நிரல்
டிச. 12 15:46

ரணில் விக்கிரமசிங்க மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு 117 வாக்குகளால் வெற்றி -ஜே.பி.வி பங்குகொள்ளவில்லை

(யாழ்ப்பாணம், ஈழம்) ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசாவினால் சபையில் முன்வைக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க மீதான நம்பிக்கை பிரேரணை இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று 117 வாக்குகளால் வெற்றிபெற்றுள்ளது. இலத்திரனியல் முறைப்படியும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெயர் குறிப்பிட்டு அழைக்கப்பட்டும் வாக்களிப்பு இடம்பெற்றதாக நாடாளுமன்றச் செய்தியாளர் ஒருவர் குறிப்பிட்டார். எனினும் இன்றைய தினம் இடம்பெற்ற வாக்கெடுப்பில் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 117 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ள நிலையில் ஜே.வி.பி எனப்படும் மக்கள் விடுதலை முன்னணியினர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை என்றும் நாடாளுமன்றச் செய்தியாளர் தெரிவித்தார்.
டிச. 12 13:30

மன்னார் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளை ஐ.நா பொறுப்பேற்க வேண்டுமெனக் கோரி போராட்டம்

(மன்னார், ஈழம்) வடமாகாணம் - மன்னார் நகர நுழைவாயிலிலுள்ள சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட போர்க்காலத்திற்குரியதாகக் கருதப்படும் மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளை, ஐக்கிய நாடுகள் சபை பொறுப்பேற்க வேண்டும் எனக் கோரி மன்னார் மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக அமைதியான கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று புதன்கிழமை வட கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற போராட்டத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டனர். தமிழர் தாயகப் பகுதியான வடக்கு - கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கங்களின் பிரதிநிதிகள், அரசியல் கைதிகளின் உறவினர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
டிச. 12 11:22

விடுதலைக்காக ஆயுதம் ஏந்திய முன்னாள் போராளிகள் அன்றாட வாழ்க்கையைக் கொண்டு நடத்த முடியாது நிர்க்கதி

(மன்னார், ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தினால் சர்வதேச நாடுகளின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பைத் தொடர்ந்து இலங்கையின் அப்போதிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உத்தரவுக்கமைய, ஒரு நாளேனும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் அங்கத்துவம் வகித்திருந்தாலோ அல்லது அவர்களுக்கு உதவியிருந்தாலோ கைதுசெய்யப்பட வேண்டும் என்ற உத்தரவுக்கு அமைய கைதுசெய்யப்பட்டு சித்திரவதை முகாம்களான தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள, தமிழ் மக்களின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள், இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படும் நலத்திட்டங்களில் புறக்கணிக்கப்படுவதாக விசனம் வெளியிட்டுள்ளனர்.
டிச. 12 09:31

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம் மைத்திரிபால சிறிசேனவின் வாக்குறுதியை அடுத்து கைவிடப்பட்டுள்ளது

(கிளிநொச்சி, ஈழம்) தமது அடிப்படைச் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக பெற்றுத்தருமாறு வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த தோட்டத் தொழிலாளர்களின் போராட்டம், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வாக்குறுதியை அடுத்து கைவிடப்பட்டுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கும் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது. இந்த சந்திப்பின்போது, எதிர்வரும் 19 ஆம் திகதி முதலாளிமார் சம்மேளனத்துடன் கலந்துரையாடி சிறந்த தீர்வொன்றைப் பெற்றுத் தருவதாக ஜனாதிபதி வாக்குறுதியளித்துள்ளார். இதனடிப்படையிலேயே, பெருந்தோட்டத் தொழிலாளர்கள் முன்னெடுத்த வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக கொழும்பு செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார்.
டிச. 11 23:30

ரணிலை பிரதமராக நியமிக்குமாறு கோரி பிரேரணை- மகிந்த தரப்பு புறக்கணிக்கவுள்ளதாக அறிவிப்பு

(அம்பாறை, ஈழம்) நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை அரசியல் யாப்புக்கு முரணானது என்று குறிப்பிட்டு இலங்கை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில், நாளை புதன்கிழமை நாடாளுமன்றம் கூடுகின்றது. அத்துடன் மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டமையும் சட்டத்திற்கு மாறானது எனக்குறிப்பிட்டு கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையும் எதிர்வரும் ஜனவரி மாதம் ஏழாம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாளை கூடவுள்ள நாடாளுமன்ற அமர்வில் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்குமாறு கோரி பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஏற்கனவே 122 உறுப்பினர்கள் கையொப்பமிட்டு சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கடிதம் ஒன்றைக் கையளித்திருந்தனர்.
டிச. 11 12:17

இந்திய ஒன்றியத்தின் 5 மாநிலத் தேர்தல் - பெரும் பின்னடைவைச் சந்திக்கிறது பாஜக!

(சென்னை, தமிழ்நாடு) 2019 இல் இந்திய ஒன்றிய நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கிறச் சூழலில், 5 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி பின்னடவைச் சந்தித்திருகிறது. 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த சத்தீஸ்கர் மாநிலத்தில், காங்கிரஸ் கட்சியிடம் பாஜக ஆட்சியை இழக்கிறது. 15 ஆண்டுகளாக கோலோச்சிய மத்தியப் பிரதேச மாநிலத்தில் முந்தையக் காலக்கட்டத்தை விட குறைந்த எண்ணிகையிலான இடத்தையே பாஜக பெற்றுள்ளது. வடகிழக்கு மாகாணத்தில், மிசோரம் மாநிலத்தில் மிசோ தேசிய முன்னணி ஆட்சியமைக்கிறது. 1956 முதல் 1986 வரை கிளர்ச்சிப் படையாக இருந்து, இந்திய ஒன்றிய அரசுடனான ஒப்பந்தத்தில் பேரில் தேர்தல் பாதைக்கு திரும்பியது இக்கட்சி என்பது குறிப்பிடத்தக்கது!
டிச. 11 11:53

சுன்னாகத்தில் பொலிஸாருக்கு வழங்க மறுத்த காணியில் உள்ள உடற்பயிற்சி நிலையம் மீது தாக்குதல் - பொருட்களும் தீக்கிரை

(யாழ்ப்பாணம், ஈழம்) தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு போரின் போதும் அதற்குப் பின்னரான காலப்பகுதியிலும் மக்களது பூர்வீக நிலங்கள் இலங்கை இராணுவம் உட்பட அரச தரப்பினரால் அபகரிக்கப்பட்டுவரும் நிலையில், யாழ்ப்பாணம் - சுன்னாகம் பொலிஸ் நிலையத்தை அமைப்பதற்கு பொதுமகன் ஒருவரது காணியை சுவீகரிப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தியதையடுத்து, நேற்று திங்கட்கிழமை இரவு குறித்த காணியில் இயங்கிவரும் உடற்பயிற்சி நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அங்கிருந்த பொருட்கள் எரியூட்டப்பட்டுள்ளன.
டிச. 10 22:07

மன்னார் போர்க்கால புதைகுழியில் இருந்து மேலும் பல எலும்புக் கூடுகள் மீட்பு - அகழ்வுப் பணி தொடர்கிறது

(மன்னார், ஈழம்) மன்னார் நகர நுழைவாசலில் கண்டுபிடிக்கப்பட்ட போரக்கால மனிதப் புதைகுழியில் இருந்து இன்று வரை 266 எலும்புகள் அடையாளப்படுத்தப்பட்டு அவற்றில் 260 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. இன்று திங்கட்கிழமை 114 ஆவது நாளாகவும் அகழ்வுப்பணிகள் இடம்பெற்றன. கடந்த வாரம் மன்னார் சதொச மனிதப் புதைகுழியிலிருந்து விலங்கிடப்பட்டவாறு மீட்கப்பட்ட மனிதக் கால் எலும்புகள் மன்னார் நீதிமன்ற உத்தரவின்படி இலங்கைப் பொலிஸாரால் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அத்துடன் கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் புதைகுழியிலிருந்து தங்க முலாமிடப்பட்ட பெண்கள் அணியும் மோதிரம் ஒன்றும் மீட்கப்பட்டிருந்தது.
டிச. 10 16:09

கொழும்பு - மோதரை பகுதியில் துப்பாக்கிச்சூடு - பெண் உட்பட ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி

(கிளிநொச்சி, ஈழம்) கொழும்பு -மட்டக்குழிய மோதரை பகுதியில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் பெண் ஒருவர் உட்பட ஐந்து பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பொலிஸ் அத்தியேட்சகர் ருவான் குணசேகர உறுதிப்படுத்தியுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் முச்சக்கரவண்டியில் பயணித்தோர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை சம்பவ இடத்திற்குச் சென்ற மோதர பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக்காண காரணங்கள் தெரியவில்லை என்றும் பாதாளஉலக குழுவின் கைவரிசையாக இருக்கலாம் எனவும் மோத பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
டிச. 10 14:32

காணிகளுக்கான உரிமைப்பத்திரங்கள் மற்றும் இராணுவத்தால் சுவீகரிக்கப்பட்டுள்ள காணிகளைக் கோரி மூதூரில் போராட்டம்

(திருகோணமலை, ஈழம்) கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக மறுக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை வலியுறுத்தி தமிழ் மக்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்துவரும் நிலையில் சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று இலங்கை இராணுவத்தினால் சுவீகரிக்கப்பட்டுள்ள தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறும் தமக்காக காணி உரிமைப் பத்திரங்களை வழங்குமாறும் வலியுறுத்தி கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மூதூர் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது. மூதூரிலுள்ள சம்பூர் - கங்குவேலி படுகாடு காணிகளுக்கான ஆவணங்களை வழங்குமாறு வலியுறுத்தி மூதூர் பிரதேச செயலகத்தின் முன்னால் இன்று காலை ஜனநாயக மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் பொது மக்களால் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.