செய்தி: நிரல்
ஏப். 09 22:47

யாழ் நீதிமன்றத்தில் மணிவண்ணன் பிணையில் விடுதலை

(யாழ்ப்பாணம், ஈழம்) விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளுருவாக்க முற்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட யாழ். மாநகர முதல்வர், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் இன்று வெள்ளிக்கிழமை இரவு யாழ் நீதிமன்றத்தில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையிலேயே மணிவண்ணன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். யாழ் நகரில் மக்கள் பணிகளில் ஈடுபடுவதற்காக காவல் படை ஒன்றை உருவாக்கி அவர்களுக்கு புலிகளின் காவல்துறையினர் பயன்படுத்திய நீல நிற உடையை வழங்கினார் எனக் குற்றம் சுமத்தப்பட்டு இன்று அதிகாலை இரண்டு மணியளவில் யாழ் பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
ஏப். 09 10:41

புலிக் கதைகூறி மணிவண்ணன் கைது செய்யப்பட்டாரா?

(யாழ்ப்பாணம், ஈழம்) யாழ் மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் இலங்கை ஒற்றையாட்சி அரசின் யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரசாத் பெர்னாண்டோவினால் வெள்ளிக்கிழமை அதிகாலை இரண்டு மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான மணிவண்ணன், வவுனியா பயங்கரவாதத் தடுப்பு பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ். நகர காவல் படை உருவாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நேற்று வியாழக்கிழமை எட்டு மணியளவில் யாழ். பொலிஸ் நிலையத்துக்கு அவர் அழைக்கப்பட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் காவல்துறையினர் பயன்படுத்திய சீருடைகளை ஒத்ததாக இருந்தது என்ற குற்றச்சாட்டிலேயே மணிவண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏப். 08 17:02

ஏமாற்றப்பட்ட இளைஞர், யுவதிகள் சிலாவத்துறையில் கைது

(மன்னார், ஈழம் ) தமிழர் தாயகத்தின் வட மாகாணம் மன்னார் மாவட்டம் சிலாவத்துறைப் பகுதியில் சட்டவிரோதமாகக் கனடா நாட்டிற்கு செல்ல முற்பட்டார்கள் எனும் சந்தேகத்தில் 2 முஸ்லிம் யுவதிகள் 3 தமிழ் யுவதிகள் மற்றும் சிறுமியொருவர் அடங்கலாக 15 பேரையும் அவர்களுக்கு உதவி புரிந்த 4 முற்சக்கர வண்டி சாரதிகளையும் இலங்கைப் பொலிஸார் கைது செய்து மன்னார் மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர். மாவட்ட நீதவான் பி. சிவக்குமார் சந்தேகநபர்கள் அனைவரையும் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான சரீரப்பிணையில் செல்ல உத்தரவிட்டார்.
ஏப். 07 15:52

பாரம்பரியக் காணிகளை இலங்கை இராணுவம் தொடர்ந்து அபகரிக்க முடியாது- சிவாஜிலிங்கம்

(யாழ்ப்பாணம், ஈழம்) யாழ்ப்பாணம் மிருசுவில் எழுதுமட்டுவாழ் பகுதியில் இலங்கை இராணுவம் நிலைகொண்டுள்ள தனியார் காணியை நிரந்தரமாகவே சூறையாடும் நோக்கில் கடந்த திங்கள் மேற்கொள்ளப்பட்ட நில அளவை அப்பகுதி மக்களின் எதிர்ப்பு போராட்டத்தினால் கைவிடப்பட்டதாகவும் மீண்டும் அப்பகுதியை நில அளவை செய்ய இராணுவம் முற்பட்டால் மக்கள் அதற்கும் தமது எதிர்ப்பைத் தெரிவிப்பர் என யாழ்ப்பாணம் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார். தமிழர்களின் பாரம்பரியக் காணிளை இராணுவம் அபகரிக்க அனுமதிக்க முடியாதென்றும் அவர் கூறினார்.
ஏப். 06 09:06

வெளிநாட்டு இராஜதந்திரிகள் ஆயர் இராஜப்பு ஜோசப்பின் இறுதி நிகழ்வில் பங்குபற்றவில்லை

(மன்னார், ஈழம் ) ஆயர் இராயப்பு ஜோசப் தமிழ் மக்களின் வரலாற்றில் மறக்க முடியாத ஒருவர் என்றும் தேசியம், தாயகம், சுயநிர்ணய உரிமை அடிப்படையில் ஆயருடைய பணிகளைத் தொடர்வோம் எனவும் கூறிச் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் சத்தியப்பிரமாணம் செய்துள்ளனர். சென் செபஸ்தியார் பேராலயத்தில் ஆயர் இராஜப்பு யோசப்பின் புகழுடல் அடக்கம் செய்யப்பட்ட சமாதியில் நின்று சத்தியப்பிரமாணம் இடம்பெற்றது. வேலன் சுவாமிகள் உள்ளிட்ட பிரமுகர்கள் இவ்வாறு சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டனர். இன அழிப்பு என்பதை சர்வதேச அரங்கில் வெளிப்படுத்தி ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை அகிம்சை வழியில் முன்னெடுத்த ஆயர் இராஜப்பு ஜோசப் நினைவாக அவருடைய உருவச் சிலை ஒன்றும் மன்னார் நகரில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஏப். 04 23:01

மன்னார் இளைஞர்கள் இருவர் இராமேஸ்வரத்தில் கைது

(மன்னார், ஈழம் ) இலங்கையில் இருந்து பாக்கு நீரிணையூடாக இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தனுஷ்கோடி அரிச்சல்முனைக் கரையைச் சென்றடைந்த இரண்டு தமிழ் இளைஞர்களை இராமேஸ்வரம் சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ள நிலையில் இலங்கைப் பொலிஸாரும் தேசிய புலனாய்வு பிரிவினரும் மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கின் அடம்பன் பகுதியில் குறித்த இளைஞர்கள் தொடர்பில் விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்துள்ளதாக அடம்பன் பொலிஸ் வட்டாரங்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தன.
ஏப். 04 20:48

மன்னார் ஒல்லாந்தர் கோட்டையைச் சூழவுள்ள மக்களை வெளியேற்ற உத்தரவு

(மன்னார், ஈழம் ) வட மாகாணம் மன்னார் நகரில் அமைந்துள்ள ஒல்லாந்தர் கோட்டையைச் சூழவுள்ள பகுதியில் குடியிருக்கும் பொது மக்களையும் அப்பகுதியில் நிலை கொண்டுள்ள பொலிஸாரையும் வெளியேற்றி அங்கு அமைந்துள்ள முஸ்லிம் பள்ளிவாசலையும் அகற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கொழும்பை மையமாகக் கொண்ட இலங்கைத் தொல் பொருட்கள் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவபாலன் குணபாலன் கூர்மைச் செய்தித்தளத்திற்கு தெரிவித்தார்.
ஏப். 03 10:06

ஆயர் இராஜப்பு ஜோசப்பின் புகழுடல் செபஸ்தியார் பேராலயத்தில் திங்கட்கிழமை நல்லடக்கம்

(மன்னார், ஈழம் ) வட மாகாணம் மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் மேதகு இராயப்பு ஜோசப் அவர்களின் இறுதி சடங்கு நாளை மறுதினம் திங்கட்கிழமை மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் பிற்பகல் மூன்று மணிக்கு நடைபெறவுள்ளது. திருப்பலியுடன் ஆரம்பித்து அனைத்து ஆராதனைகளின் நிறைவில் ஆயரின் புகழுடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக மன்னார் மறை மாவட்ட ஆயர் கலாநிதி எப். எல். இமானுவேல் பெர்னாண்டோ கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார். கொழும்பில் உள்ள இலங்கைக் கத்தோலிக்கத் திருச்சபையின் பேராயர் கர்தினால் மல்க்கம் ரஞ்ஜித் உட்பட இலங்கைத்தீவின் அனைத்து மறை மாவட்டங்களின் ஆயர்களும் கலந்துகொள்வார்கள் என்றும் ஆயர் இமானுவல் கூறினார்.
ஏப். 01 20:43

புகழுடல் அடக்கம் செய்யும் நாளில் நாடளாவிய துக்க தினம்- அடைக்கலநாதன் கோரிக்கை

(யாழ்ப்பாணம், ஈழம்) மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப் இன்று மரணமடைந்த நிலையில் திங்கள் மாலை அன்னாரின் உடல் மன்னாரில் நல்லடக்கம் செய்யப்படுவதினால் அன்று நாடளாவிய துக்க தினமாக இலங்கை அரசாங்கம் பிரகடனப்படுத்த வேண்டும் எனும் கோரிக்கையை பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் முன்வைத்துள்ளதாக வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார். இது தொடர்பான அவசரக் கடிதமொன்றை இலங்கை பிரதமருக்கு இன்று பிற்பகல் மின் அஞ்சல் மூலமாகவும் தொலைநகல் மூலமாகவும் தான் அனுப்பி வைத்துள்ளதாகவும் செல்வம் அடைக்கலநாநன் கூர்மைக்குத் தெரிவித்தார்.
ஏப். 01 17:40

ஆயர் இராயப்பு ஜோசப் காலமானார்- பெருமளவான மக்கள் சமய வேறுபாடின்றி கண்ணீர் வணக்கம்

(யாழ்ப்பாணம், ஈழம்) தமிழ் இன அழிப்பை சர்வதேசத்துக்குப் பகிரங்கமாகவும் துணிவோடும் வெளிப்படுத்திய இலங்கைக் கத்தோலிக்கத் திருச்சபையின் மன்னார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப் யாழ்ப்பாணம் திருச்சிலுவை கன்னியர்மருதமடு வைத்தியசாலையில் இன்று வியாழக்கிழமை காலை 6.30க்குக் காலமானார். தனது 80 ஆவது வயதில் காலமான ஆயர், மன்னார் மறை மாவட்டத்தின் இரண்டாவது ஆயராக 1992ம் ஆண்டு ஜூலை மாதம் ஆறாம் திகதி பாப்பரசரினால் நியமனம் செய்யப்பட்டார். மன்னார் மறை மாவட்ட ஆயராகத் தொடர்சியாக 24 வருடங்கள் பணியாற்றிய நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் திகதி தனது ஆயர் பணியிலிருந்து இவர் இளைப்பாறினார்.