நிரல்
செப். 04 22:37

சந்தேக நபர்களை விசாரணை செய்ய விசேட நீதிபதிகள் குழு

(மன்னார், ஈழம்) இலங்கையில் 2019ஆம் ஆண்டு நிகழ்ந்த உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் கைதானவர்களில் 26 சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கினை ட்ரயல் அட் பார் முறையில் விசாரணை செய்ய மூன்று நீதிபதிகள் கொண்ட விஷேட குழுவொன்றை பிரதம நீதியரசர் ஜெயந்த ஜெயசூரிய கடந்த மாதம் நியமனம் செய்துள்ளார். கொழும்பு மேல் நீதிமன்ற தலைமை நீதிபதி தமித் தொட்டவத்த தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அமல் ரணராஜ மற்றும் நவரத்ன மாரசிங்க ஆகிய மூவர் கொண்ட நீதிபதிகள் குழாமே உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக பிரதம நீதியரசரினால் கடந்த வாரம் நியமிக்கப்பட்டுள்ளனர்.
செப். 03 22:32

மன்னாரில் கொவிட் தொற்றால் மரணிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு

(மன்னார், ஈழம்) இலங்கையின் வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் கொவிட்- 19 நோய்த் தொற்றினால் மரணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதினால் மன்னார் நகரில் முப்பது மில்லியன் ரூபா செலவில் புதிய மின் மயானம் ஒன்றினை அமைப்பதற்கும், அதற்கு தேவையான புதிய வாகனமொன்றினைக் கொள்வனவு செய்வதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மன்னார் மாவட்டத்தில் அதி தீவிரமாகக் கொரோனா நோய்த் தொற்றுப் பரவிவரும் நிலையில் குறித்த நோய்த் தொற்றினால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட மன்னார் பொது வைத்தியசாலையில் ஒரே நாளில் நால்வர் மரணமடைந்திருந்தனர்.
செப். 02 22:44

அவசரகாலச் சட்டம்- பாராளுமன்றத்தில் விவாதம்

(வவுனியா, ஈழம்) அவசரகாலச் சட்டம் தொடர்பாக விவாதிப்பதற்கு இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றம் எதிர்வரும் 6 ஆம் 7 ஆம் திகதிகளில் கூடவுள்ளது. நாடாளுமன்றத்தைக் கூட்டுவது தொடர்பாக இன்று வியாழக்கிழமை சபாநாயகர் மகிந்த யாப்பா அபயவர்த்தன தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதன்போது அவசரகாலச் சட்டத்தை ஜனாதிபதி அமுல்படுத்தியமை தொடர்பாக இரண்டு நாள் விவாதம் நடத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரியிருந்தன. இதனை ஏற்றுக் கொண்ட சபாநாயகர் விவாதத்திற்குச் சம்மதம் தெரிவித்தார்.
செப். 01 20:50

வேகமாகப் பரவும் கொவிட். இரண்டு நாட்களில் 409 பேர் மரணம்

(வவுனியா, ஈழம்) இலங்கைத்தீவில் கொவிட் நோய்ப்பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் தற்போது நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மேலும் இரண்டு வாரங்கள் நீடிப்பதென அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஆனாலும் புதன்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இறுதி முடிவெடுக்கப்பட்டு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுமென அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன. நேற்றுச் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வரையான 24 மணி நேரத்தில் 215 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத் திணைக்களம் இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளது.
ஓகஸ்ட் 31 20:27

வடமாகாணத்தில் உள்ள விகாரைகளுக்குப் புத்தர் சிலைகளை அன்பளிப்புச் செய்யுமாறு பணிப்பு

(மன்னார், ஈழம்) ஜனாதிபதியாக கோட்டபய ராஜபக்ச தெரிவாகி எதிர்வரும் நவம்பர் மாதம் 18ஆம் திகதியுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியடையும் நிலையில் அதனை அனுஷ்டிக்கும் முகமாக தமிழர் தாயகமான வட மாகாணத்தில் உள்ள பௌத்த விகாரைகளுக்கு புத்தர் சிலைகளை அன்பளிப்புச் செய்ய வேண்டும் என இலங்கைப் போக்குவரத்துச் சபை ஊழியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய கோட்டபய ராஜபக்ச ஐனாதிபதியாகப் பதவி பிரமாணம் செய்து எதிர்வரும் நவம்பர் மாதம் 18ஆம் திகதியுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியடைகின்றது. இந்த நிலையில் இதனை அனுஷ்டிக்கும் வகையில் ஆளும் கட்சியின் தொழிற் சங்கமான வட மாகாண பொதுஜன பெரமுன போக்குவரத்துச் சபை ஊழியர் சங்கம் ஏற்பாடுகளைக் மேற்கொண்டு வருகிறது.
ஓகஸ்ட் 31 20:00

அவசரகாலச் சட்டத்தை பிரகடனப்படுத்தினார் ஜனாதிபதி- அனைத்து அதிகாரங்களையும் கையிலெடுத்தார்

(மன்னார், ஈழம்) அத்தியாவசிய உணவுத் தேவைகள் உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கையாளக்கூடிய முறையில் அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கையொப்பமிட்ட இலங்கை ஒற்றையாட்சி அரச வர்த்தமானி இன்று செய்வாய்க்கிழமை நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவில் இருந்து அவசரகாலப் பிரகடனம் நடைமுறைக்கு வரவுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகமாக, மேஜர் ஜெனரல் எம்.டீ.எஸ்.பி.நிவுன்ஹெல்ல ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் உத்தரவின்படி இவர் இன்று நள்ளிரவில் இருந்து செயற்படவுள்ளார்.
ஓகஸ்ட் 31 12:22

ஆடு, மாடு, கோழிகள் தேவையில்லை- அரசாங்கத்திடம் உறவினர்கள் கடும் ஆட்சேபம்

(மன்னார், ஈழம்) இலங்கைப் படையினரால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்கள் மற்றும் அவர்களது நெருங்கிய குடும்ப உறவுகள் தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என பல வருடங்களாக அங்கலாய்த்து வரும் நிலையில், காணாமல் ஆக்கப்பட்டோரைக் கண்டறியும் அலுவலகத்தின் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட தாய்மார்களிடம் ஆடு மாடுகள் மற்றும் கோழிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி அது தொடர்பான பதிவுகளை மேற்கொண்டு வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடும் சங்கத்தின் தலைவி திருமதி மனுவல் உதயச்சந்திரா பகிரங்கமாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஓகஸ்ட் 30 20:58

ஜெனீவா அமர்வை வெற்றிகொள்ளும்- அமைச்சர் பீரிஸ்

(வவுனியா, ஈழம்) ஜெனீவா மனித உரிமைச் சபை அமர்வில் வருடம் தோறும் முன்வைக்கப்படும் இலங்கை அரசாங்கத்தின் மீதான குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என்று வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜெனீவா அமர்வை இலகுவாக வெற்றிகௌ்ள முடியுமெனவும் அவர் கூறினார். கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஜெனீவா அமர்வு தொடர்பாக விளக்கமளித்த அமைச்சர் பேராசிரியர் பீரிஸ், சர்வதேச நாடுகள் இலங்கை விவகாரத்தில் தலையிட முடியாதெனவும் கூறினார்.
ஓகஸ்ட் 29 15:34

ஐந்து மாவட்டங்களிலும் கொவிட் வேகமாகப் பரவுகின்றது

(மன்னார், ஈழம்) இலங்கையின் தமிழர் தாயகப் பகுதியான வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் கொவிட் -19 நோய்த் தொற்று அதி தீவிரமாகப் பரவிவரும் நிலையில், வட மாகாணத்தில் இயங்கிவரும் பல கொரோனா சிகிச்சை மையங்கள் நிரம்பி வழிவதனால், மன்னார் மாவட்டத்தில் மேலும் ஒரு கொவிட்- 19 இடை நிலைச் சிகிச்சை நிலையமொன்று இலங்கை இராணுவத்தினரால் மிக வேகமாக அமைக்கப்பட்டு வருகிறது. மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட நறுவிலிக்குளம் பகுதியில் உள்ள மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையின் நோயாளர் விடுதிகளிலேயே குறித்த கொவிட்-19 இடைநிலைச் சிகிச்சை நிலையமொன்று இலங்கை இராணுவத்தினரால் அமைக்கப்பட்டு வருகிறது.
ஓகஸ்ட் 28 18:43

யாழ்ப்பாணத்தில் இதுவரை 224 பேர் மரணம்

(யாழ்ப்பாணம், ஈழம்) வட மாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் கொவிட் -19 நோய் தொற்று மக்கள் மத்தியில் மிக வேகமாக பரவிவரும் நிலையில் கடந்த வெள்ளிவரை 224 மரணங்கள் யாழ் மாவட்டத்தில் சம்பவித்துள்ளதாகவும் வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் நிகழ்ந்த மொத்த கொவிட் மரணங்களில் 75 வீதமான மரணங்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளதாகவும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.