம் தன்னாட்சி என்ற பேச்சுக்களை விட தேர்தலில் வெற்றிபெற்று நாடாளுமன்றக் கதிரைகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது.