நிரல்
பெப். 26 20:27

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான நிதியை வழங்குமாறு கோரி மனுத் தாக்கல் செய்ய முடிவு

(கிளிநொச்சி, ஈழம்) உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை வழங்க நிதி அமைச்சிற்கு உத்தரவிடுமாறு கோரி நீதிமன்றத்தில் மனுச் செய்யவுள்ளதாக ஜே.வி.பியை மையப்படுத்திய தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. எதிர்வரும் தினங்களில் இதுதொடர்பான மனு தாக்கல் செய்யப்படும் என கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பாக ஜனாதிபதிக்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பெப். 25 23:04

குர்திஸ்தான் மக்களுக்கு நேர்ந்த அவலம்- புலம்பெயா் தமிழர்களுக்கு பாடம்!

(வவுனியா, ஈழம்) ஈழத்தமிழர்களின் ஆயுதப் போராட்டம் இராணுவ ரீதியில் அதி உச்சத் தொடர் வெற்றிகளைக் கண்டுகொண்டிருந்த பின்னணியிலேதான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு 2001 இல் உருவாக்கப்பட்டது. இன விடுதலைக்கான போராட்ட அரசியல் என்பது தனித்து இயங்கும் ஒன்று அல்ல. எந்தவொரு போராட்டத்துக்கும் அரசியற் காரண காரியங்கள் உண்டு. இராணுவ ரீதியிலான போராட்டத்தின் வெற்றி ஒரு கட்டத்தை மேம்படுத்தும் போது, அதற்கு அடுத்த கட்டமாக அரசியல் ரீதியான அதுவும் ஜனநாயக விழுமியங்களைப் பேணக் கூடிய நெறி முறைகளை நுட்பமாகக் கையாள வேண்டியது அவசியமானது. அதனை மையமாகக் கொண்டே விடுதலைப் புலிகள் 2001 இல் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உருவாக்கத்துக்கான சமிக்ஞையைக் கொடுத்தனர்.
பெப். 23 10:57

சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைக்குமா?

(கிளிநொச்சி, ஈழம்) சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து அரச ஊழியர் மட்டத்தில் கைச்சாத்திட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் இரண்டு தசம் ஒன்பது பில்லியன்களை எதிர்வரும் மார்ச் மாதம் பெற இலங்கை அரசாங்கம் கடும் முயற்சி எடுத்து வருவதாக கொழும்பில் உள்ள நிதியமைச்சின் தகவல்கள் கூறுகின்றன. கடந்த இரண்டு மாதங்களில் நான்கு அதிகாரபூர்வ கலந்துரையாடல்களையும், மேலும் இரண்டு ஊழியர் மட்ட உரையாடல்களையும் நடத்தியுள்ளதாகக் கூறியுள்ள நிதியமைச்சின் அதிகாரி ஒருவர், சீனா கடன் மறுசீரமைப்பு விடயத்தில் நம்பிக்கை தரும்படியான பதில் வழங்கவில்லை எனவும் தெரிவித்தார்.
பெப். 22 08:00

மார்ச் மாதத்தில் அரசாங்கத்துக்கு பெரும் நிதி நெருக்கடி ஏற்படும் - அமைச்சர் பந்துல அறிவிப்பு

(வவுனியா, ஈழம்) இலங்கை அரசாங்கத்துக்கு, மார்ச் மாதத்தில் மட்டும் தாங்கிக்கொள்ள முடியாத கடன் சுமை இருப்பதாக நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன அமைச்சரவைக்கு அறியத்தந்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன கொழும்பில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார். அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளித்த அமைச்சர் பந்துல குணவர்த்தன, மார்ச் மாதத்தில், அரசாங்கம் எதிர்பார்க்கும் வருமானம் 173 பில்லியன் ரூபா. ஆனால் இது போதுமானதல்ல என்றார்.
பெப். 21 07:59

தேர்தலை ஒத்திவைக்க வேண்டாம்- பேராயர் பகிரங்க அறிவிப்பு

(வவுனியா, ஈழம்) பொது மக்கள் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்துக்கு எதிராக வெறுப்படைந்து வருவதால் உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்காமல் தேர்தலை நடத்தி மக்களின் விருப்பங்களை அறிய வேண்டுமென இலங்கைக் கத்தோலிக்கத் திருச்சபையின் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பு பொரள்ளையில் உள்ள பேராயர் இல்லத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளித்த கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர் சிறில் காமினி பெர்னாண்டோ பேராயர் மல்கம் ரஞ்சித்தின் அறிவிப்பை பகிரங்கப்படுத்தினார்.
பெப். 19 07:06

கம்பன் விழா, தமிழ்த்தேசியத்தை கருவறுக்கும் முயற்சியில்!

(வவுனியா, ஈழம்) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கம்பன் விழா, ஈழத்தமிழர் பண்பாடு, தமிழ் மரபுரிமை மற்றும் ஈழத்தமிழ் சைவப் பண்பாட்டை உணர்த்தி நடத்தப்பட்டதா அல்லது வட இந்திய புனை கதைகளுக்கும் அதன் வழி வந்த பண்பாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுத்து நிகழ்ந்ததா என்பதை விழாவில் பங்குபற்றியோர் புரிந்திருப்பர். "அறிவுடை அமைச்சனாக வள்ளுவ நெறிப்படி நின்றவன் சுமந்திரனா அனுமனா" என்ற தலைப்பில் இடம்பெற்ற விவாதத்தில் ஈழத்தமிழர் தொடர்பாகப் பேராசிரியர் வரதராஜன் ஸ்ரீபிரசாந்தன் மற்றும் ஆசிரியரும், பேச்சாளருமான செல்வவடிவேல் ஆகியோர் இரண்டு சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளனர்.
பெப். 17 20:47

உள்ளூராட்சி சபைத் தேர்தல் செலவுக்குரிய நிதியை வழங்க முடியாதென நிதியமைச்சு அறிவிப்பு

இலங்கைத்தீவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் உள்ளூராட்சி சபைத் தேர்தல் செலவுகளுக்குரிய நிதியை வழங்க முடியாதென நிதி அமைச்சின் செயலாளர், தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை நிதியமைச்சில் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில், நிதியமைச்சின் செயலாளர் நிதியை வழங்க முடியாதெனக் கூறியதாக ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பெப். 15 22:44

உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்கும் நோக்கம் இல்லை- அமைச்சர் பந்துல

(வவுனியா, ஈழம்) உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்கும் நோக்கம் இல்லையென அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். நிதி இல்லை என்பதால் வாக்காளர் அட்டை மற்றும் தேர்தல் செயற்பாடுகளுக்குரிய அச்சுப் பதிப்பு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் தொடர்பாகத் தனியார் இலத்திரனியல் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு புதன்கிழமை கொழும்பில் செய்தியாளர்களிடம் அமைச்சர் பந்துல குணவர்த்தன இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பெப். 14 16:16

தமிழ் அரசியல் கைதிகள் நால்வர் பிணையில் விடுதலை

(வவுனியா, ஈழம்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் நால்வருக்கு பதின் நான்கு வருடங்களின் பின்னர் திங்கட்கிழமை பிணை வழங்கப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு ஒக்டோபர் 18ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் கடற்படையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்து, 22 பேர் காயமடைந்தமை தொடர்பாக இந்த நான்கு கைதிகளுக்கும் எதிராக இலங்கைக் குற்றப் புலனாய்வுத்துறையினரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது சம்பவம் தொடர்பாகப் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இருபத்து மூன்று குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நான்கு பிரதிவாதிகளுக்கு எதிராக 2010 ஆம் ஆண்டு காலி மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
பெப். 12 15:19

பிக்குமாரின் இந்திய எதிர்ப்பும் இலங்கை ஒற்றையாட்சியும்

(வவுனியா, ஈழம்) 2002 இல் சமாதானப் பேச்சு ஆரம்பிக்கப்பட்ட காலத்தில், "மாற்றுக் கருத்து" என்பதை அரசாங்கத்தின் பக்கமாக அல்லது இலங்கை அரசு என்ற கட்டமைப்புடன் ஒத்துப் போகக்கூடிய முறையில், சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள் மூலமாக வடக்குக் கிழக்கில் புகுத்திய அமெரிக்க - இந்திய அரசுகள், 2009 இற்குப் பின்னரான சூழலில் நல்லிணக்கம், நடைமுறைச் சாத்தியமானதைச் சிந்தித்தல், மனித உரிமைப் பாதுகாப்பு போன்ற சொல்லாடல்களைப் புகுத்தி தமிழ்த்தேசியக் கோட்பாட்டைச் சிதைக்க முற்பட்டு வருகின்றனர் என்பது பட்டவர்த்தனம். தமிழ்த்தேசியக் கட்சிகளும் மக்களில் சிலரும் குறிப்பாகக் கிழக்கு மாகாணத்தில் பலரும் அந்தக் கருத்துக்களை அதிகமாகவே உள்வாங்கிவிட்டனர். இருந்தாலும் அந்த அரசியல் பின்னணியின் ஆபத்துக்களை அவர்கள் அறியாதவர்களும் அல்ல.