நிரல்
ஜூலை 30 23:10

புதுக்குடியிருப்பு - சுதந்திரபுரம் கிராமசேவகரை இடமாற்றுமாறு மக்கள் வலியுறுத்தல்

(முல்லைத்தீவு, ஈழம்) போரினால் பெருமளவு அழிவுகளைச் சந்தித்த முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட சுதந்திரபுரம் கிராமசேவகரை அங்கிருந்து இடமாற்றுமாறு வலியுறுத்தி கிராம மக்கள் இணைந்து புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் மனு ஒன்றைக் கையளித்துள்ளனர். போரினால் பாதிக்கப்பட்டு கட்டம் கட்டமாக தமது வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பிவரும் மக்களுக்கான சேவைகள் உரிய முறையில் வழங்கப்படுவதில்லை எனவும் கிராம அலுவலர் மீதான குற்றச்சாட்டுக்களையும் சுட்டிக்காட்டி சுதந்திரபுரம் கிராம மக்கள் ஒன்றிணைந்து புதுக்குடியிருப்பு பிரதேச செயலரிடம் தமது கோரிக்கை மனுவைக் கையளித்துள்ளதாக முல்லைத்தீவு செய்தியாளர் கூர்மை செய்தித்தளத்திற்கு குறிப்பிட்டார்.
ஜூலை 30 20:44

தமிழ் அரசியல் கட்சிகளுக்குத் தேர்தலில் மாத்திரமே அக்கறை

(கிளிநொச்சி. ஈழம்) வடக்கு - கிழக்கு தாயகப் பகுதிகளிலும் கொழும்பு மற்றும் புறநகர்ப் பிரதேசங்களிலும் இலங்கைப் படையினரால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளை மீட்டுத் தருமாறு கோரி கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் பதினொரு மணியளவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பொது மக்கள் பலரும் கலந்துகொண்டனர். தொடர்ச்சியாகப் போராட்டம் நடத்திவரும் நிலையில் இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் உறவினர்கள் தமது மனக்குமுறல்களை பகிரங்கமாகவே வெளிப்படுத்தினர். இலங்கை ஒற்றையாட்சி அரசின் மீது குற்றம் சுமத்தினர். தமக்கு நீதி மாத்திரமே வேண்டுமெனக் கோசம் எழுப்பினர்.
ஜூலை 29 23:13

கொழும்பு நிர்வாகத்தின் தலையீடுகளைத் தவிர்க்குமாறு தீர்மானம்

(கிளிநொச்சி. ஈழம்) வடமாகாண அரச அதிகாரிகள் மத்தியில் கொழும்பு நிர்வாகம் மேற்கொண்டு வரும் தலையீடுகளைத் தவிர்க்க வேண்டுமெனக் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ஆகியோரின் இணைத் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கிளிநொச்சி அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் உள்ளிட்ட வடமாகாண அரச அதிகாரிகள் பலரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். இதன்போதே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அதிகாரியொருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.
ஜூலை 29 12:48

காணாமல்போனோர் அலுவலகத்தை ஏற்க முடியாது - சர்வதேச நீதிக்கு வலியுறுத்தல்

(முல்லைத்தீவு, ஈழம்) இலங்கையில் நடத்தப்பட்ட தமிழின அழிப்புப் போரின் போதும் அதற்குப் பின்னரான காலங்களிலும் அப்போதிருந்த சிங்கள அரச தலைவர்களின் உத்தரவுக்கு அமைவாக இலங்கை இராணுவத்தினராலும் அவர்களுடன் இணைந்து இயங்கிய ஒட்டுக்குழுக்களாலும் கடத்தப்பட்டும் கையளிக்கப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்களின் உறவினர்களில் 38 பேர் தமது போராட்டத்துக்கு எந்தவித அடிப்படைத் தீர்வுகளையும் காணாமலேயே உயிரிழந்துள்ளதாக, தமிழர் தாயகமான வடக்கு - கிழக்கில் உணவுத்தவிர்ப்புடன் கூடிய தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் அமைப்பு விசனம் வெளியிட்டுள்ளது.
ஜூலை 28 14:44

வடக்கு தையிட்டியில் மகாபோதி - இராணுவம் ஒத்துழைப்பு

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்புடன் காணிகள் அபகரிக்கப்பட்டு வடக்கு - கிழக்குத் தாயகப் பகுதிகளில் புத்த விகாரைகள், புத்ததாதுக் கோபுரங்கள், மகாபோதி அமைப்பது போன்ற செயற்பாடுகள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன. 2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூழலில் அதுவும் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மைத்திரி - ரணில் அரசாங்கம் பதவியேற்ற நாளில் இருந்து கொழும்பை மையப்படுத்திய அதிகாரத்துடன் பௌத்த பிக்குமார் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களாக முல்லைத்தீவு - நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் திருகோணமலை கன்னியா ஆகிய ஈழத் தமிழர்களின் பாரம்பரிய சைவ ஆலயங்கள் இருந்த இடத்தில் விகாரை புத்தாதுக் கோபுரம் அமைக்கும் செயற்பாடுகளில் முரண்பாடுகள் ஏற்பட்டு நீதிமன்றம் வரை சென்றிருந்தது.
ஜூலை 28 10:21

மணலாறில் 1036 ஏக்கர் சுவீகரிப்பு - விவசாய நிலங்களை சரணாலயமாக மாற்றும் வனஜீவராசிகள் திணைக்களம்

(முல்லைத்தீவு, ஈழம்) தமிழர் தாயகப் பகுதிகளில் உள்ள தமிழ் மக்களது பூர்வீக நிலங்களை அபகரிக்கும் செயற்பாடுகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், வடக்கு - கிழக்கு மாகாணங்களை பௌதீக ரீதியாக இணைக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் நில அபகரிப்பு தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. முப்பத்து ஐந்து வருடங்களுக்கு முன்னர் முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் கிராமத்திலிருந்து விரட்டப்பட்டிருந்த தமிழ் விவசாயிகள், மீண்டும் 2012 ஆம் ஆண்டு தங்களுடைய கிராமங்களுக்குத் திரும்பி வந்திருந்தபோது, விவசாயம் செய்யக்கூடிய தமது தாழ்நிலப் பகுதிகளை சிங்களக் குடியேற்றவாசிகளிடம் இழந்ததுடன் அதற்கு நீர்ப்பாசனம் செய்யும் நீரேரிகளையும் இழந்துள்ளனர்.
ஜூலை 27 13:39

வவுனியாவில் தங்கவைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு அகதிகள் ஒரு தொகுதியினர் சுயவிருப்பில் வெளியேற்றம்

(வவுனியா, ஈழம்) இலங்கையின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியான நீர்கொழும்பில் தங்கியிருந்த நிலையில் கடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடுத்து வவுனியா பூந்தோட்டம் நலன்புரி முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் அகதிகளின் ஒரு தொகுதியினர் மீண்டும் நீர்கொழும்பு நலன்புரி முகாமுக்கு திரும்புவதாக புனர்வாழ்வு நிலையம் தெரிவித்துள்ளது. பல்வேறு சர்ச்சைகள் மற்றும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழர் தாயகமான வடமாகாணத்தில் இலங்கை அரசாங்கத்தினால் ஒரு சில தமிழ் அரசியல் பிரதிநிதிகளின் ஆதரவுடன் குறித்த வெளிநாட்டு அகதிகள் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
ஜூலை 26 23:19

மயிலிட்டித் துறைமுகத்தில் சிங்கள மீனவர்களின் ஆதிக்கம்

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கை இராணுவத்திடம் இருந்து பொது மக்களிடம் கையளிக்கப்பட்ட யாழ்ப்பாணம் - மயிலிட்டித் துறைமுகம் நூற்று ஐம்பது மில்லியன் ரூபாய்கள் செலவில் புனரமைப்புச் செய்யப்பட்டுகின்றது. ஆனால் இந்தத் துறைமுகத்தின் பயன்பாடுகள் சிங்கள மீனர்வகளுக்கே அதிகமான நன்மைகளை ஏற்படுத்துமென மயிலிட்டி கடற்றொழிலாளர் சங்கம் கூறுகின்றது. மயிலிட்டிப் பிரதேசத்தில் பொது மக்களுக்குச் சொந்தமான மேலும் பல ஏக்கர் காணிகள் இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. இந்த நிலையில் துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட்டாலும் பிரதேச மீனர்கள் அதனை முழுமையாகப் பயன்படுத்த முடியாத ஆபத்தான நிலைமை ஏற்படுமென மீனவர்கள் சங்க உப தலைவர் துரைசிங்கம் வினோத்குமார் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.
ஜூலை 26 22:49

ஜப்பான் - இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கைச்சாத்து

(வவுனியா, ஈழம்) இந்தோ - பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளின் போட்டிகள் அதிகரித்துள்ள நிலையில், இலங்கையுடன் ஜப்பான் பாதுகாப்பு ஒத்துழைப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது. இலங்கைப் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன, (Ruwan Wijewardene) ஜப்பான் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கேஹன்ஜி ஹரதா (Kenji Harada) ஆகிய இருவரும் கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனளர். இந்த ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளிடையேயும் தற்போது காணப்படும் பாதுகாப்பு ஒத்துழைப்பின் தன்மைகள் மேலும் அதிகரிக்கப்படுமென ருவான் விஜயவர்தன கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
ஜூலை 26 15:13

ஒட்டுசுட்டானில் கல் அகழ்வு- வாவெட்டி மலை சூறையாடல்

(முல்லைத்தீவு, ஈழம்) தமிழ் பேசும் மக்களது தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்களில் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கை அரசின் ஆதரவுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் நில அபகரிப்புத் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இறுதிப் போரினால் முழுமையாகப் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் ஒன்றான ஒட்டுசுட்டான் வாவெட்டி மலையில் மேற்கொள்ளப்படும் கல் அகழ்வு நடவடிக்கையினால் குறித்த பகுதி முழுமையாக அழிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளததாகப் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் இராமலிங்கம் சத்தியசீலன் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.