(யாழ்ப்பாணம், ஈழம்)
சிங்கள ஊடகவியலாளரான சுஜீவ கமகே சென்ற பத்தாம் திகதி புதன்கிழமை அடையாளம் தெரியா நபர்களினால் கடத்தப்பட்டதாக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்தக் கடத்தல் ஊடகத்துறைக்கான பாரிய அச்சுறுத்தல் என்றும் உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் கரு ஜயசூரிய கேட்டுள்ளார். அதேவேளை ஊடகவியலாளர் கடத்தப்பட்டமை இலங்கையில் மீண்டும் கடத்தல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஹர்ஷா டி சில்வா கூறுகின்றார். கடத்தப்பட்ட ஊடகவியலாளர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், கறுப்பு நிற வாகனம் ஒன்றிலேயே அவர் கடத்தப்பட்டுச் சித்திரவதையின் பின்னர் விடுதலையாகிச் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஹர்ஷா டி சில்வா கூறியுள்ளார்.