நிரல்
ஜன. 22 21:34

இலங்கையில் நெருக்கடிக்குள்ளாகி வரும் சிங்கள அரசியல் கட்சிகள் - சந்திரிக்கா புதிய கட்சியை ஆரம்பிக்கின்றார்?

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிக்கவுள்ளார். தனது தந்தையான எஸ்.டபிள்யு.ஆர்.டி பண்டாரநாயக்காவினால் ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினரான சந்திரிக்கா அந்தக் கட்சியில் இருந்து விலகி புதிய கட்சியை ஆரம்பிப்பார் என்றும் அது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தன்னுடன் ஒத்துழைக்கக் கூடிய மூத்த உறுப்பினர்களுடன் பேச்சு நடத்தியுள்ளதாகவும் கட்சித் தகவல்கள் கூறுகின்றன. மகிந்த ராஜபக்சவுடன் ஏலவே முரண்பாடுகள் இருந்தன. ஆனாலும் மைத்திரிபால சிறிசேனவுடன் சமீபகாலமாக ஏற்பட்ட முரண்பாடுகள் குழப்பங்களினால் சந்திரிக்கா அதிருப்தியடைந்துள்ளதாக கட்சியின் உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.
ஜன. 22 21:19

வவுனியா - விபுலானந்தாக் கல்லூரிக்கு மைதானத்தைப் பெற்றுத்தருமாறு வலியுறுத்தி வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்

(வவுனியா, ஈழம்) வவுனியா விபுலானந்தாக் கல்லூரிக்கு நிரந்தர மைதானத்தைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி, பாடசாலைக்கு முன்பாக வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. வவுனியாவில் உள்ள பிரபல பாடசாலைகளில் ஒன்றான விபுலானந்தாக் கல்லூரிக்கு மைதானமொன்றை வழங்குமாறு கடந்த பல வருடங்களாக வலியுறுத்தி போராட்டங்களை முன்னெடுத்த போதும், இதுவரை எவ்வித தீர்வும் வழங்கப்படாத நிலையில், இன்றைய தினம் பண்டாரிகுளம் வீதியை மறித்து பெற்றோர், பழைய மாணவர்கள் மற்றும் பாடசாலை நலன்விரும்பிகள் இணைந்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
ஜன. 21 11:52

கிளிநொச்சி - பளையில் புனர்வாழ்வின் பின் விடுதலையான முன்னாள் போராளி கைது - ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக குற்றச்சாட்டு

(கிளிநொச்சி, ஈழம்) இலங்கையில் 2009 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு போருடன் தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக ஒழித்து விட்டதாகவும் ஆயுதப் போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டதாகவும் தெரிவித்த இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கம் பல ஆயிரக்கணக்கான முன்னாள் விடுலைப் புலி போராளிகளைக் கொன்று குவித்துள்ளதுடன், ஆயிரக்கணக்கானோரை காணாமல் ஆக்கியுள்ள நிலையில், தற்போதும் சந்தேகத்தின் அடிப்படையில் முன்னாள் போராளி ஒருவரைக் கைதுசெய்துள்ளது.
ஜன. 21 10:56

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புடன் கூடிய கண்டனப் போராட்டம்

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புடன் கூடிய கண்டனப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொது அமைப்புக்களின் ஒழுங்குபடுத்தலில் யாழ்ப்பாணம் வேம்படி சந்திக்கு அருகாமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 அளவில் ஒன்று கூடிய போராட்டக்காரர்கள், பேரணியாக யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் வரை சென்று அங்கு கண்டனப் போராட்டத்தை மேற்கொண்டனர்.
ஜன. 21 09:57

பூகோள அரசியல் நகர்வுகளுக்கு ஏற்ப விக்னேஸ்வரன் உருவாக்கிய தமிழ் மக்கள் கூட்டணி செயற்படுமா?

(யாழ்ப்பாணம், ஈழம் ) வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆரம்பித்துள்ள தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது செயற்குழுக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழ் மக்கள் பேரவையை உருவாக்கிய விக்னேஸ்வரன் தற்போது அதில் இருந்து வெளியேறி தமிழ் மக்கள் கூட்டணியை உருவாக்கியுள்ளார். ஆனால் தமிழ் மக்கள் பேரவையில் அவருக்கு ஆதரவாகச் செயற்பட்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட பலர் அவருடைய புதிய கட்சியுடன் கூட்டுச் சேரவில்லை. சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப் மாத்திரமே ஆதரவு வழங்கியுள்ளது. சுயாட்சிக் கழகம் என்ற கட்சியை உருவாக்கிய அனந்தி சசிதரன் இதுவரை ஆதரவு வழங்கவில்லை.
ஜன. 21 09:45

மைத்திரியின் விஜயத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் போதைப் பொருள் விழிப்புணர்வு சுவரொட்டிகள்

(கிளிநொச்சி, ஈழம்) தமிழர் தாயகப் பகுதிகளில் இலங்கை இராணுவத்தால் நிகழ்த்தப்பட்ட இன அழிப்புப் போரின் பின்னர் சட்டவிரோத போதைப் பாவனை அதிகரித்துள்ள நிலையில் இதற்கு இலங்கை இராணுவமே காரணம் என தொடர்ச்சியாக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. இந்நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இலங்கை இராணுவத்தினரால் போதைப் பொருள் விழிப்புணர்வு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முல்லைத்தீவுக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் கஞ்சா ஹெரோயின் போன்ற போதைப்பொருள் பாவனைக்கு எதிரான சுலோகங்கள் அடங்கிய விழிப்புணர்வு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக கிளிநொச்சி செய்தியபளர் கூர்மை செய்தித் தளத்திற்கு குறிப்பிட்டார்.
ஜன. 20 09:34

வவுனியா சிதம்பரநகர் கிராமத்தை ஆட்டிப்படைக்கும் சிறுநீரக நோய்த்தாக்கம் - கடந்த வருடத்தில் 10 பேர் பலி

(வவுனியா, ஈழம்) தமிழர் தாயகப் பகுதிகளில் நிகழ்த்தப்பட்ட இன அழிப்பு போர் காரணமாக இடம்பெயர்ந்து இலங்கையின் பல பாகங்களிலும் இந்தியா உட்பட புலம்பெயர் நாடுகளிலும் தஞ்சமடைந்து மீண்டும் நாட்டுக்குத் திரும்பி பல வருடங்கள் கடந்துள்ள போதும் குடிநீர்ப்பிரச்சனை உட்பட எவ்வித அடிப்படை வசதிகளும் இதுவரை ஏற்படுத்தித் தரப்படவில்லை என வவுனியா சிதம்பரநகர் கிராம மக்கள் அங்கலாய்க்கின்றனர். இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக தற்காலிக முகாமாக காணப்பட்ட இந்தப் பிரதேசத்தில் தற்போது அங்கிருந்த மக்கள் நிரந்தரமாக குடியேற்றப்பட்டுள்ளனர்.
ஜன. 19 23:15

ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி பௌத்த பிக்குமார் கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்

(வவுனியா, ஈழம் ) ஆறு வருடங்களில் அனுபவிக்கும் வகையில் 19 வருட சிறைத்தண்டனை விதிக்கபட்ட பொதுபலசேன அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை எதிர்வரும் நான்காம் திகதி இலங்கையின் சுதந்திர தினமன்று விடுதலை செய்யுமாறு கோரி பௌத்த பிக்குமார் சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக இன்று சனிக்கிழமை போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொதுபலசேனா அமைப்பின் பௌத்த பிக்குமாரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஞானசார தேரரை சுதந்திர தினம் அன்று விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக போராட்டத்தில் ஈடுபடும் தேரா்கள் செய்தியாளர்களிடம் கூறியுள்ளனர்.
ஜன. 18 23:03

வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் வைத்தியசாலையில் உயிரிழப்பு

(வவுனியா, ஈழம்) தமிழ் அரசியல் கைதிகள் பலர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இலங்கைச் சிறைச்சாலைகளில் பல வருடங்களாக வழக்கு விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த வவுனியா சிறைச்சாலைக் கைதி வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜன. 18 11:20

பூநகரி ஊடாக யாழ்ப்பாணம் செல்லும் வீதியில் அதி வேகத்துடன் பயணிக்கும் இலங்கை இராணுவ வாகனங்கள் - அச்சத்தில் மக்கள்

(கிளிநொச்சி, ஈழம்) தமிழர் தாயகப் பகுதிகளில் நிலைகொண்டுள்ள இலங்கை இராணுவத்தினரின் போக்குவரத்து நடவடிக்கையால் வீதியில் நடமாடுவதற்கு அச்சமாக உள்ளதாக பொது மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். இறுதிக்கட்ட இன அழிப்பு போர் நடைபெற்ற கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள இராணுவத்தினர் தமது கனரக வாகனங்களில் வீதிகளில் வேகமாக பயணிப்பதாகவும் வேகக் கட்டுப்பாட்டை அவர்கள் பின்பற்றுவதில்லை எனவும் மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். தாயகப் பகுதிகளில் இல்ங்கை இராணுவத்தினரின் வானங்களால் விபத்துக்கள் ஏற்படுத்தப்பட்டு உயிரிழப்புக்கள் இடம்பெற்றுவரும் நிலையில், இராணுவத்தினரின் இந்த நடவடிக்கை குறித்து மக்கள் கூர்மை செய்தித் தளத்திற்கு சுட்டிக்காட்டினர்.