நிரல்
ஏப். 10 20:56

கிளிநொச்சியில் 400 பேருக்கு மாத்திரமே வீடமைப்பு உதவி

(கிளிநொச்சி, ஈழம்) வடக்கு மாகாணம் கிளிநொச்சி மாவட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலங்கை ஒற்றையாட்சி அரசின் கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சினால் கடந்த மார்ச் மாதம் 400 வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் வீடுகளின் நிர்மாணப்பணிகள் இம்மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் திட்டப் பணிப்பாளர் கே. ஸ்ரீ பாஸ்கரன் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார். போரினால் பாதிப்பிற்குள்ளான வீடற்ற மக்களுக்கு வழங்குவதற்கு 2500 இற்கும் அதிக வீடுகள் தற்போது கிளிநொச்சி மாவட்டத்திற்கு தேவையாக உள்ளதென அவர் கூர்மைச் செய்திக்கு மேலும் தெரிவித்தார்.
ஏப். 09 22:47

யாழ் நீதிமன்றத்தில் மணிவண்ணன் பிணையில் விடுதலை

(யாழ்ப்பாணம், ஈழம்) விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளுருவாக்க முற்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட யாழ். மாநகர முதல்வர், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் இன்று வெள்ளிக்கிழமை இரவு யாழ் நீதிமன்றத்தில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையிலேயே மணிவண்ணன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். யாழ் நகரில் மக்கள் பணிகளில் ஈடுபடுவதற்காக காவல் படை ஒன்றை உருவாக்கி அவர்களுக்கு புலிகளின் காவல்துறையினர் பயன்படுத்திய நீல நிற உடையை வழங்கினார் எனக் குற்றம் சுமத்தப்பட்டு இன்று அதிகாலை இரண்டு மணியளவில் யாழ் பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
ஏப். 09 10:41

புலிக் கதைகூறி மணிவண்ணன் கைது செய்யப்பட்டாரா?

(யாழ்ப்பாணம், ஈழம்) யாழ் மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் இலங்கை ஒற்றையாட்சி அரசின் யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரசாத் பெர்னாண்டோவினால் வெள்ளிக்கிழமை அதிகாலை இரண்டு மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான மணிவண்ணன், வவுனியா பயங்கரவாதத் தடுப்பு பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ். நகர காவல் படை உருவாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நேற்று வியாழக்கிழமை எட்டு மணியளவில் யாழ். பொலிஸ் நிலையத்துக்கு அவர் அழைக்கப்பட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் காவல்துறையினர் பயன்படுத்திய சீருடைகளை ஒத்ததாக இருந்தது என்ற குற்றச்சாட்டிலேயே மணிவண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏப். 08 17:02

ஏமாற்றப்பட்ட இளைஞர், யுவதிகள் சிலாவத்துறையில் கைது

(மன்னார், ஈழம் ) தமிழர் தாயகத்தின் வட மாகாணம் மன்னார் மாவட்டம் சிலாவத்துறைப் பகுதியில் சட்டவிரோதமாகக் கனடா நாட்டிற்கு செல்ல முற்பட்டார்கள் எனும் சந்தேகத்தில் 2 முஸ்லிம் யுவதிகள் 3 தமிழ் யுவதிகள் மற்றும் சிறுமியொருவர் அடங்கலாக 15 பேரையும் அவர்களுக்கு உதவி புரிந்த 4 முற்சக்கர வண்டி சாரதிகளையும் இலங்கைப் பொலிஸார் கைது செய்து மன்னார் மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர். மாவட்ட நீதவான் பி. சிவக்குமார் சந்தேகநபர்கள் அனைவரையும் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான சரீரப்பிணையில் செல்ல உத்தரவிட்டார்.
ஏப். 07 15:52

பாரம்பரியக் காணிகளை இலங்கை இராணுவம் தொடர்ந்து அபகரிக்க முடியாது- சிவாஜிலிங்கம்

(யாழ்ப்பாணம், ஈழம்) யாழ்ப்பாணம் மிருசுவில் எழுதுமட்டுவாழ் பகுதியில் இலங்கை இராணுவம் நிலைகொண்டுள்ள தனியார் காணியை நிரந்தரமாகவே சூறையாடும் நோக்கில் கடந்த திங்கள் மேற்கொள்ளப்பட்ட நில அளவை அப்பகுதி மக்களின் எதிர்ப்பு போராட்டத்தினால் கைவிடப்பட்டதாகவும் மீண்டும் அப்பகுதியை நில அளவை செய்ய இராணுவம் முற்பட்டால் மக்கள் அதற்கும் தமது எதிர்ப்பைத் தெரிவிப்பர் என யாழ்ப்பாணம் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார். தமிழர்களின் பாரம்பரியக் காணிளை இராணுவம் அபகரிக்க அனுமதிக்க முடியாதென்றும் அவர் கூறினார்.
ஏப். 06 09:06

வெளிநாட்டு இராஜதந்திரிகள் ஆயர் இராஜப்பு ஜோசப்பின் இறுதி நிகழ்வில் பங்குபற்றவில்லை

(மன்னார், ஈழம் ) ஆயர் இராயப்பு ஜோசப் தமிழ் மக்களின் வரலாற்றில் மறக்க முடியாத ஒருவர் என்றும் தேசியம், தாயகம், சுயநிர்ணய உரிமை அடிப்படையில் ஆயருடைய பணிகளைத் தொடர்வோம் எனவும் கூறிச் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் சத்தியப்பிரமாணம் செய்துள்ளனர். சென் செபஸ்தியார் பேராலயத்தில் ஆயர் இராஜப்பு யோசப்பின் புகழுடல் அடக்கம் செய்யப்பட்ட சமாதியில் நின்று சத்தியப்பிரமாணம் இடம்பெற்றது. வேலன் சுவாமிகள் உள்ளிட்ட பிரமுகர்கள் இவ்வாறு சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டனர். இன அழிப்பு என்பதை சர்வதேச அரங்கில் வெளிப்படுத்தி ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை அகிம்சை வழியில் முன்னெடுத்த ஆயர் இராஜப்பு ஜோசப் நினைவாக அவருடைய உருவச் சிலை ஒன்றும் மன்னார் நகரில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஏப். 04 23:01

மன்னார் இளைஞர்கள் இருவர் இராமேஸ்வரத்தில் கைது

(மன்னார், ஈழம் ) இலங்கையில் இருந்து பாக்கு நீரிணையூடாக இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தனுஷ்கோடி அரிச்சல்முனைக் கரையைச் சென்றடைந்த இரண்டு தமிழ் இளைஞர்களை இராமேஸ்வரம் சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ள நிலையில் இலங்கைப் பொலிஸாரும் தேசிய புலனாய்வு பிரிவினரும் மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கின் அடம்பன் பகுதியில் குறித்த இளைஞர்கள் தொடர்பில் விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்துள்ளதாக அடம்பன் பொலிஸ் வட்டாரங்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தன.
ஏப். 04 20:48

மன்னார் ஒல்லாந்தர் கோட்டையைச் சூழவுள்ள மக்களை வெளியேற்ற உத்தரவு

(மன்னார், ஈழம் ) வட மாகாணம் மன்னார் நகரில் அமைந்துள்ள ஒல்லாந்தர் கோட்டையைச் சூழவுள்ள பகுதியில் குடியிருக்கும் பொது மக்களையும் அப்பகுதியில் நிலை கொண்டுள்ள பொலிஸாரையும் வெளியேற்றி அங்கு அமைந்துள்ள முஸ்லிம் பள்ளிவாசலையும் அகற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கொழும்பை மையமாகக் கொண்ட இலங்கைத் தொல் பொருட்கள் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவபாலன் குணபாலன் கூர்மைச் செய்தித்தளத்திற்கு தெரிவித்தார்.
ஏப். 03 10:06

ஆயர் இராஜப்பு ஜோசப்பின் புகழுடல் செபஸ்தியார் பேராலயத்தில் திங்கட்கிழமை நல்லடக்கம்

(மன்னார், ஈழம் ) வட மாகாணம் மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் மேதகு இராயப்பு ஜோசப் அவர்களின் இறுதி சடங்கு நாளை மறுதினம் திங்கட்கிழமை மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் பிற்பகல் மூன்று மணிக்கு நடைபெறவுள்ளது. திருப்பலியுடன் ஆரம்பித்து அனைத்து ஆராதனைகளின் நிறைவில் ஆயரின் புகழுடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக மன்னார் மறை மாவட்ட ஆயர் கலாநிதி எப். எல். இமானுவேல் பெர்னாண்டோ கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார். கொழும்பில் உள்ள இலங்கைக் கத்தோலிக்கத் திருச்சபையின் பேராயர் கர்தினால் மல்க்கம் ரஞ்ஜித் உட்பட இலங்கைத்தீவின் அனைத்து மறை மாவட்டங்களின் ஆயர்களும் கலந்துகொள்வார்கள் என்றும் ஆயர் இமானுவல் கூறினார்.
ஏப். 02 18:44

வடக்குக் கிழக்கின் எல்லையைத் தீர்மானித்த தமிழ்த் திருச்சபை

(வவுனியா, ஈழம்) ஈழத்தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கான போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் ஆயர் இராயப்பு ஜோசப் மரணிக்கும் வரையும் அதன் பின்னரான சூழலிலும் தமிழ்க் கத்தோலிக்கத் திருச்சபையின் பங்களிப்பு முக்கியமானதொன்று என்பதில் மாற்றுக்கருத்தில்லை. சமய அடிப்படையில் வடக்குக் கிழக்குத் தமிழ்ச் சமூகத்திற்குள் சிங்கள ஆட்சியாளர்களினால் உருவாக்க முற்பட்ட பிரித்தாளும் தந்திரங்களை அறிந்து, அதனைப் புறம்தள்ளிச் சமயங்களைக் கடந்து ஈழத்தமிழ்ச் சமூகமாக வடக்குக் கிழக்கில் கத்தோலிக்கத் திருச்சபையும் ஏனைய சில கிறிஸ்தவ சபைகளும் செயற்பட்டிருந்ததை மறுப்பதற்கில்லை.