நிரல்
மே 14 07:07

வடக்கில் 8 இலட்சத்து இரண்டாயிரத்து இருநூற்று ஆறு சதுர கிலோமீற்றர் பகுதியில் வெடிபொருட்கள் அகற்றல்

(கிளிநொச்சி, ஈழம்) இலங்கையில் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இன அழிப்பு போர் நிறைவடைந்து 10 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், போர்க்காலத்தில் புதைக்கப்பட்ட கண்னிவெடிகளை அகற்கும் நடவடிக்கை தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. இதற்கமைய 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் தற்போது வரை சர்வதேச மற்றும் உள்ளுர் மனிதநேய கண்ணிவெடி அகற்றும் நிறுவனமான சார்ப் கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தால் 8 இலட்சத்து இரண்டாயிரத்து இருநூற்று ஆறு சதுர கிலோமீற்றர் பகுதியில் வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மே 13 23:01

முஸ்லிம் கிராமங்களில் 24 மணிநேரத் தாக்குதல் - சிங்கள இளைஞர்கள் கைவரிசை

(வவுனியா, ஈழம் ) ஐ.எஸ் இஸ்லாமியவாதிகள் இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று நடத்திய தற்கொலைத் தாக்குதலின் பின்னர் இலங்கையில் சிங்களப் பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்கள் பெரும் அச்சத்துடன் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையின் வட மேல் மாகாணம் குருணாகல் மாவட்டத்தில் உள்ள குளியாபிட்டி, நிக்கவரட்டிய ஆகிய பிரதேசங்களில் முஸ்லிம் கிராமங்களில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் இன்று திங்கட்கிழமை மாலை வரை இடம்பெற்ற தாக்குதலில் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த இரண்டு பிரதேசங்களையும் மையப்படுத்திய சுமார் முப்பது முஸ்லிம் கிராமங்களில் இன்றிரவு 7 மணிவரை சுமார் 24 மணிநேர தாக்குதல் சிங்கள இளைஞர் குழுக்களினால் நடத்தப்பட்டுள்ளது. பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தபோதே கூடுதலான தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
மே 13 15:21

அமெரிக்கப் போர்க் கப்பல் கொழும்பில் - இலங்கைக் கடலில் பணிகள் ஆரம்பம்

(யாழ்ப்பாணம், ஈழம் ) அமெரிக்க அரசினால் சென்ற ஆண்டு இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட யுஎஸ்சிஜிசி ஷேர்மன் (USCGC Sherman) என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பல், கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளது. இந்தக் கப்பலோடு இலங்கைக் கடற்படையின் இருபத்தியிரண்டு உயரதிகாரிகளும் இரண்டாம் நிலை அதிகாரிகள் நூற்றிப் பதினொரு பேரும் வருகை தந்துள்ளனர். கப்டன் றோகித அபேசிங்கவின் தலைமையில் யுஎஸ்சிஜிசி ஷேர்மன் என்ற போர்க் கப்பலை ஆழ்கடலில் கையாள்வதற்கான பயிற்சிகளையும் அமெரிக்காவில் முடித்துக் கொண்டே இவர்கள் அனைவரும் அந்தக் கப்பலுடன் கொழும்புத் துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளனர். இலங்கைக் கடற்படை அதிகாரிகள் இவர்களை வரவேற்றனர். விரைவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கைக் கடற்படையிடம் இந்தக் கப்பலைக் கையளிப்பார்.
மே 13 14:22

வடமேல் மாகாணத்தில் காலவரையறையற்ற ஊரடங்கு

(வவுனியா, ஈழம் ) இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலையடுத்து குறிப்பிட்ட சில பிரதேசங்களில் தொடர்ச்சியாகப் பதற்றம் நிலவுகின்றது. இன்று திங்கட்கிழமை மாலை ஐந்து மணி முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சிலாபம், புத்தளம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வடமேல் மாகணத்தில் காலவரையறையற்ற ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. குருநாகல் - குளியாப்பிட்டியா, பின்கிரியா, டும்மலசூரியா, ஹெட்டிபொல, ரஸ்நாயக்கபுர, கொபேகன போன்ற பிரதேசங்களில் மாத்திரமே இன்று பிற்பகல் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் திடீரெனப் பிறப்பிக்கப்பட்டிருந்தது. நேற்று ஞாயிற்றுக்கிழமை சிலாபம் நகரில் வன்முறைகள் ஆரம்பித்ததால் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை நான்கு மணிவரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தது.
மே 12 23:00

சிலாபத்தில் சிங்கள, முஸ்லிம் மோதல் - கட்டுப்பாட்டில் என்கிறது இலங்கைப் பொலிஸ்

(வவுனியா, ஈழம் ) இலங்கையின் வடமேல் மாகாணம் சிலாபம் நகரில் இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் சிங்கள முஸ்லிம் இளைஞர்களிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளதாக இலங்கைப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார். முகநூலில் வெளியான பதிவு ஒன்றைத் தவறாகப் புரிந்து கொண்ட சிங்கள இளைஞர்கள் சிலர் சிலாபம் நகரில் உள்ள வர்த்தகர் ஒருவருடன் தர்க்கம் புரிந்தனர். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு இலங்கைப் பொலிஸார் வரவழைக்கப்பட்டனர். இலங்கை முப்படையினரும் சிலாபம் நகரில் குவிக்கப்பட்டனர். பிற்பகலில் இருந்து நாளை திங்கட்கிழமை அதிகாலை நான்கு மணி வரையும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
மே 12 15:13

அமெரிக்காவில் திலக்மாரப்பன உரையாடல்- சீனா செல்கிறார் மைத்திரி

(யாழ்ப்பாணம், ஈழம் ) உயிர்த்த ஞாயிறுக் குண்டுவெடிப்பையடுத்து எதிர்வரும் 16 ஆம் திகதி வியாழக்கிழமை இலங்கையின் உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் அமெரிக்காவில் கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ள நிலையில், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை திங்கட்கிழமை சீனாவுக்குச் செல்லவுள்ளார். ஆசிய நாகரீகங்களின் உரையாடல் மாநாடு எதிர்வரும் 15 ஆம் திகதி புதன்கிழமை பீஜிங்கில் நடைபெறவுள்ளது. அந்த மாநாட்டில் உரையாற்றுவதற்காகவே மைத்திரிபால சிறிசேன சீனாவுக்குச் செல்கிறார். 47 ஆசிய நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகள், பிரமுகர்கள் உட்பட இருநூறுபேர் மாநாட்டில் கலந்துரையாடவுள்ளனர். அதேவேளை, மாநாடு நடைபெறுவதற்கு முன்னர் செவ்வாய்க்கிழமை சீன அதிபர் ஷி ஜின்பிங், சீனப் பிரதமர் லி கெகியாங் ஆகியோரை மைத்திரிபால தனித்தனியாகச் சந்திக்கவுமுள்ளார்
மே 11 22:00

நிரபராதியான முன்னாள் போராளி ஐந்து மாதங்களின் பின் விடுதலை

(மட்டக்களப்பு, ஈழம்) கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில், இலங்கைப் பொலிஸார் இருவரைக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில், கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நிரபராதியான முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர், கதிர்காமத்தம்பி ராசகுமாரன் என்ற அஜந்தன் ஐந்து மாதங்களின் பின்னர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தினால் இன்று சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மே 11 15:50

இந்தோ-பசுபிக் மூலோபாயம் தொடர்பாக அமெரிக்காவில் கலந்துரையாடல்

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்காக கொழும்புக்கு வருகை தந்த அமெரிக்க அவுஸ்திரேலிய மற்றும் சர்வதேச இராணுவப் புலனாய்வாளர்கள் தடையப் பொருட்கள் பலவற்றை ஆதாரமாகக் கொண்டு தொடர்ச்சியாக விசாரணை நடத்துகின்றனர். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடமும் மற்றும் பலரிடமும் வாக்குமூலங்கள் பதியப்பட்டு தாக்குதலுக்கான அடிப்படைக் காரணங்கள், பின்னணிகள் குறித்தும் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். இந்த நிலையில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தாக்குதல் செயற்பாடுகளை எதிர்காலத்தில் எவ்வாறு முறியடிப்பது என்பது குறித்து எதிர்வரும் 16 ஆம் திகதி வியாழக்கிழமை அமெரிக்காவில் உயர்மட்டக் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
மே 10 23:02

ஒன்பது சந்தேகநபர்கள் பிணையில் விடுதலை - விசாரணை ஆரம்பம்

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பாக கைதுசெய்யப்பட்ட ஒன்பது பேரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டமை குறித்து இலங்கைப் பொலிஸ் திணைக்களத்தால் நியமிக்கப்பட்ட விசேட பொலிஸ் குழு விசாரணையை ஆரம்பித்துள்ளது. தற்கொலைத் தாக்குதல் நடத்திய மொஹம்மட் இப்ராஹீம் இன்சாப் அஹமட்டுக்குச் சொந்தமான, செப்புத் தொழிற்சாலையில் குண்டுகள் தயாரிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் அங்கு சோதனை நடத்தப்பட்டு அங்கு பணியாற்றிய ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டிருந்தனர். ஆனால் அந்த ஒன்பது பேரும் சில நாட்களிலிலேயே பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மே 10 14:45

மாணவர்களின் விடுதலைக்கு மேற்குலகம் பொறுப்புக் கூற வேண்டும்

(யாழ்ப்பாணம், ஈழம் ) யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கைதுசெய்யப்பட்டமை தொடர்பாக தெளிவான விளக்கம் தரப்படவில்லையென இலங்கைப் படையினரால் கைதுசெய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர் கூறுகின்றனர். இலங்கைப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டதாகக் கூறப்பட்டபோதும் அந்தச் சட்டத்தின் எந்தப் பிரிவின் அடிப்படையில் என்ன குற்றத்திற்காக மாணவர்கள் கைதுசெய்யப்பட்டனர் என்பது தொடர்பாக இலங்கைப் பொலிஸார் எதுவுமே கூறவில்லையென சக மாணவர்களும் தெரிவிக்கின்றனர். அதேவேளை, இதனைச் சட்ட விடயமாகப் பார்க்காமல் ஈழத் தமிழர்களின் அரசியல பிரச்சினையாகவே நோக்க வேண்டுமென அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். இலங்கைச் சட்டமா அதிபர் திணைக்களத்தின் விளக்கம் நீதிமன்றத்திற்கு அவசியமே இல்லையென சட்டவல்லுநர்களும் கூறுகின்றனர்.