செய்தி: நிரல்
நவ. 09 21:56

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து உதவிகளைப் பெறுவதில் சிக்கல்- தொடர்ந்தும் உரையாடல்

(வவுனியா, ஈழம்) இலங்கைக்கு நிதியுதவி வழங்குவது தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை தொடர்ந்தும் பேச்சு நடத்துவதாக அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன. சர்வதேச நாணய நிதியம் வழங்கியுள்ள நிபந்தனைகள் பலவற்றை நிறைவேற்ற வேண்டிய அவசியம் உள்ளதாகவும் ஆனாலும் சில நிபந்தனைகளை நிறைவேற்றக் கால அவகாசம் தேவையெனவும் சர்வதேச நாணய நிதியத்திடம் கூறியுள்ளதாகவும் அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன. சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தைப் பகிரங்கப்படுத்த வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரியுள்ள நிலையில், நிபந்தனைகளை அரசியலாக்க வேண்டாம் என்று சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள் எதிர்க்கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்துப் பேசியிருந்தனர்.
நவ. 08 21:31

ஜனநாயக உரிமைகள் மீறப்படுவதாகப் பேராயர் மல்கம் ரஞ்சித் ரணில் அரசாங்கம் மீது பகிரங்கக் குற்றச்சாட்டு

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கை மக்களின் ஜனநாயக உரிமைகள் அனைத்தும் மறுக்கப்படுவதாகக் கத்தோலிக்கத் திருச்சபையின் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கை அரசியல் யாப்பின் மூலம் உத்தரவாதம் அளிக்கப்பட்ட உரிமைகளான, பேச்சு, கருத்து மற்றும் அமைதியான போராட்டங்களை நடத்துவதற்கான சுதந்திரத்தை அரசாங்கம் ஆணவத்துடன் தொடர்ந்து நசுக்குவதாகவும் பேராயர் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நிரபராதியென விடுதலை செய்யப்பட்ட பின்னர் கருத்துக்கூறாமல் அமைதிகாத்திருந்த பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
நவ. 07 18:23

மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு கோரிக்கை

(வவுனியா, ஈழம்) மாகாண சபைத தேர்தல்களை விரைவாக நடத்த வேண்டுமென பிரதான சிங்கள அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. மாகாண மற்றும் உள்ளூராட்சி சபைகளின் எல்லை மீள் நிர்ணயம் தொடர்பாக ஆராய்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குழு ஒன்றை அமைத்துள்ளமை காலம் கடத்தும் செயல் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மாகாண சபைத் தேர்தல்களையோ அல்லது உள்ளூராட்சித் தேர்தல்களையோ தற்போதைக்கு நடத்தும் நோக்கம் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இல்லையென ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் ஹர்சா டி சில்வா கூறியுள்ளார்.
நவ. 04 22:32

வடபகுதியில் நீரிழிவு நோய்த் தாக்கம் அதிகரிப்பு

(யாழ்ப்பாணம், ஈழம்) போரினால் பாதிக்கப்பட்ட வடபகுதியில் நீரிழிவு நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நீரிழிவு நோய் விசேட வைத்திய நிபுணர் அரவிந்தன் தெரிவித்துள்ளார். யாழ் போதனா வைத்தியசாலை நீரிழிவு சிகிச்சை பிரிவில் கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட நீரிழிவு நோயாளர் சிகிச்சை பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார். கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த நோய் தாக்கம் அதிகரித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நவ. 03 22:52

மன்னாரில் பெரும்போக நெற்செய்கை ஆரம்பம்

(மன்னார், ஈழம்) இலங்கையின் தமிழர் பகுதியான வட மாகாணம் மன்னார் மாவட்டத்தில் 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளுக்கான பெரும்போக நெற்செய்கை சுமார் 57820 ஏக்கர் விஸ்தீரணத்தில் மேற்கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார். மேலும் தற்பொழுது பருவ மழை ஆரம்பித்துள்ள நிலையில் மன்னார் மாவட்ட விவசாயிகள் பெரும்போக நெற்செய்கைகளுக்காக உழவு பணிகளை ஆரம்பித்துள்ளதாக அன்டனி மரின்குமார் மேலும் தெரிவித்தார்.
நவ. 02 08:57

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்- குற்றச்சாட்டுக்களில் இருந்து முன்னாள் அமைச்சர் ரிஷாட் விடுதலை

(வவுனியா, ஈழம்) இலங்கைத்தீவில் 2019 ஆம் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல் தொடர்பான அனைத்துக் குற்றச் சாட்டுக்களில் இருந்தும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவங்களின் பிரதான சந்தேகநபராக ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்டிருந்தார். ஆனால் இலங்கை ஒற்றையாட்சி அரசின் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக அந்த வழக்கிலிருந்து அவரை விடுவிப்பதற்கான கட்டளையை கோட்டை நீதவான் திலிண கமகே, இன்று புதன்கிழமை பிறப்பித்தார்.
நவ. 01 09:24

கடற்பகுதியில் தமிழக மீனவர்கள் - தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைக் குற்றம் சுமத்துகிறார் விமல்

(வவுனியா, ஈழம்) தமிழர் தாயகமான வடக்கு மாகாணக் கடற்பரப்பில் ஈழத் தமிழ் மீனவர்களும் தமிழக மீனவர்களும் மோதிக்கொள்ளும் சூழலின் பின்னணியில் இந்திய - இலங்கைக் கடற்படை திட்டமிட்டு செயற்படுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆலோசனையின் பிரகாரம் வடக்கு கடற்பகுதி முழுவதையும் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார். ராஜபக்ச குடும்பத்துடன் நெருங்கிய உறவைக் கொண்டு பின்னர் முரண்பட்டுத் தனித்துச் செயற்பட்டு வரும் விமல் வீரவன்ச, தமிழக மீனவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.
ஒக். 31 10:02

இருபத்து இரண்டாவது திருத்தச் சட்டமூலம் இன்று முதல் அமுல்

(வவுனியா, ஈழம்) இரட்டைப் பிரஜாவுரிமையுள்ளவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக முடியாதென்பது உள்ளிட்ட இலங்கை ஒற்றையாட்சியை நியாயப்படுத்தும் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய இருபத்து இரண்டாம் திருத்தச் சட்டமூலம் இன்று திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாகச் சபாநாயகர் மகிந்த யாப்பா அபயவர்த்தன அறிவித்துள்ளார். இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பில் செய்யப்பட்ட இந்த திருத்தச் சட்டமூலம் கடந்த 21 ஆம் திகதி இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டமூலத்தை நடைமுறைப்படுத்த சபாநாயகர் மகிந்த யாப்பா அபயவர்த்தன் இன்று கையொப்பமிட்டார்.
ஒக். 30 10:26

கட்டுப்பாட்டாளர்கள் பற்றாக்குறையினால் இலங்கை வான்வழிச் சேவைகளை வெளிநாடுகள் பொறுப்பேற்கும் அபாயம்

இலங்கைத்தீவின் விமான சேவைக்கு ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியை அடுத்து இலங்கைத்தீவில் ஏற்பட்டுள்ள பல்வேறு தாக்கங்களில் ஒன்றாகவே விமான சேவைக்கான நெருக்கடியையும் எதிர்நோக்க வேண்டிய இருப்பதாகக் கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன. தற்போது நிலவும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் பற்றாக்குறையால், இலங்கை வான் வழியாகச் செல்லும் சர்வதேச விமானங்களுக்கான வான்வெளிச் சேவையை வெளிநாட்டு நிறுவனங்கள் சொந்தமாக்கிக் கொள்ள முயற்சி எடுப்பதாகக் கூறப்படுகின்றது. பணியாட்கள் தட்டுப்பபாடு என்றும் புதியவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டாலும் பயிற்சி இல்லாமல் அவர்களை உடனடியாகப் பணியில் அமர்தத முடியாதெனவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஒக். 28 22:26

கடன் வழங்கும் நாடுகளுடன் சர்வதேச நாணய நிதியம் பேச்சு

(வவுனியா, ஈழம்) இலங்கைக்கு கடன் வழங்கும் தரப்பினருக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கு இடையிலான அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை எதிர்வரும் 3 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அதிபரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த பேச்சுவார்த்தையின் போது இலங்கையின் கடன் மறுசீரமைப்பு மற்றும் கடன் வழங்குனர்களின் மாநாடு என்பன குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.