நிரல்
ஜன. 04 23:06

கிளிநொச்சியில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட ஐந்துபேர் கைது

(கிளிநொச்சி, ஈழம்) வடக்குக் கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் இலங்கைப் பொலிஸார், இலங்கைப் படையினரின் ஒத்துழைப்புடன் சட்டவிரோத மண் அகழ்வு நடவடிக்கைகள் இடம்பெறுவதாக மக்கள் குற்றம் சுமத்தியிருந்தனர். அதற்கு எதிராக போராட்டங்களும் இடம்பெற்றிருந்தன. பொலிஸார் அந்தப் போராட்டங்களை மிக மோசமாகத் தாக்கித் தடுத்துமிருந்தனர். இந்த நிலையில் சட்டவிரோத அகழ்வு முயற்சி தொடர்பாக இலங்கை இராணுவத்தில் கப்ரன் தரத்தைச் சேர்ந்த மூன்றுபேர், சாதாரண சிப்பாய்கள் அடங்கலாக ஐந்துபேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 29ம் திகதி 155ம் கட்டை பகுதியில் இவர்கள் வேறு சிலருடன் இணைந்து சட்டவிரோத மண் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஜன. 03 21:43

மட்டக்களப்பில் ஊடகவியலாளர் நிலாந்தனுக்கு அச்சுறுத்தல்

(மட்டக்களப்பு, ஈழம் ) கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்பட்டு வரும் மட்டக்களப்பு மாவட்டத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர் செல்வக்குமார் நிலாந்தன் கைது செய்யப்படலாமென ஒன்றியம் தெரிவித்துள்ளது. சுயாதீன ஊடகவியலாளர் நிலாந்தனின் வீட்டிற்கு நேற்று இரவு ஒன்பது மணிக்கு அவரைக் கைது செய்யச் சென்ற இலங்கைப் பொலிஸார், அங்கு அவர் இல்லாததால் அவருடைய குடும்ப உறுப்பினர்களை அச்சுறுத்திச் சென்றுள்ளதாகவும் ஒன்றியம் தெரிவித்துள்ளது. அத்துடன் நிலாந்தனை ஏறாவூர் பொலிஸ் நிலையத்திற்கு வருமாறும் பொலிஸார் குடும்ப உறுப்பினர்களிடம் கூறியுள்ளனர். இரவு நேரத்தில் வீட்டுக்குச் சென்றமையினால் குடும்ப உறுப்பினர்கள் அச்சமடைந்துள்ளதாகவும் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
ஜன. 03 15:17

சர்வதேச நாடுகளுடன் சமநிலையாக இலங்கை உறவுகளைப் பேணும்- கோட்டாபய ராஜபக்ச

(வவுனியா, ஈழம்) இலங்கையின் ஒற்றையாட்சியையும் புத்தசாசனத்தையும் தொடர்ந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது கொள்கை விளக்கவுரையில் உறுதிப்படக் கூறியுள்ளார். இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் புதிய அரசாங்கத்தின் கொள்கை விளக்கவுரையை கோட்டாபய ராஜபக்ச இலங்கை நாடாளுமன்றத்தில் நிகழ்த்தினார். ஆளும் தரப்பு எதிர்த்தரப்பு உறுப்பினர்கள், மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களும் முதலாவது அமர்வில் கலந்துகொண்டனர். ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரை நிகழ்வில் கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதுவர்களும் பங்குபற்றினர். பெரும்பான்மை மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு மதிப்பளிக்க வேண்டுமென்றும் அப்போதுதான் மக்களின் இறையாண்மையைப் பாதுகாக்க முடியுமெனவும் அவர் கூறினார்.
ஜன. 02 21:04

பாதுகாப்பு அமைச்சைத் தன்வசப்படுத்த கோட்டாபய முயற்சி

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் பாதுகாப்பு அமைச்சை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடிய முறையில் தனி நபர் பிரேரணை ஒன்றை இலங்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு மகிந்த ராஜபக்ச தரப்பு உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச நடவடிக்கை எடுத்துள்ளார். பிரேரணை சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னதாக இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பின்21, 22 ஆவது திருத்தங்கள் என இலங்கை அரச வர்த்தமானி இதழில் வெளியிடப்படும் என்று விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். மைத்திரி- ரணில் அரசாங்கம் 2016 ஆம் ஆண்டு உருவாக்கிய 19 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் பாதுகாப்பு அமைச்சு உள்ளிட்ட சில திணைக்களங்களின் பொறுப்புக்களை ஜனாதிபதி வைத்திருக்க முடியாது.
ஜன. 02 12:33

வடக்குக்- கிழக்கில் விகாரைகள் தொடர்பான ஆய்வுகள்

(திருகோணமலை, ஈழம்) வடக்குக் கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் இலங்கை ஒற்றையாட்சி அரசின் கொழும்பில் உள்ள புத்தசாசன அமைச்சு சிறப்பு ஆய்வு ஒன்றை மேற்கொள்ளுமென அமைச்சின் செயலாளர் எம்.கே.பி ஹரிச்சந்திர கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இலங்கை ஒற்றையாட்சி அரசின் கொழும்பில் உள்ள தொல்பொருட் திணைக்களத்துடன் இணைந்து புத்த சமய வரலாறுகள் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளதாகக் கூறிய அவர் புத்தசாசன மற்றும் கலாச்சார அமைச்சரின் உத்தரவுக்கு அமைவாகவே அனைத்துச் சிறப்பு ஆய்வுகளும் இடம்பெறும் என்றும் கூறினார். வடக்குக் கிழக்குப் பிரதேசங்களில் உள்ள விகாரைகளின் அமைவிடம் அதன் வரலாறுகள், அந்த விகாரைகளின் தற்போதைய நிலை என்பவற்றைக் குறித்த ஆய்வின் மூலமாகப் பெறுவதற்கு ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன.
ஜன. 02 00:11

ஜெனீவா மனித உரிமைச் சபையின் குற்றச்சாட்டில் இருந்து வெளியேற இலங்கை முன்னெடுக்கும் நகர்வுகள்

(யாழ்ப்பாணம், ஈழம்) இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்கா, இந்தியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் போட்டியிட்டுக் கொண்டிருக்கும் நிலையில் சீனா, ரஷியாவுடன் இணைந்து ஈரான் இந்தியப் பெருங்கடலின் வடக்கு பகுதியில் கூட்டு இராணுவ பயிற்சி நடத்தியுள்ளது. இந்தத் தகவல் உலகம் முழுவதும் உள்ள இராணுவ ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அமெரிக்கா, ஈரான் நாடுகளிடையே பதற்றம் நிலவி வருகின்ற சூழலில், ஒலி வேகத்தின் 27 மடங்கு வேகத்தில் அணு ஆயுதங்களை அனுப்பும் திறன் கொண்ட அவாங்கார்ட் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை (Avangard hypersonic missile) ரஷியா போர் நடவடிக்கைக்காகப் பயன்படுத்தவுள்ளதாகவே கருதப்படுகின்றது.
டிச. 31 23:16

சவேந்திர சில்வா பாதுகாப்புப் படைகளின் பதில் பிரதானியாகவும் நியமனம்

(கிளிநொச்சி, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் இராணுவத் தளபதியாகப் பதவி வகிக்கும் லெப்டினென்ட் ஜெனரல் சவேந்திர சில்வா பாதுகாப்புப் படைகளின் பதில் தலைமைப் பிரதானியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்த நியமனத்தை வழங்கியுள்ளார். இலங்கை இராணுவத் தளபதி என்ற பதவிக்கு மேலதிகமாக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ஈழப் போரின் போது போர்க்குற்றம், மனித உரிமை மீறல் விவகாரங்களில் சர்வதேச அரங்கில் பலத்த குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான சவேந்திர சில்வா, கோட்டாபய ராஜபக்ச சென்ற நவம்பர் மாதம் 16 ஆம் திகதி ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் இலங்கை இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார்.
டிச. 30 22:47

ரிஷாட் பதியுதீனிடம் இலங்கைக் குற்றப் புலனாய்வுப் பிரிவு வாக்குமூலம்

(வவுனியா, ஈழம்) இலங்கையில் சென்ற ஏப்பிரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இலங்கைக் குற்றப் புலனாய்வுப் பொலிஸாரினால் இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். மூன்று மணி நேரத்துக்கும் அதிகமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டு ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட சில முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன் தொடர்பில்லையென இலங்கைப் பொலிஸாரே கூறியிருந்த நிலையில் இன்று மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
டிச. 29 23:02

ராஜித சேனரட்னவை ஒழித்து வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்திரிகாவைக் கைது செய்யுமாறு தயாரட்ன தேரர் அழுத்தம்

(வவுனியா, ஈழம்) மகிந்த ராஜபக்சவின் ஆட்சியின்போது கொழும்பில் இடம்பெற்ற வெள்ளைவான் கடத்தல் விவகாரத்தைப் பகிரங்கப்படுத்திய குற்றச்சாட்டில், முன்னாள் அமைச்சர் ராஜித சேனரட்னவைக் கைது செய்யுமாறு நீதிமன்றம் இலங்கைக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனாலும் ராஜித சேனரட்னவைக் கைது செய்யவிடாமல், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா நான்கு நாட்கள் பாதுகாப்பாக வைத்திருந்ததாகச் சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரட்ன தேரர் கூறியுள்ளார். எனவே குற்றவாளியொருவரைப் பாதுகாத்த குற்றச்சாட்டில் சந்திரிகாவைக் கைது செய்ய வேண்டுமெனவும் தேரர் கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
டிச. 28 23:14

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை குறித்து சிவாஜிலிங்கத்திடம் விசாரணை

(வவுனியா, ஈழம்) இறுதிப் போரில் சுமார் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டதாகக் கூறியமை தொடர்பாகவே இலங்கை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு தன்னிடம் விசாரணை நடத்தியதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்க் கட்சிக் கூட்டமைப்பின் செயலாளருமான ம.க. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். கொழும்பில் உள்ள பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுக்கு இன்று சனிக்கிழமை விசாரணைக்குச் சென்று திரும்பிய பின்னர் கூர்மைச் செய்தித் தளத்திற்கு சிவாஜிலிங்கம் கருத்து வெளியிட்டபோதே இவ்வாறு கூறினார். கடந்த மே மாதம் முள்ளிவாய்க்காலில் நடத்தப்பட்ட தமிழ் இன அழிப்பு வாரம் தொடர்பாக விசாரணை நடத்த கொழும்பில் உள்ள பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுக்கு வருமாறு சிவாஜிலிங்கத்துக்குச் சென்ற புதன்கிழமை அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.