நிரல்
செப். 11 21:38

ராஜபக்ச குடும்பத்தை ரணில் காப்பாற்றுகிறார்- சஜித் குற்றச்சாட்டு

(வவுனியா, ஈழம்) சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை வெளிப்படுத்த ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் தயங்குவதாகக் குற்றம் சுமத்தியுள்ள பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் பல விடயங்கள் அதில் உள்ளதாகவும் தெரிவித்திருந்தது. இந்த ஒப்பந்தத்தில் ராஜபக்சவை மையப்படுத்திய ஸ்ரீலங்காப் பொதுஸனப் பெரமுனக் கட்சிக்கும் உடன்பாடில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைகளை பொருட்படுத்தாமல், ரணில் விக்கிரமசிங்க பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அடிபணிந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
செப். 10 22:22

ரணில் அரசாங்கத்துக்கு எதிராக பௌத்த குருமார் ஆர்ப்பாட்டம்

(யாழ்ப்பாணம், ஈழம்) ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்துக்கு எதிராகக் கொழும்பில் பௌத்த குருமார் மாபெரும் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வசந்த முதலிகே, சிறிதர்ம தேரர் மற்றும் பலர் கைது செய்யப்பட்டதற்கு எதிராகவே பௌத்த குருமார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். கொழும்பு ஸ்ரீ போதிராஜா மாவத்தையில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் தொடர்ச்சியாக நடத்தப்படுமென பௌத்த குருமார் கூறியுள்ளனர். சனிக்கிழமையும் பௌத்த குருமாரின் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
செப். 08 09:10

போர்க்குற்றவாளிகள் வெளிநாடுகளுக்குச் சென்றால் அந்தந்த நாடுகளில் விசாரணை நடத்தும் புதிய பொறிமுறை

(மட்டக்களப்பு, ஈழம்) ஈழத்தமிழர்களின் இன அழிப்பு விசாரணைக் கேரிக்கைகள் மாத்திரமல்ல, போர்க்குற்றங்களுக்கான சர்வதேச விசாரணைப் பொறிமுறையைக்கூட நீத்துப் போகச் செய்யும் நோக்கிலேயே ஜெனீவா மனித உரிமைச் சபையும் அமெரிக்கா போன்ற மேற்குலகமும் ஐரோப்பிய நாடுகளும் மற்றும் இந்தியாவும் செயற்படுகின்றன என்பது தற்போது பகிரங்கமாகவே வெளிப்பட்டுள்ளன. யுனிவேர்சல் யூறிஸ்டிக்சன் (Universal Jurisdiction) எனப்படும் முழு நிறை நியாயாதிக்க விசாரணை என்பதன் ஊடாகப் போர்க் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் விசாரணை செய்யப்பட வேண்டுமென ஜெனீவா மனித உரிமைச் சபை ஆணையாளர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் பரிந்துரைத்துள்ளார். இப் பரிந்துரை சர்வதேச விசாரணை என்பதில் இருந்து கீழ் இறங்கிவரும் ஏற்பாடாகவே காணப்படுகின்றது.
செப். 07 09:13

ரணில் அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சர்கள் நியமனம்

(வவுனியா, ஈழம்) ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன. முப்பத்து ஐந்து இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சியுடன் ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இராஜாங்க அமைச்சர்கள் பதவிக்காக சிறிலங்கா பொதுஜன பெரமுன பரிந்துரைத்த தமது தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியல் ஒன்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் சமர்ப்பித்துள்ளதாக பெதுஜன பெரமுனக் கட்சி கூறியுள்ளது.
செப். 06 09:22

இந்தியா வழங்கியதையும்விட குறைவான நிதியுதவிகளை வழங்கிய சர்வதேச நாணய நிதியம்

(வவுனியா, ஈழம்) இந்தியா ஆறு மாதங்களுக்குள் இலங்கைக்கு வழங்கிய சுமார் நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்களையும் விட அரைவாசித் தொகையை மாத்திரமே ஐ.எம்.எப் எனப்படும் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கியிருக்கின்றது. அதுவும் இலங்கை அரசாங்கம் உறுதியளித்தபடி தனது பொருளாதார சீர்திருத்தங்களை தொடர்ந்தால் மாத்திரமே தீர்மானிக்கப்பட்ட நிதியை வழங்க முடியுமென ஐ.எம்.எப் மூத்த அதிகாரி பீற்றர் ப்ரூயர் (Peter Breuer) கூறுகிறார். நீண்ட பாதையின் ஒரு ஆரம்பம் மாத்திரமே எனவும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். ஆகவே இரண்டு தசம் ஒன்பது பில்லியன் டொலர்களை வழங்குவதற்கான ஒப்பந்தம் ஒன்றைச் செய்தாலும், மெதுவான எச்சரிக்கை ஒன்றையும் ஐ.எம்.எப் இலங்கைக்கு விட்டுச் சென்றிருக்கின்றது.
செப். 05 21:40

சர்வதேச விசாரணைப் பொறிமுறை நிராகரிக்கப்படும்- வெளியுறவு அமைச்சர் அமைச்சர் அலி சப்ரி அறிவிப்பு

(வவுனியா, ஈழம்) போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பான விசாரணை செய்வதற்கான சர்வதேசப் பொறிமுறையை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாதென வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அறிவித்துள்ளார். கொழும்பில் இன்று திங்கட்கிழமை முற்பகல் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஜெனீவா மனித உரிமைச் சபை அமர்வு தொடர்பாக விளக்கமளித்தபோதே அமைச்சர் அலி சப்ரி இவ்வாறு கூறினார். இலங்கையின் மீது ஜெனீவா மற்றும் சர்வதேச நாடுகளினால் வலுக்கட்டாயமாக திணிக்கப்படும் எந்தவொரு தீர்வுகளையும் இலங்கை அரசியல் யாப்புக்கு முரணான நடவடிக்கைகளையும் அரசாங்கம் எதிர்க்கும் என்றும் அமைச்சர் கூறினார்.
செப். 04 08:42

ஜெனீவாவுக்குக் கணக்குக் காட்ட அரசாங்கத்துக்கு வசதியாக அமைந்த யாழ் ஆயர் யஸ்ரின் - ரணில் சந்திப்பு

(யாழ்ப்பாணம், ஈழம்) ஜெனீவா மனித உரிமைச் சபையின் அமர்வு எதிர்வரும் பன்னிரெண்டாம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில். இலங்கை ஒற்றையாட்சி அரசின் புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ் ஆயர் யஸ்ரின் ஞானப்பிரகாசத்தைச் சென்ற பதினெட்டாம் திகதி ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து உரையாடியிருக்கிறார். இச் சந்திப்புக்கு ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்தாரா அல்லது ஆயர் யஸ்ரின் சந்திப்பதற்கான நேரத்தைக் கேட்டெடுத்தாரா என்று தெரியவில்லை. ஆனாலும் இச் சந்திப்பின் மூலம் இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் சார்பாகக் கவனம் எடுக்கின்றது என்ற ஒரு பொய்யான பரப்புரையைச் சர்வதேச அரங்கில் மேற்கொள்வதற்கு வசதியாக அமைந்துள்ளது.
செப். 03 14:47

விடுதலைப் போராட்டத்தைத் திரைப்படமாக எடுக்க முற்படுவோர் கவனிக்க வேண்டியதென்ன?

(யாழ்ப்பாணம், ஈழம்) தமிழ்த்தேசிய அரசியல் விடுதலைப் போராட்டம், தமிழர் வாழ்வுரிமை மறுப்புத் தொடர்பான கோட்பாட்டு விளக்கங்களை மையமாகக் கொண்டது. அதனைக் குழப்புவதற்கான புவிசார் அரசியல் - பொருளாதாரப் பின்னணிகளும் உண்டு. ஆகவே தேசிய விடுதலைப் போராட்டம் தொடர்பாகப் படம் எடுக்க முற்படுவோர் இப் பின்புலங்களின் அடிப்படையைக் கொண்டே கதை வசனங்களை அமைக்க வேண்டும். தனியே வன்முறைக் காட்சிகளாக மாத்திரம் காண்பித்து உணர்ச்சிகரமாகச் சித்தரிப்பது வரலாற்றுத் தவறு. ஆனால் தாக்குதலின்போது கையாளப்பட்ட மரபுவழி இராணுவத் தந்திரோபாயங்கள், (Military Strategies) தாக்குதல் உத்திகள் (Attack Tactics) பற்றிய இராணுவ அறிவுரீதியான நுட்பங்களைப் படத்தில் வெளிப்படுத்த வேண்டும்.
செப். 02 22:10

நாடாளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்டம் நிறைவேற்றம்

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலங்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த அடுத்த நான்கு மாதங்களுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் நூற்றுப் பதினைந்து வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்ற ஓகஸ்ட் மாதம் முப்பதாம் திகதி வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது. முப்பத்து ஒராம் திகதி ஆரம்பித்த விவாதம் வெள்ளிக்கிழமை இரண்டாம் திகதி வரை மூன்று நாட்கள் நடைபெற்றன. நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ஆதரவாக 120 வாக்குகளும், எதிராக ஐந்து வாக்குகளும் பெறப்பட்டன.
ஓகஸ்ட் 31 09:18

சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்

(வவுனியா, ஈழம்) நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைத்தீவுக்கான அவசரகால கடன் சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்படவுள்ளது. இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை வியாழக்கிழமை விடுக்கப்படுமென கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுப் பெற்ற கடன்களைச் சுமையாகக் கொண்டுள்ள இலங்கை, நாணய நிதியத்திடமிருந்து மூன்று பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைக் கோரியிருந்தது. அத்தியாவசியப் பொருட்களுக்கான விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அவசரகாலக் கடன் உதவிகள் கோரப்பட்டுள்ளதால், அது குறித்துப் பரிசீலிக்கப்பட்டு வருவதாகக் கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன.