(வவுனியா, ஈழம்)
ஜோன் கொத்தலாவ தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழக நகல் சட்ட மூலத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கப் பிரதிநிதிகள், மாணவர்கள் பலர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இலங்கை ஒற்றையாட்சி அரசின் பாராளுமன்றத்தில் இந்தச் சட்டமூலம் தொடர்பான விவாதம் இன்று வியாழக் கிழமை இடம்பெற்றபோது பாராளுமன்றத்திற்குச் செல்லும் பொல்துவ சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் கொவிட் 19 நோய்ப் பரவலைத் தடுக்கும் சுகாதார விதிகளுக்கு முரணானது என பொலிஸாரால் குற்றம் சுமத்தப்பட்டது. இலங்கை ஆசிரியர் சங்கம், பல்கலைக்கழக மாணவர் அமைப்புகள், ஊடக தொழிற் சங்கங்கள், அரச தொழிற் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.